நான் பாணன் அல்ல, பறையன் அல்ல, புலையன் அல்ல… நீ பிராமணனும் அல்ல…ஒரு மயிருமல்ல – வேடன்
அகர முதல் எழுத்தெல்லாம்….
வேடன் எனும் ஹிரண்தாஸ் முரளி !
கட்டிப்போடும் குரல் வளம், பாடல் வரிகளில் விடுதலை உணர்வு அமிலம். உலகை ஈர்க்கவைக்கும் ராப் இசைத் தமிழ் மற்றும் மலையாளப் பாடல்கள்.
ஒரு கோடிக் கட்டுரைகள், வலையொளிப் பேச்சுக்கள், மேடைப்பேச்சுகளில் சாதிக்க முடியாததை ஓரிரண்டு பாடல்களில் சாதித்த இளையோன்.
யாழ்ப்பாணத்துத் தாய்க்குப் பிறந்த மகன்.
நெஞ்சில் இட்டிருக்கும் டாட்டூ “அ” !
இதற்கு இவர் கொடுக்கும் விளக்கம், அ – என்றால், அம்மா, அப்பா, அன்பு, அறிவு, அழகு, அரசியல், அஞ்சாமை !
அவரது பாடல் வரிகள் அசாதாரணமானவை
“நீர்நிலங்களின் அடிமையாரு உடமையாரு
நிலங்கலாயிரம் வெளியில் திரிசத்தாரு ?
திரிச்ச வெளியில் குளம் முடிச்சதெத்ரபேரு ?
முதுகுகூனி தலைகள் தானுமினியும் எத்ரநாளு ?
நீர், நிலங்களின் உடமை யாரிடம் உள்ளது, அவற்றின் அடிமைக் கூலிகளாக யார் இருக்கிறார்கள் ? எனும் முதல் வரியிலேயே, எமது நிலத்திலேயே எங்களை அடிமைகளாக உழைக்க வைத்தது யார் ?… இப்போது அந்த நிலங்களை யார் உடமையாக்கியிருக்கிறார்கள் என்று கேள்வி எழுப்புகிறார் வேடன்.
ஆயிரக்கணக்கான நிலங்களை வேளாண்மைக்காகத் திருத்தியது யார் ? அந்த நிலங்களில் குளம் வெட்டியது எத்தனை பேர் ? முதுகு கூனித் தலையை தாழ்த்தி வாழும் இந்த நிலை இன்னும் எத்தனை நாள் ? என்ற வரிகளைக் கேட்கும்போது உடல் முழுதும் சிலிர்க்கிறது.
எங்கள் சொந்த நிலத்தில் எங்களை அடிமைகளாகக் கொண்டே, காடு போலக் கிடந்த நிலத்தை வளம் மிக்க வேளாண் நிலமாக்கி அதில் நீருக்காக எங்களை வைத்தே குளம் வெட்டி அந்த நிலத்தின் உரிமைகளை வைத்திருப்பது வேறு யாரோ ? எனும்போது நிலம் பறிக்கப்பட்டு அடிமைக்கூலிகளாக்கப்பட்ட ஒடுக்கப்பட்டவர்களின் வலிகளைச் சொல்கிறார் வேடன்.
நீ பிரன்ன மண்ணில் நின்னே கண்டால் வெறுப்பு
பணியெடுத்த மேனி வெயில் கொண்டே கருப்பு
நீ பிறந்த உன் மண்ணிலேயே உன்னைக் கண்டால் வெறுப்பு. அந்த (உடல்) கருப்பு வெயிலில் வேலை செய்வதால் ஏற்பட்ட கருப்பு
நிண்டே சாலையில் எரியுண்ணில்லா அடுப்பு
பிஞ்சு குஞ்சுவாள் அரவயறில் கிடப்பு
உன் சமையலறையில் அடுப்பு எரியாமல், குழுந்தைகள் பாதி வயிறு நிரம்பிய நிலையில் கிடக்கிறார்கள்.
என்கிற குரலற்றவர்களின் குரலாக ஒலிக்கும் வேடன்….

ஞான் பாணன் அல்ல பறையன் அல்ல புலையன் அல்ல
நீ தம்புரானுமல்ல ஆனேல் ஒரு மயிரும் அல்ல
நான் பாணன் அல்ல, பறையன் அல்ல, புலையன் அல்ல…
நீ பிராமணனும் அல்ல…ஒரு மயிருமல்ல.
என்கிறபோது வட வேத வர்ணாசிரம சாதிய ஏற்றத்தாழ்வை சுக்கு நூறாக உடைக்கிறார் வேடன் !
இனியும் காலாமில்ல காத்திருக்கான் ஆகுகில்லா
பொறுத்து போகுவான் க்ஷமயயொருத்தரி பாக்கியில்லா
இதையெல்லாம் பார்த்துக்கொண்டு காத்திருக்க முடியாது, பொறுத்துப் பொறுத்துப் போகவும் இனி நேரமும் மீதமில்லை என்பதுடன்…
காடு கட்டவந்த நாட்டில் சோறு கேட்டவன் மரிக்கும் என்கிற வரியில், சோறு கேட்ட ஒருவரை அடித்தே கொன்ற நிகழ்வையும் பதிய வைக்கிறார்.
வேடன்…ஆயிரமாண்டு காலம் அடிமைப்படுத்தபட்டுக் கிடக்கும் மக்களின் குரல்.
வளர்மெய்யறிவான் (எ) விசுவா விசுவநாத்
மூத்த பத்திரிகையாளர்