டி.ஐ.ஜி. அலுவலகம் எப்படி செயல்படுகிறது ? அங்குசம் நேரடி விசிட் !
டிஐஜி அலுவலகம் !
2003- ல் தமிழில் வெளியான சூப்பர் ஹிட் திரைப்படம் என்றால் சூர்யா- ஜோதிகா நடிப்பில் வெளியான காக்க காக்க திரைப்படம் தான் என்பார்கள், அந்த காலக்கட்டத்தை சேர்ந்த இளைஞர்கள். அந்த அளவுக்கு இளைஞர்கள் ரத்தத்தில் போலீஸ் ஆகணும்ங்கிற வெறியேற்றிய படமாக அத்திரைப்படம் அமைந்தது. இதனாலேயே பலருக்கு காக்கி மீது ஒரு காதல் வரத்தொடங்கியது. அந்த படத்தின் கதாநாயகன் சூர்யா மஃப்டியில் துப்பாக்கியோட ஜீப்பில் வலம் வருவது படத்தின் மாஸ் ஆன காட்சியாக அமைந்தது.

அப்படி, காக்க காக்க படத்தினால் இன்ஸ்பைர் ஆகி காக்கிச்சட்டை அணிந்தவர்தான் திருச்சி சரக டிஐஜி வருண் குமார் என்றால் எத்தனை பேரால் நம்பமுடியும். ”ஆமாங்க, என்னதான் சொந்த மாவட்டம் ராமநாதபுரமாக இருந்தாலும் கூட, திருச்சிக்கும் டிஐஜி வருண்குமாருக்கும் ஒரு டச் ஏற்கனவே இருந்துள்ளது.
வருண்குமார் ஐபிஎஸ் அதிகாரியாக 2011- ஆம் ஆண்டு தேர்வானபோது, அப்போது திருச்சி கலையரங்கம் வளாகத்தில் செயல்பட்டுவந்த அகாடமியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று போட்டித்தேர்வுக்கு தயராகி வந்த மாணவர்களிடம் சிறப்புரையாற்றினார். அதில், நான் போலீஸ் உடை அணிவதற்கு காக்க காக்க திரைப்படமும் ஒரு காரணம் என்று கூறியுள்ளார். அதனை அப்போதைய கல்கி பத்திரிகையில் செய்தியாக வெளியிட்டிருந்தது.
திருச்சியில் இருந்து ஐபிஎஸ் அதிகாரியாகி சென்றவர், மீண்டும் திருச்சிக்கு எஸ்.பியாக காலடி வைத்தார். ’ஆபரேஷன் அகழி’ எனும் ஸ்பெசல் ட்ரைவ் மூலம் பல கட்டப்பஞ்சாயத்து ரவுடிகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தவர். தற்போது திருச்சி சரக டிஐஜி –யாக பதவி உயர்வுப்பெற்று பணியை தொடர்ந்து வருகிறார். இப்படி பல சிறப்புகளை அடுக்காக சொல்லிக்கொண்டே போகலாம். இந்த நிலையில் தான் சிறப்பு வாய்ந்த டிஐஜியின் வருண்குமாரின் அலுவலகம் எப்படி இருக்கிறது? என்கிற பார்வையில் அங்குசம் டீம் அவரது அலுவலகத்திற்கு ஒரு விசிட் அடித்தது.

நேரடி விசிட்.
சம்பவம்-1
திருச்சி மன்னார்புரம் ரேஸ்கோர்ஸ் சாலையில், நகரின் பேரிரைச்சலில்லாத அமைதியான இடத்தில் அமைந்திருக்கிறது டிஐஜி அலுவலகம். பார்வையாளர்களை வரவேற்க, எப்போதும் பத்துக்கும் குறையாத போலீசார் பணியில் இருக்கிறார்கள். பார்வையாளர்கள் காத்திருப்பதற்கான பகுதியில், சாமியானா பந்தல் போட்டு அமர்வதற்கும் போதுமான நாற்காலிகளையும் போட்டிருக்கிறார்கள். பார்வையாளர்கள் பகுதிக்கு அப்படியே பின்புறம், போலீசார் கேரம் விளையாடுவதற்கான இடம் அமைந்திருக்கிறது.

