பவன் கல்யாணின் சனாதன ஆட்டம்! ‘ஹரிகர வீரமல்லு’ எடுபடுமா? அடிவாங்குமா?
தமிழில் பல ஹிட் படங்களையும் சில தோல்விப்படங்களையும் கொடுத்து, பல கோடிகள் கடன்பட்டு ஆந்திராவிலேயே செட்டிலாகிவிட்டவர் சூர்யா மூவிஸ் ஏ.எம்.ரத்னம். இப்போது ‘மெகா சூர்யா மூவிஸ்’ என்ற பேனர் மூலம் தெலுங்கு சினிமாவின் பவர் ஸ்டாரும் துணை முதல்வருமான பவன் கல்யாணை வைத்து ‘ஹரிகர வீரமல்லு’ என்ற படத்தின் முதல் பாகத்தை தயாரித்துள்ளார். ஐந்து ஆண்டுகள் தயாரிப்பில் இருந்து பல கோடிகளை செலவிட்டுள்ள ரத்னத்தின் மகன் ஜோதிகிருஷ்ணா தான் படத்தின் டைரக்டர். வரும் ஜூன் 12—ஆம் தேதி ரிலீசாகிறது ‘ஹரிகர வீரமல்லு’.
பவன் கல்யாணின் ஜோடியாக நிதி அகர்வால், மற்ற கேரக்டர்களில் சத்யராஜ், நாசர், தெலுங்கு நடிகர்கள் சிலர் நடித்துள்ளனர். இசை : எம்.எம்.கீரவாணி, ஒளிப்பதிவு : மனோஜ் பரமஹம்சா, கதை –வசனம் : பூபதி ராஜா, நடனம்: ஷோபி பால்ராஜ், கிரியேட்டிவ் புரொடியூசர் : தோட்டா தரணி.
படத்தின் மூன்று பாடல்கள் ஏற்கனவே ஆந்திராவில் வெளியான நிலையில் நான்காவது பாடலான ”டாரா…டாரா..” பாடல் வெளியீட்டு விழா சென்னையில் மே.28—ஆம் தேதி காலை நடந்தது. விழாவில் தயாரிப்பாளர் ரத்னம், டைரக்டர் ஜோதி கிருஷ்ணா, ஹீரோயின் நிதி அகர்வால், சத்யராஜ், நாசர், எம்.எம்.கீரவாணி, ஷோபி பால்ராஜ் ஆகியோர் கலந்து கொண்டு பட அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசிய டைரக்டர் கே.எஸ்.ரவிக்குமார், “ ஏ.எம்.ரத்னம் மீண்டும் சினிமாவில் வைரமாக ஜொலிப்பார்.”என்றார்.
ஆனால் படத்தின் ஹீரோவும் சனாதன வெறியரும் ஆந்திர துணைமுதல்வருமான பவன் கல்யாண் மட்டும் ஆப்செண்டாகிவிட்டார். இரண்டு நாட்களுக்கு முன்பு தான் சென்னையில் பி.ஜே.பி.யினர் ஏற்பாடு செய்திருந்த ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ கருத்தரங்கில் வீர[!?] உரையாற்றினார். இப்போது அவர் ஹீரோவாக நடித்த படத்தின் விழாவுக்கே வராமல் பம்மிவிட்டார். அது ஏன்? ஏன்னா ‘ஹரிகர வீரமல்லு’ படமே சனாதனத்தை தூக்கிப்பிடிக்கும் சங்கிப்படம். இதை நாம் சொல்லவில்லை. படத்தின் டைரக்டரும் தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னத்தின் மகனுமான ஜோதிகிருஷ்ணா இந்த பாடல் ரிலீஸ் விழாவில் சொன்னது தான். ஒளரசிங்கசீப் மன்னன் எப்படியெல்லாம் நமது பண்பாட்டுச் சின்னங்களை அழித்தான் என்பதையும் அந்தப் பண்பாட்டை மீட்டெடுக்கும் ஹீரோவாக பவன் கல்யாண் நடித்திருக்கிறார் என்பதையும் அழுத்தம் திருத்தமாகச் சொன்னார் ஜோதிகிருஷ்ணா.
“17—ஆம் நூற்றாண்டில் நடந்த கதை தான் இந்த ‘ஹரிகர வீரமல்லு’. இந்தப் படத்தை எடுத்து முடிக்க அஞ்சு வருசமாச்சு. இப்ப முதல் பாகம் தான் வருது. வாய்ப்பு இருந்தா இரண்டாம் பாகம் வரும். தெலுங்கு, கன்னடம், இந்தி, தமிழ் என பான் இந்தியா படம் தான் இது. நிச்சயம் ஜெயிக்கும்” என நம்பிக்கையுடன் பேசினார் ஏ.எம்.ரத்னம்.
பார்ப்போம்…தமிழ்நாட்டில் சனாதன ஆட்டம் எடுபடுமா? அடிவாங்குமா? என்று.
— கரிகாலன்.