மன ஊக்கம் இல்லாத மாணவர்களுக்கான உற்சாக டானிக் – ஹரிஹரன் !
‘நான் மாறுபட்டவன்…. சாதிக்கப் பிறந்தவன்….’
“எனது கண்களில் பார்வை குறைபாடு இருக்கிறது என்று உணரும் வயது வந்தபோது, நொறுங்கி போனேன். மத்தவங்க செய்த கேலி, இன்னும் என்னை முடக்கப் பார்த்தது. ஆனால், ‘நான் மாறுபட்டவன். சாதிக்கப் பிறந்தவன்’ என்று மனதுக்குள் வைராக்கியம், தன்னம்பிக்கையை அதிகப்படுத்திக்கொண்டு படிக்க ஆரம்பித்தேன். பெற்றோர்கள், ஆசிரியர்கள், நண்பர்கள் கொடுத்த தொடர் ஊக்கம், இவ்வருட 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் என்னை பள்ளி அளவில் முதல் மாணவராக மதிப்பெண் எடுக்க வைத்திருக்கு” என்று வெற்றிப்பெற்ற உற்சாகத்தோடு பேசினார் ஹரிஹரன்.

பள்ளி அளவில் சாதிப்பது பெரிய விஷயமா?
திருச்சி, உறையூர், மேல மின்னப்பன் தெருவைச் சேர்ந்த ராஜேந்திரன் & சந்திரா தம்பதியின் இளைய மகன் தான் ஹரிஹரன். இடது கண் பார்வை முற்றிலும் தெரியாமல் போக, வலது கண்ணிலும் 45 சதவிகித பார்வைத்திறனோடு இருக்கும் ஹரிஹரன், எந்த பாதிப்பும் இல்லாதவர்கள் படிக்கும் பள்ளியில் படித்து, 12&ம் வகுப்பு பொதுத்தேர்வில் 561 மார்க் பெற்று பள்ளி அளவில் முதலிடம் வந்திருக்கிறார்.
‘இவன் வளர்ந்தாலும் பார்வை நரம்பு வளராது’
மகன் குறித்து ஹரிஹரனின் தாயான சந்திரா பேசுகையில்... எனக்கு ஸ்ரீராம், ஹரிஹரன் என்று இரண்டு பசங்க. ஹரிஹரனுக்கு மட்டும் பிறந்ததில் இருந்தே கண்களில் பிரச்னை. பிறந்தபோதே கருவிழிகள் மட்டும் சுத்திக்கிட்டே இருந்துச்சு. மருத்துவர்கள்கிட்ட காண்பிச்சப்ப, ‘கண்களில் பார்வை நரம்பு வளர்வதில் பிரச்னை’ என்று சொன்னாங்க. இவனும் வளர வளர நரம்பு வளர்ந்து பிரச்னை சரியாகிவிடும்னு நினைச்சோம். ஆனால், சரியாகலை. என்ன பண்றதுன்னே தெரியலை.

அவனை எல்.கே.ஜி சேர்த்தபோதே அவனுக்கு பவர் கண்ணாடி அணிவித்துப் பார்த்தும், பார்வை திறனில் தெளிவு கிடைக்கவில்லை. கொஞ்சம் வளர்ந்த பிறகும் மருத்துவர்கள், ‘இவன் வளர்ந்தாலும் பார்வை நரம்பு வளராது’ என்று கைவிரிச்சுட்டாங்க. இதனால் பலரும் ஹரிஹரனை பார்வையற்ற மானவர்கள் படிக்கும் பள்ளியில் சேர்த்துப் படிக்க வைக்கச் சொன்னாங்க.
ஆனால், நானும், எனது கணவரும், ‘அது அவன் தன்னம்பிக்கையைப் பாதிக்கும். நார்மல் பசங்க படிக்கும் பள்ளியிலேயே இவனைச் சேர்த்து படிக்க வைப்போம்‘ என்று முடிவெடுத்து, ஒரு மெட்ரிகுலேஷன் பள்ளியில் சேர்த்து பத்தாவது வரைக்கும் படிக்க வைத்தோம்.

