அரசு பேருந்து இயக்கியதில் 5 கோடி மோசடி ! டாக்டர் கிருஷ்ணசாமி பரபர குற்றச்சாட்டு !
இம்மானுவேல் சேகரன் நினைவிடத்திற்கு அரசு பேருந்து மூலமாக பொதுமக்களை அழைத்து சென்றதில், கூடுதல் கட்டணம் வசூலித்து 5 கோடி ரூபாய் அளவிற்கு முறைகேடு நடந்துள்ளது குறித்து அரசு விசாரணை நடத்தவேண்டும் இல்லையெனில், நீதிமன்றத்திற்கு செல்வோம் என்பதாக டாக்டர் கிருஷ்ணசாமி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார்.
மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார்.
” பரமக்குடியில் உள்ள தியாகி இம்மானுவேல் சேகரன் நினைவிடத்திற்கு மரியாதை செலுத்த சென்ற பொதுமக்களை அழைத்து செல்வதற்கான அரசு பேருந்துகள் அமைப்பதில் 5 மிகப்பெரிய ஊழல் நடைபெற்று வருகிறது. அரசு பேருந்துகளுக்கு கடந்த ஆண்டு வரை 1 கி.மீக்கு ரூ40 மட்டுமே வசூலிக்கப்பட்டது. ஆனால், இந்த ஆண்டு கட்டணம் உயர்த்தப்பட்டு அதில் மிகப்பெரிய அளவிற்கு முறைகேடு நடந்துள்ளது.

கிராமங்களில் இருந்து 200 கி.மீ. தூரத்திற்கு 12 ஆயிரம் வசூலிக்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டு 26 ஆயிரம் ரூபாய் முதல் 30 ஆயிரம் ரூபாய் உயர்த்தியிருக்கிறார்கள். இதற்கான ரசீதுகளும் வழங்கப்படவில்லை. மேலும், அரசு பேருந்துகளில் கடந்த ஆண்டு வரை ஓட்டுனர் நடத்துனர் அனுமதிக்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டு நடத்துனர் இல்லை. வாடகைக்கு பிடிக்கப்பட்ட பேருந்துகளுக்கு பயண சீட்டுகள் கட்டாக கொடுத்து விடுகிறார்கள். ஆனால், அதனை கூட மீண்டும் எடுத்து சென்று விட்டார்கள்.
இம்மானுவேல் சேகரன் நினைவிடத்திற்கு அரசு பேருந்து அமர்த்தப்பட்டு வாடகைக்கு விடப்பட்டதில், சுமார் 5 கோடி வரை மோசடி நடந்துள்ளது. இது குறித்து தமிழகம் முழுவதும் எத்தனை பேருந்து இயக்கப்பட்டது. ஏன் ரசீது கொடுக்கப்படவில்லை? தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை விளக்கம் தர வேண்டும். இல்லையெனில், போக்குவரத்து மண்டல அலுவலர்கள் மீது நீதிமன்றங்களில் வழக்கு தொடரப்படும் என்றார். மேலும், ”பரமக்குடி சென்ற பேருந்துகள் நான் ஸ்டாப்பாக சென்றது. பேருந்துகளில் சென்ற மக்களுக்கு சிறுநீர் கழிக்கவோ, உணவு , தேநீர் அருந்தவோ அனுமதிக்கவில்லை. பரமக்குடி செல்லும் வழி நெடுகிலும் உள்ள உணவகங்கள் அடைக்கப்பட்டன” என்றார்.
மதுரை, சிவகங்கை, இராமநாதபுரம் உள்ளிட்ட இடங்களில் டீக்கடைகள் கூட இயங்க காவல்துறை அனுமதிக்கவில்லை. இது போன்ற விழாக்களில் தமிழக அரசு மனிதநேயத்துடன் நடந்து கொள்ள வேண்டும். ஜனவரி 7 ஆம் மதுரையில் புதிய தமிழகம் கட்சியின் மாநில மாநாடு நடைபெறுகிறது. புதிய தமிழகம் கட்சியின் சார்பில் கிராமங்கள் தோறும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளோம் என்றார். தமிழகத்தில் 100 நாட்கள் வேலை வாய்ப்பு திட்டத்தில் முறைகேடு நடைபெற்று வருகிறது. கோவில்களில் உள்ள நகைகளை உருக்கியது தொடர்பான தகவல்கள் இல்லை. உருக்க கூடிய தங்கத்தில் உள்ள விலையுயர்ந்த வைர, முத்து பவள கற்கள் குறித்து இந்து அறநிலையத்துறை வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் 130 கோடி மதிப்பில் கட்டுமான பணியில் மிகப்பெரிய ஊழல் நடைபெறுகிறது. இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் மட்டுமே அறங்காவலராக உள்ளனர். முடிகாணிக்கை செலுத்தியதில் மட்டும் 7 கோடி ரூபாய் வரை முறைகேடு நடந்துள்ளதாக தெரிகிறது.
கூட்டணி குறித்த கேள்விக்கு … ”தமிழகத்தில் திராவிடம் நிலைத்து நிற்கும் என்பதற்கு எந்தவித உத்திரவாதமும் இல்லை. கள நிலவரங்களுக்கு ஏற்ப முடிவு எடுப்போம். நாங்கள் திறந்த மனதோடு இருக்கிறோம். தமிழகத்தில் கூட்டணி ஆட்சிதான் அமைய வேண்டும். விஜய் அதனை முன்னெடுப்பார் என்றால் கூட்டணி குறித்து மாநாட்டிற்கு பின்பு முடிவெடுக்கப்படும். விஜய் கூட்டணி்ஆட்சி என்றால் அது குறித்து பரீசிலிப்போம்” என்றார்.
மதுரை விமான நிலைய பெயர் குறித்து ஈபிஎஸ் பேசியது தொடர்பான கேள்விக்கு .. “மதுரை விமான நிலையத்திற்கு பெயர் வைக்கும் விவகாரத்தை மீண்டும் பேசுவது அவசியமற்றது. 1998 ஆம் ஆண்டு ஏற்கனவே எடுத்த முடிவுபடி பொதுவான பெயர் வைக்க வேண்டும். 1998 ஆம் ஆண்டு அரசு எடுத்த முடிவுபடி தமிழகத்தில் உள்ள சாதி தலைவர்களின் சிலைகளை அகற்றி ஒரே இடத்தில் வைக்க வேண்டும். விமான நிலையங்களுக்கு பெயர் வைக்கும் கலாச்சாரம் மீண்டும் சமூகத்தை கீழே அழைத்து செல்லும். இது பிளவுபடுத்தும் வாக்கு அரசியல் தான். தமிழ்நாட்டில் வேலையில்லா திண்டாட்டம், கிராம மக்கள் பசிபட்டினியோடு உள்ளனர். அது குறித்து பேச வேண்டும்” என்றார்.
— ஷாகுல், படங்கள் : ஆனந்தன்
Comments are closed, but trackbacks and pingbacks are open.