இந்தியாவின் பெருமிதம் இராதாகிருஷ்ணன் நாயர் – கண்ணெதிரே போதிமரங்கள் – 2
“மனிதர்களாகிய நாம், நமது சுயநலங்களுக்காக
ஏதும் அறியாத இந்த சிற்றுயிர்களையும் இயற்கையையும்
சிதைப்பது என்ன நியாயம்? – ராதாகிருஷ்ணன் நாயர்
ஒரு நேபாளத்தின் தலைநகர் காட்மண்டுவில் இந்தியாவின் பெருமிதம் என்ற பொருள் தரும் “க்ளோரி ஆஃப் இந்தியா” Glory of India என்ற விருது ராதாகிருஷ்ணன். என்பவருக்கு அறிவிக்கப்படடுள்ளது. குஜராத்தில் நானூற்று ஐம்பது பேர் பணியாற்றும் ஒரு நிறுவனத்தை நடத்தி வருகிறார் இவர். ஆனால் இவருக்கு தொழிலதிபருக்கான விருது தரப்படவில்லை. இவர் செய்த மற்றொரு மகத்தான பணிக்காகவே இந்த விருது தரப்பட்டுள்ளது. இந்தியாவின் பெருமிதத்தைப் பெற்றுள்ளார்.
இந்தியாவின் பெருமிதம் என்று சொல்லப்படும் அளவுக்கு அப்படி என்ன செய்துவிட்டார் இவர்?

“நினைக்க நினைக்க நெஞ்சூரும் அனுபவம், விண்மீனுக்குத் தூண்டில் போடும் கிளைகள், சிரிப்பை ஊற்றி வைத்த இலைகள், உயிர் ஒழுகும் மலர்கள், மனிதன் தரா ஞானம் மரம் தரும் எனக்கு” என்று மரத்தின் பெருமையை சொல்லி சொல்லி ஆனந்தப்படுகிறார் கவிப்பேரரசு வைரமுத்து.
மரம் வளர்ப்பைப் பற்றி பலரும் பல வகையில் பேசுகின்றனர். ஆண்டுதோறும் ஒரே இடத்தில் மரம் நடு விழா நடக்கும் கூத்துக்களும் பல இடங்களில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. ஆனால் அப்படி இல்லாது நினைத்ததை செய்து முடித்தே தீர வேண்டுமென்கிற வேட்கையுடன் நின்று சாதித்துக் காட்டிய மகத்தான ஆளுமைதான் இராதாகிருஷ்ணன்.
ஆம் வியப்பிலும் வியப்பு. ஏழு மாநிலங்களில் ஆறு லட்சம் மரங்களை நட்டு நாற்பது காடுகளை உருவாக்கியிருக்கிறார் இந்த ஒற்றை மனிதர். இராதாகிருஷ்ணன் பிறந்ததும் சிறு வயது பள்ளிப் பருவமும் கேரளாவின் காசர்கோடு என்னும் பகுதியில்தான். குடும்பத்தின் பிரச்சனைகள் பிழைப்புக்காக மங்களுருவில் குடி பெயர வைத்தது.
அங்கிருந்த ரப்பர் தோட்டத்தில் பணி செய்து கொண்டு அந்தத் தோட்டத்துக்கு நடுவிலெயே ஒரு சிறிய வீட்டைக் கட்டிக்கொண்டு வாழ்ந்தனர் இவரது குடும்பத்தினர். படிப்பில் நாட்டமில்லாமல் வளர்ந்த இவர் 12 ஆம் வகுப்பில் தேர்ச்சியடையவும் இல்லை. திரும்பத்திரும்ப பணம் கட்டி இவரை படிக்க வைக்க வசதியற்ற இவர் குடும்பம் அங்கிருந்து மும்பைக்கு புலம்பெயர்ந்தது.

