எளிய முன்னெடுப்புகளால் சிறந்த மாற்றங்கள் சாத்தியம்
மாவட்ட புத்தகக் கண்காட்சிகளில் நான் ஆற்றும் உரைகளின் லிங்க் வேண்டும் என நிறைய வாசகர்கள் கேட்கிறார்கள். ஆனால் அது எனக்கு கிடைப்பது அவ்வளவு எளிதல்ல.
எல்லாக் கண்காட்சிகளிலும் உரைகள் வீடியோவில் பதிவு செய்யப்படுகின்றன. ஆனால் அதற்குப் பிறகு அவை என்னவாகின்றன என்று கண்டுபிடிக்க முடியவில்லை. அவை எங்கோ ரகசியக் கோப்புகளாகிவிடுகின்றன. அல்லது அவற்றை கிணற்றில் போட்டுவிடுவார்கள் போலும்.
சில மாவட்டங்களில் அந்த உரைகள் மாவட்ட ஆட்சித் தலைவரின் புத்தக கண்காட்சி சிறப்பு வலைத்தளங்களில் நேரடி ஒளிபரப்புச் செய்யப்பட்டு பதிவேற்றப்பட்டுவிடுகின்றன. அவற்றை பகிர்வது எளிதாக உள்ளது.
பல மாவட்டங்களில் இது நடப்பதில்லை.
ராமநாதபுரத்தில் எனது உரையை மூன்று பேர் ஒளிப்பதிவு செய்தார்கள். அதை பெறுவதற்காகப் போராடி பலனின்றி விட்டு விட்டேன். தென்காசியில் லைவ் செய்தார்கள். டவுன்லோடு செய்ய முடியவில்லை எரர் கோட் என்று வருகிறது.
தகவல் தொழில்நுட்பம் இவ்வளவு பெருகி பரவலாக இருக்கும் காலத்தில் இதெல்லாம் ஏன் நடக்கிறது என்று தெரியவில்லை. நான் மட்டுமல்ல இன்னும் பல சிறந்த பேச்சாளர்களும் சிறந்த இலக்கிய உரைகளை வழங்குகிறார்கள். அது புத்தக கண்காட்சியைத் தாண்டி மக்கள் கேட்கத் தகுதியானவை. பெரும் முயற்சியுடனும் பணச்செலவுடனும் ஏற்பாடு செய்யப்படும் மாவட்ட புத்தக கண்காட்சி நிகழ்வுகள் பரவலாகச் சென்றடைய வேண்டும். அதுவே அதன் உண்மையான பயனாகவும் இருக்கும்.
என்னைப் போன்றவர்கள் பெரும் தயாரிப்புடனும் சிரமங்களுடனும் ஊர் ஊராகப் போய் உரைகள் நிகழ்த்துவது நவீன சிந்தனைகள், இலக்கிய ரசனைகள் மக்களிடம் போய் சேர வேண்டும் என்பதற்காகவே. புத்தகக் கண்காட்சி ஏற்பாட்டாளர்கள் தகுதி வாய்ந்த நபர்களை அல்லது ஊடகங்களை அப்பணியில் ஈடுபடுத்த வேண்டும். பபாஸி ஒரு சிறப்பு யூ ட்யூப் சேனல் உருவாக்கி இந்த உரைகளை தொகுக்கலாம்.
எளிய முன்னெடுப்புகளால் சிறந்த மாற்றங்கள் சாத்தியம்.
— மனுஷ்ய புத்திரன்








Comments are closed, but trackbacks and pingbacks are open.