டிஐஜி அலுவலகத்தின் வரவேற்பறையில் போட்டித்தேர்வுக்கான புத்தகங்கள் வரவேற்கின்றன. எஸ்.ஐ. போட்டித் தேர்வுக்கு தயாராகும் போலீசார்கள் பணியின்போதே தங்களது படிப்பை தொடரும் வகையில், டி.ஐ.ஜி. அலுவலகத்திலேயே போட்டித் தேர்வுக்கான புத்தகங்களை அடுக்கி வைத்திருக்கிறார். “புத்தகங்களோடு இளைப்பாறு… போட்டித்தேர்வுக்கு தயாராகு..” என்றே அன்போடு அழைக்கின்றன அந்த புத்தகங்கள். ஒளிரும் வண்ண விளக்குகளால், ஹைடெக்டாக கார்ப்பரேட் லுக்கில் இருக்கிறது, டிஐஜி அலுவலகம்.

டிஐஜி வருண்குமார் பார்வையாளர்களை பார்ப்பதற்காக ஒதுக்கப்பட்ட நேரம் மதியம் 2 மணிக்கு மேல் தான். காரணம், இந்திய அளவில் பேசப்படும் ஒரு முக்கிய வழக்கான அமைச்சர் கே.என்.நேருவின் தம்பி ராமஜெயம் கொலை வழக்கினை விசாரிக்கும் சிறப்பு அதிகாரியாக செயல்பட்டு வருகிறார்.
இந்த நிலையில் தான் ஒரு நாள் மாலை 5 மணியளவில் டிஐஜி அலுவலகத்திற்குள் நுழைந்தோம். அப்போது, அலுவலகத்திற்கு வெளியில் உள்ள சாலையில் அதிரடி படை போலீஸார் டிஐஜியின் வருகையின்போது எந்தவித போக்குவரத்து சிக்கலும் ஏற்பட்டுவிடக்கூடாது என்று இரண்டுபக்க ’கேட்’களிலும் தயாராக இருந்தனர்.
அலுவலக வளாகத்திற்குள் காவலர்கள் புகார் கொடுக்க வந்தவர்களிடம், குறைகளை கேட்டறிந்து கொண்டிருந்தனர். நம்மிடமும் என்ன விஷயமாக வந்துள்ளீர்கள் என ஒரு பெண் காவலர் விசாரித்தார். நாமும் புகார் அளிக்க வந்தவர்களுடன் அமர்ந்திருந்தோம். அங்கு சுமார் 30 க்கும் மேற்பட்டோர் புகார் அளிக்கவும், பல்வேறு காரணங்களுடன் அதிகாரிகள், போலீஸார் டிஐஜியை சந்திக்க காத்திருந்தனர். நமக்கு அருகில் ஒரு பெண் காவலர், மற்றொரு பெண் காவலரிடம் தேம்பி தேம்பி கண்ணீர் வடித்த நிலையில் பேசிக்கொண்டிருந்தார். அவரும் ஒரு புகார் தொடர்பாக தான் டிஐஜியை பார்க்க வந்திருப்பார் என்று நினைத்தோம்.

அதன்படியே, அவர் புகார் அளிக்கத்தான் வந்துள்ளார். ஒருபுறம் பேசுவதை காதுகொடுத்து கேட்டுக்கொண்டிருந்தோம். அவர் திருச்சி ஆயுதப்படையில் பணியாற்றக்கூடிய பெண் காவலர். அவர் தங்கி இருக்கும் காவலர் குடியிருப்பில் தொடர் கொள்ளை சம்பவம் நடைபெற்று வருவதாகவும், அவரது வீட்டிலும் நகை, பணம் கொள்ளைப் போய்விட்டதாகவும் கூறினார். மேலும், இதுதொடர்பாக காவல்நிலையத்தில் புகார் அளித்தும் சரியான ரெஸ்பான்ஸ் இல்லை என்று கூறி டிஐஜியிடம் புகார் கொடுக்க வந்துள்ளதாக கூறினார்.