கண் தெரியாமல் வாழ்க்கையை எப்படி…
எல்கேஜி முதல் 5ம் வகுப்பு வரை படிக்கவைக்கும்போது, அவனது கண்ணில் போர்டு தெரியவில்லை. படிப்பது சிரமமாயிருக்கு, கண் தெரியாமல் வாழ்க்கையை எப்படி நகர்த்தப்போகிறேன் என வருத்தமுடன் அடிக்கடி சொல்வான். நானே அவனுக்கு நம்பிக்கையூட்டி வீட்டுப்பாடங்களை பொறுமையாக சொல்லிக்கொடுத்து தேற்றினேன். அதை காதில் வாங்கி மனப்பாடம் செய்ய ஆரம்பித்தான். இருந்தாலும், சில பாடங்களை அவனால் புரிந்துக்கொள்ள முடியவில்லை. அதனால், ஆசிரியர்களும் இவனுக்கு தனிக்கவனம் எடுத்து பாடம் நடந்தினாங்க. இருந்தாலும், ஆறாம் வகுப்பு வரை ரேங்கெல்லாம் வராத அளவுக்கு தான் அவனது படிப்பு இருந்துச்சு.
இன்னொரு பக்கம், அவனை தொடர்ந்து தனியார், அரசு மருத்துவமனைகளுக்கு அழைத்துப் போனோம். ஆனால் மருத்துவர்கள், ‘இடதுபக்கம் கண் 100 சதவிகிதமும், வலது கண் 55 சதவிகிதமும் பார்வைத் திறனை இழந்துவிட்டன’ என்று சொல்லவும், நாங்கள் கலங்கி நின்றோம்.

‘இனி புலம்பி ஒண்ணாவப் போவது இல்லை…
ஆனால் ஹரிஹரன், ‘இனி புலம்பி ஒண்ணாவப் போவது இல்லை. எனக்கு பார்வைத் திறன் போனால் என்ன… கடின உழைப்பைப் போட்டு, என்னோட லட்சியத்துல ஃபோகஸாக இருக்கப் போகிறேன்’ என்று சொல்லவும், எங்களுக்கு பெரிய தெம்பு வந்துச்சு. அதன்பிறகு, கடுமையாக படிக்க ஆரம்பித்தான். பத்தாம் வகுப்பில் பத்தாவது ரேங்க் தான் வந்தான். உறையூர் கி.ஆ.பெ.விஸ்வநாதம் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியில் பதினோறாம் வகுப்பில் காமர்ஸ் க்ரூபில் இவனைச் சேர்த்தோம். தனது குறைகளை நிறைவாக்கி, பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் பள்ளியிலேயே முதல் இடம் வந்து எங்களை பெருமைப்பட வைத்துவிட்டான்” என்றார் நெக்குருகி போய்!.
ஆரம்பத்தில் கேலி…கிண்டல்…
அடுத்து பேசிய ஹரிஹரன், “எனக்கு உள்ள பிரச்னையைப் பற்றி நான் புரிந்துக்கொள்ளவே எனக்கு பத்து வயசு ஆச்சு. முதலில் கலங்கி நின்றேன். என் பள்ளி நண்பர்கள், ஆரம்பத்தில் கேலி, கிண்டல் செஞ்சாங்க. ஆனால், தொடர்ந்து அவர்களோடு சகஜமாக பழகவும், என்னை புரிஞ்சுக்கிட்டாங்க. முதல் பெஞ்சில் உட்காரச் சொன்னாலும், ஆசிரியர்கள் போர்டில் எழுதிப்போடுவதை உத்துப் பார்த்தும் தெரியாத சூழல். பக்கத்துல உள்ள மாணவர்களிடம் பார்த்து எழுதிக்கொள்வேன். அதோடு, ஆசிரியர்கள் சொல்லிக்கொண்டே பாடம் நடத்துவதால், அவர்கள் சொல்லும்போதே பாடங்களை புரிந்துகொள்ள முயற்சித்தேன். மெல்ல மெல்ல அந்த முயற்சி கைகூடி வந்துச்சு.