மும்பை சென்ற ராதாகிருஷ்ணன் தனக்கு ஏதேனும் வேலை கிடைக்குமா எனத் தேடத் தொடங்கினார். உயிர் வாழ்ந்தாக வேண்டுமே என்ற ஒற்றை நோக்கத்தில் துணிக்கடை, உணவு விடுதிகள், மருந்தகங்கள் எனப் பார்க்காத வெலை இல்லை. இறுதியில் துணிக்கடைத் தொழிலில் ராதாகிருஷ்ணன் காட்டிய திறமை அவரை அந்நிறுவனத்தின் மேலாளர் பொறுப்புக்கு இவரை உயர்த்தியது. பின்னர், அங்கிருந்து குஜராத்தில் அந்தத் தொழிற்சாலை அமைந்துள்ள உம்பர்காவுன் என்ற கிராமத்துக்கு அனுப்பப்பட்டார். கேரளத்தில் தொடங்கிய இவரது வாழ்க்கை மகாராஷ்டிரா கடந்து குஜராத்தில் வந்து நின்றது.
குஜராத்தின் வல்சாத் மாவட்டத்தில் அமைந்துள்ள கடலோர கிராமம் தான் உம்பர்காவுன். அந்த நிறுவனத்தில் பதினொரு ஆண்டுகள் மேலாளராகப் பணியாற்றினார் ராதாகிருஷ்ணன். அந்தக் காலகட்டத்தில் பழங்குடிகள், மலைவாழ் மக்களின் கல்விக்கு உதவும் பணிகளில் ஈடுபட்ட கேரள சமாஜத் அமைப்புடன் தொடர்பு ஏற்பட்டது. சமாஜத்தின் மூலம் சமூகம் சார்ந்த பணிகளில் ஈடுபடத் தொடங்கினார்.

ஒரு கட்டத்தில் இந்த பொது வாழ்வில் ஈடுபாடு அதிகரிக்க, தன்னுடைய நிறுவன மேலாளர் பணியைத் துறக்க நேரிட்டது. குடும்பச சூழல் நெருக்க கையிலிருந்த கொஞ்ச பணத்தையும், தம் அனுபவத்தையும் மூலதனமாக்க கொண்டு, பௌர்ணிகா எக்ஸ்போர்ட் என்ற நிறுவனத்தைத் தொடங்கினார். சிறிய விதையாகத் தொடங்கிய அந்த நிறுவனம் இன்று மிகப்பெரிய ஆலமரமாக வளர்;ந்து நிற்கிறது. சமூக சேவையில் மும்முரமானதால் இருந்த வேலையை இழந்த இவர். அந்தப் பணியில் ஈடுபடுவது குறித்து சற்று கலக்கத்துடன் இருந்தார். அந்த வேளையில் தான் அந்த நிகழ்வு நடந்தது.
குஜராத்தில் நெடுஞ்சாலைகள் அமைக்கும் பணி மும்முரமாக நடந்துகொண்டிருந்தது. அதையொட்டி நூற்றுக்கும் மேற்பட்ட பெரும் மரங்கள் வெட்டப்பட்டன. அந்த மரத்திலிருந்த கூட்டிலிருந்த சின்னஞ்சிறு பறவையொன்று கீழே விழுந்து உடல் சிதறி இறந்து கிடப்பது அவர் கண்ணில் பட்டது. அந்தக் காட்சி அவரை பெரிதும் பாதித்தது. பல இரவுகள் அவரை தூங்கவிடாமல் செய்தது.

“மனிதர்களாகிய நாம், நமது சுயநலங்களுக்காக ஏதும் அறியாத இந்த சிற்றுயிர்களையும் இயற்கையையும் சிதைப்பது என்ன நியாயம்?” என்று தனக்குள்ளே பலமுறை கேட்டுக்கொண்டார். அதைப் பற்றியே நண்பர்களிடம் பேசிக் கொண்டிருந்தார். இப்படி வருந்துவதை விட, புலம்பிக் கொண்டிருப்பதை விட ஏதாவது செய்ய வெண்டுமென தீர்க்கமாக முடிவெடுத்தார். என்னிடம் இருக்கும் காசுக்கு சிறு இடம் ஒன்றை வாங்கி நான் ஏன் ஒரு காட்டை உருவாக்கக் கூடாது என்று கேட்டார். அவருடைய நண்பர்களும், உறவினர்களும் அதிர்ந்து போனார்கள்.
ஆனால் அவர் விடவில்லை. தன் நண்பர் ஒருவருடன் இணைந்து ஒரு ஏக்கர் நிலத்தை வாங்கி அதில் செயற்கைக் காடுகளை உருவாக்குவது என எடுத்த முடிவில் உறுதிபட நின்றார். செயற்கைக் காடுகளை உருவாக்குவதில் பெரும் வெற்றி பெற்றிருந்த அகிரா மியவாகி என்ற ஜப்பானிய நிபுணரைத் தொடர்பு கொண்டார். இவருடைய ஆர்வத்தைக் கண்ட அவர் நேரடியாக இவர் நிலத்துக்கு வருகை தந்து, பல நுணுக்கங்களைச் சொல்லிக் கொடுத்தார். அதன் தொடர்ச்சியாக இவரது நிலத்தில் ஆயிரத்து ஐந்நூறு மரங்களை நடடனர். ஓரிரு வருடங்களில் அது ஒரு வனமாகி பூத்துக் குலுங்கியது.