அப்போது நேரம் 7 மணி கடந்த நிலையில், கருப்பு நிற ஹை லுக் ’தார்’ கார் உள்ளே வந்தது. அதிலிருந்து இறங்கி வந்தார் டிஐஜி வருண்குமார். நேரடியாக அலுவலகத்திற்குள் செல்லாமல், புகார்தாரர்கள் அமர்ந்திருக்கும் இடத்திற்கு வந்தார். தனக்கான ஏ.சி. அறைக்குள் செல்லாமல், அந்த கொசுக்கடிக்கு மத்தியிலும் அங்கேயே அமர்ந்து புகார்தாரர் ஒவ்வொருவராக பார்க்க ஆரம்பித்துவிட்டார். இதில், சில புகார்களுக்கு வழக்கறிஞர்களும் உடன் வந்திருந்தனர். ஆனால், டிஐஜி வருண்குமார் புகார்தாரர்களிடமிருந்தே நேரடியாக பிரச்சினையை கேட்டறிந்து அதற்கு ஒரு தீர்வை கூறினார்.
ஒருசிலர் புகார் விசயமாக செல்போனில் ஆடியோ, வீடியோ எடுத்துவந்து காண்பிப்பதையும் முழுமையாக, அதனை அருகில் நின்றுக்கொண்டிருந்த இன்ஸ்பெக்டர் லதாவிடம் வாங்கிவைத்துக் கொள்ள சொல்கிறார்.
அதேபோல, மணப்பாறை பகுதியில் இருந்து நிலப்புகார் தொடர்பாக வந்தவர்களை, அவரே மணப்பாறை எம்எல்ஏ –வுக்கு தொடர்புக்கொண்டு அவரிடம் சம்பந்தப்பட்டவர்களுக்கு உதவிட எடுத்துரைத்தார். ஒருபுகாருக்கு அதிகபட்சமாக 15 நிமிடம் எடுத்துக்கொண்டு, அதற்குள் புகார்தாரருக்கு ஒரு தீர்வை வழங்குகிறார்.
அந்த நேரத்திலும், ராமஜெயம் கொலை வழக்கு விசாரணைக்குழுவில் இடம்பெற்றுள்ள ஏடிஎஸ்பி ஒருவர், கை நிறைய பைலோடு டிஐஜிக்காக காத்திருந்ததையும் கவனிக்க முடிந்தது.

சம்பவம்- 2
ஏற்கனவே, திருச்சி மாவட்ட எஸ்.பி.யாக வருண்குமார் இருந்த சமயத்தில், புதிய நடைமுறையை கொண்டு வந்தார். புதன்கிழமை தோறும் பொதுமக்களிடமிருந்து நேரடியாக சந்தித்து புகார் பெறுவது வழக்கம். அதுபோன்ற நேரங்களில், குறைந்தது 30 புகார்தாரர்கள் வருவார்கள். அவர்களால், அவர்களது பிரச்சினையை தொகுப்பாக எடுத்து சொல்வது கடினம். சில நேரங்களில் தேவையில்லாத நிறைய விசயங்களை பேசுவதாகவும் அமையும். அதனை கருத்தில் கொண்டு, ஏ.ஆர். போலீஸாரை இதற்கென நியமித்திருந்தார்.
அவர்களது வேலை, மனு கொடுக்க வரும் புகார்தாரரிடமிருந்து முழுமையாக அவர்களது பிரச்சினைகளை கேட்டு, அவர்களை பற்றிய அடிப்படை விவரங்களை தனித்தாளில் பதிவு செய்து கொண்டு அப்புகார்தாரரின் சார்பாக அந்த பிரச்னையை அந்தக் குறிப்பான ஏ.ஆர். போலீஸார் எஸ்.பி.யிடம் எடுத்துரைப்பார். அதன்பிறகு, சம்பந்தபட்ட புகார்தாரர் தங்களது கூடுதலான தகவலை தெரிவிக்க வாய்ப்பளிப்பார். இதே நடைமுறை தான் டிஐஜியாக ஆன பிறகும் அவரது அலுவலகத்தில் பின்பற்றப்பட்டு வருகிறது. இதற்கென 10 ஏ.ஆர். போலீஸார் இருக்கிறார்கள்.
நாளொன்றுக்கு குறைந்தது, 20 முதல் 30 பேர் வரையில் டி.ஐ.ஜி.யை சந்திக்க வருகிறார்கள். பொதுமக்களும் வருகிறார்கள். போலீஸார்களும் வருகிறார்கள். லோக்கல் ஸ்டேஷனில் சரியாக நடவடிக்கை எடுப்பதில்லை என்ற புகாரோடு பொதுமக்கள் வருகிறார்கள். டிரான்ஸ்பர், லீவு, பணியிடத்தில் சிக்கல் போன்ற பிரச்னைகளோடு போலீஸார் வருகிறார்கள்.
பல்வேறு வழக்கு விசாரணை தொடர்பாக, பல்வேறு மாவட்டங்களுக்கு பயணத்திலும் இருக்கிறார். இதுதவிர முக்கியமான அலுவல்களை நேரம் காலம் பார்க்காமல், தனது முகாம் அலுவலகத்தில் (குடியிருப்பு) வைத்தும் தொடர்ந்து வருகிறார். டி.ஐ.ஜி. அலுவலகத்திற்கு அவர் எப்போது வருவார்? என்ற விவரம் அந்த அலுவலகத்தின் போலீஸார் வழி பொதுமக்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. ”சார், மாலைதான் வருவாங்க. வந்ததும் சொல்கிறோம். அப்போது, வாருங்கள்.” என்பதாக பதில் சொல்லி அனுப்பி வைக்கிறார்கள்.

சில நேரங்களில், மாலை 5 ,6 மணிக்குப் பிறகுதான் அலுவலகத்திற்கே வரும் சூழல் இருந்தாலும், அவர் பணி முடித்து வீடு திரும்பும் வரையில் புகார்தாரர்களை சந்தித்துவிட்டுதான் செல்வார். வாகனத்தில் ஏறும் வரையில் வழிமறித்து மனுவை நீட்டினாலும், ஒரு நிமிடம் நிறுத்தி “சரிம்மா, நடவடிக்கை எடுக்கிறேன்” என்ற ஒற்றை வார்த்தை ஆறுதலாக சொல்லிதான் அனுப்பியும் வைக்கிறார்.
பாதிக்கப்பட்ட பொதுமக்கள் தவிர்த்து, அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், செல்வாக்கான நபர்கள், அமைப்புகள் சார்ந்து சந்திக்க வருபவர்களையும் உரிய மரியாதையோடுதான் நடத்துகிறார். ஆனால், என்ன சிக்கலான நபர்கள் என்பதாக அவர் அனுமானித்துவிட்டால், அவர்களிடம் கிடுக்கிப்பிடி கேள்விகளை கேட்டு திக்குமுக்காட வைப்பதையும் தவறாமல் செய்து விடுவார்.
சமீபத்தில் வெளியான வாக்கி-டாக்கி உரையாடல் பாணியில், தொலைபேசி வழியாகவும் சம்பந்தபட்ட அதிகாரிகளை விரட்டி வேலை வாங்குவதை தொடர்ந்துதான் வருகிறார். “அந்த ஆள ஒழுங்கா இருந்துக்க சொல்லு. ஓவரா போய்கிட்டு இருக்கான். எந்தக் கட்சிக்காரனாலும் பார்க்க மாட்டேன். கைய, கால ஒடச்சி விட்ருவேன். சொல்லிடுங்க..” இதுபோன்ற டயலாக்குகளுக்கு பஞ்சம் இருக்காது.
தன்னை சுற்றி, தன்னைப் போலவே காக்கி சீருடையை காதலிக்கும் போலீசு டீமை வைத்திருக்கிறார். எஸ்.பி. அலுவலகத்தில் உடன் பணியாற்றிய அந்த டீமை அப்படியே கொத்தாக தூக்கி வந்துவிட்டார். நேரம் காலம் பார்க்காமல், அர்ப்பணிப்பு உணர்வோடு பணியாற்றும் போலீசு டீம் அது.

ஏ.ஆர். போலீசில் உள்ள போலீசாரை திறமையாக பயன்படுத்தி வருகிறார். ஆபரேஷன் அகழி என்பதாக, சிறப்பு நடவடிக்கையின் போது, கைப்பற்றிக் கொண்டுவரப்பட்ட ஆவணங்களை சரிபார்த்து அவற்றிலிருந்து பல்வேறு தகவல்களை திரட்டி கொடுத்தது ஏ.ஆர். போலீசார்தான். கல்லூரி படிப்பில் பல்வேறு துறைகளை எடுத்து படித்திருப்பார்கள். போலீசு பணிக்கு வந்திருப்பார்கள். அவர்களின் தனித்திறனை கண்டறிந்து, அதற்கேற்ப அவர்களுக்கு பொருத்தமான பணியை ஒதுக்கி வேலை வாங்கிவருகிறார்.
– அங்குசம் புலனாய்வுக்குழு