கவனம் சிதறாமல் குறிக்கோளில் ஃபோகஸ்
அதேபோல், வீட்டிலோ, பள்ளியிலோ கேரம் போர்டு, செஸ் விளையாட்டுகளை மட்டுமே விளையாடுவேன். மெல்ல மெல்ல கவனம் சிதறாமல் குறிக்கோளில் ஃபோகஸ் செய்யும் திறன் வளர்ந்துச்சு. தினமும் மாலை இரண்டு மணி நேரமும், காலையில் ஒரு மணி நேரமும் வீட்டில் படித்தேன். பன்னிரெண்டாம் வகுப்பில் எல்லா தேர்வுகளிலும் நான் என் க்ரூப்பில் முதல் ரேங் எடுக்க ஆரம்பித்தேன்.
‘நீ சாதிக்கப் பிறந்தவன். கொஞ்சம் முயன்றால்…
இதனால், ஆசிரியர்கள் என்னைத் தட்டிக் கொடுத்ததோடு, ‘நீ சாதிக்கப் பிறந்தவன். கொஞ்சம் முயன்றால் மாவட்ட அளவில் கூட உன்னால் வரமுடியும்‘ என்று ஊக்கப்படுத்தினாங்க. அதனால், எல்லா ஆசிரியர்கள், பெற்றோர், நண்பர்கள் கொடுத்த இந்த தன்னம்பிக்கை வார்த்தைகளை பூஸ்ட்அப்பாக எடுத்துக் கொண்டு, முழு கவனத்தோடு, என் குறைகளை மறந்து படிக்க ஆரம்பித்தேன்.
தற்கொலை ஏன்…?
மொத்தமாக 561 மதிப்பெண் பெற்று, என் பள்ளியிலேயே முதல் மாணவராக தேர்ச்சி பெற்றுள்ளேன். எனக்கு இருக்கும் குறைகளை பிரச்னையாக பார்த்திருந்தால், எங்கோ மூலையில் முடங்கியிருப்பேன். ஆனால், குறைகளை நிறைகளாக்கும் சூட்சமத்தைக் கற்றுக்கொண்டு முயற்சி செய்ததால், என்னால் சாதிக்க முடிந்திருக்கிறது. ஆனால், ‘மார்க் குறைவு; தேர்ச்சி பெறவில்லை’ என்ற அற்ப காரணங்களுக்காக மாணவர்கள் சிலர் தற்கொலை வரை போவது வேதனையாக இருக்கு.
பார்வை குறைபாடுக்கு காரணம்…
இதுகுறித்து அவரது தந்தை ராஜேந்திரன் பேசுகையில்…எனது மகனை சிறுவயதில் கண் டாக்டர்களிடம் காண்பித்து கண்பார்வை குறைபாடு குறித்த காரணம் கேட்டேன். அவர்கள் சொன்னது என்னவென்றால்… உறவு முறையில் திருமணம் செய்தாலோ, கர்ப்ப காலத்தில் உடல்நிலை சரியில்லாதபோது கவனிக்காமல் விட்டாலோ, அல்லது கணவர், மனைவி பரம்பரை வகையில் கண்பார்வை குறை இருந்தாலும் இப்பிரச்னை வரும். மேலும் சில காரணங்களும் உண்டு என்றார்கள். புதுசா கல்யாணம் ஆனவங்க குழந்தை பிறப்பு விஷயத்தில் ஜாக்கிரதையாக இருக்கணும். உலகில் பல குழந்தைங்க இரண்டு பார்வையும் இல்லாமல் இருக்கும்போது, எனது மகனுக்கு கொஞ்சம் பார்வையாவது கொடுத்ததற்கு இறைவனுக்கு நன்றிதான் சொல்லணும்.

ஹோட்டல் துறையில் சாதிக்கணும்…
‘மனத்தடை தான் இருக்க கூடாது. நான் அதுமாதிரியான மாணவர்களுக்கு உதாரணமாக இருக்க விரும்புகிறேன். அடுத்து, வீட்டில் அம்மாவுக்கு சமையலில் ஒத்தாசை பண்ணியதால், சமையல் கலையில் ஆர்வம் வந்துச்சு. அதனால், ஹோட்டல் மேனேஜ்மென்ட் கோர்ஸ் படிக்கப் போகிறேன்”, பீஸ்தான் அதிகமாயிருக்கு… எனது தந்தை எப்படி சமாளிப்பார்னு தெரியல.. என்றார்.
மாற்றி யோசிக்கும் ஹரிஹரனின் வார்த்தைகள், மன ஊக்கம் இல்லாத மாணவர்களுக்கான உற்சாக டானிக்! தொடர்புக்கு : 99940 11968
“முதல் பெஞ்சில் உட்காரச் சொன்னாலும், ஆசிரியர்கள் போர்டில் எழுதிப்போடுவதை உத்துப் பார்த்தும் தெரியாத சூழல். பக்கத்துல உள்ள மாணவர்களிடம் பார்த்து எழுதிக் கொள்வேன்” ‘மார்க் குறைவு; தேர்ச்சி பெறவில்லை’ என்ற அற்ப காரணங்களுக்காக மாணவர்கள் சிலர் தற்கொலை வரை போவது வேதனையாக இருக்கு”
மாணவன் ஹரிகரன் தொடர்பு எண் : 99940 11968