மகாராஷ்ட்ராவில் வேதிப் பொருள் நிறுவனம் ஒன்று இவரை அணுகி அப்படி ஒரு வனத்தை உருவாக்கித் தரும்படி கேட்டுக்கொண்டது. 2016ம் ஆண்டில் முப்பத்தெட்டு வகையான முப்பத்திரண்டாயிரம் மரக் கன்றுகளை நட்டார். அவை இன்று வனமாக மாறி ஆயிரக்கணக்கான பறவைகளின் தாய்மடியாகச் செழித்து நிற்கிறது. இதற்குப் பிறகு ஒவ்வொரு மாநிலத்திலிருந்தும் இவருக்கு அழைப்புகள் வரத் தொடங்கின.
ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா, ராஜஸ்தான், குஜராத், மகாராஷ்ட்ரா போன்ற மாநிலங்கள் இவரை அழைத்தன. சட்டீஸ்கர் அரசு ஒரு லட்சம் மரங்களாலான ஒரு வனத்தை உருவாக்க இவரிடம் கேட்டது. வங்காளத்தின் துர்க்காபூரிலும் இவரால் ஒரு வனம் உருவாகியுள்ளது. மகாராஷ்ட்ரா அரசு இவரின் சேவையைப் பாராட்டி வசுந்தரா விருது கொடுத்து பாராட்டியது..

புல்வாமா தீவிரவாதத் தாக்குதலில் பலியான ராணுவ வீரர்களின் நினைவாக நாற்பது வகையான நாற்பதாயிரம் மரங்கள் கொண்ட வனம் ஒன்றை உருவாக்கும் திட்டம்; ஒன்று இவருக்குக் கொடுக்கப்பட்டுள்ளது. இதை புல்வாமா சாஹித்வன் என்று அழைக்கிறார்கள். க்ளோரி ஆஃப் இந்தியா விருது தனக்கு வழங்கப்பட்டதை விட புல்வாமா சாஹித்வன் தனக்குக் கிடைத்த மிகப் பெரிய கௌரவம் என்று தன்னடக்கமாகக் கூறுகிறார் இராதாகிருஷ்ணன்.
எடுத்த செயலில் நாம் கொள்ளும் உறுதி நம்மை நமக்கு அடையாளம் காட்டும். அந்த செயல் நமது சூழலை மையமிட்டதாக இருந்தால் நம்மை உலகிற்கே அடையாளம் காட்டும் என்பதே ராதாகிருஷ்ணன் அவர்கள் நமக்குத் தரும் வாழ்க்கைப்பாடம். அப்பாடத்தை உணர்ந்து, அவர் போல வாழவும், உயரவும் கற்றுக்கொள்வோம். இப்போது நாம் எல்லோருமே உரக்க சொல்லலாம் உண்மையிலேயே ராதாகிருஷ்ணன் இந்தியாவின் பெருமிதம்தான்.
இதையும் படியுங்கள்..
கண்ணெதிரே போதிமரங்கள் – 1 அறியவேண்டிய ஆளுமைகள் – தேஷ்ரத் மான்ஜ்ஹி
கட்டுரையாளர்
முனைவர் ஜா.சலேத்
திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரித் தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர்