அவளை மீண்டும் அழைப்பேன்!
இந்த முறை திருச்சியில் இருந்தபோது, ஆட்டோவை தினமும் பயன்படுத்த வேண்டியிருந்தது, அப்பாவை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல மற்றும் இதர வேலைகள் என்று அதிகமாகப் பயணம். “ஊர் ஆட்டோ”வைத்தான் ( Oor cabs) பயன்படுத்தினேன்.
ஒரு நாள் காலையில், ஆட்டோ புக் செய்தபோது, மறுபுறத்திலிருந்து ஒரு பெண்ணின் இனிய குரல், புத்துணர்ச்சியுடன், “Good Morning!”
என்றது. பட்டென என் மனத்திற்குள் ஒளி பரவியது. அவள் என் இடத்தை உறுதி செய்து கொண்டு, “பத்து நிமிஷத்துல வர்றேன் மேம்” என்றாள். அது போலவே சரியாகப் பத்து நிமிடத்தில் வந்துவிட்டாள்.
அதே அன்பான உற்சாகத்துடன் என்னை ஆட்டோவில் வரவேற்றாள், சில துள்ளலான பாடல்களைப் போட்டு, மகிழ்ச்சியுடன் தானும் அதோடு சேர்ந்து பாடிக்கொண்டிருந்தாள். ஒருவர் ஒரு வேலையைக் கணிவோடு செய்வதை மட்டுமல்லாமல், அதை உண்மையிலேயே முழு மனத்துடன் ரசிப்பதைப் பார்ப்பது மிகவும் புத்துணர்ச்சியூட்டுவதாக இருந்தது.
தன் வேலையை ரசிப்பது என்றால் என்ன என்று அவள் உயிரோட்டமாகக் காட்டிக் கொண்டிருந்தாள்.
நான் ஒருமுறை நடுவில் இறங்கி தண்ணீர் வாங்கி வரும்போது, அவள் யாரோடோ ஃபோன் பேசிக்கொண்டிருந்தாள்.
என்ன கேள்வி கேட்கப்பட்டதோ தெரியவில்லை, ஆனால் அவள் சொன்ன பதில் எனக்கு அவள் மீது இன்னும் ஆர்வத்தைத் தூண்டியது.
“நான் சிட்டிக்கு ஷிஃப்ட் ஆயிட்டேன். இப்போ ஐப்ரோ த்ரெட்டிங் பண்றதுக்கெல்லாம் நேரம் இல்லை என்றாள். அந்த நபர் அவளை வற்புறுத்தியிருக்கலாம். “வேணும்னா, நான் என் வேலையை முடிச்சிட்டு நைட் 10:30 மணிக்கு வந்து பண்றேன்” என்று அவள் அதே மகிழ்ச்சியான தொனியில் பதில் சொன்னாள்.
நான் கிட்டத்தட்ட ஒரு வாரமாக அங்கு ஆட்டோக்களைப் பயன்படுத்தி வந்திருந்தேன். நான் சந்தித்த எல்லா ஆண் ஓட்டுநர்களும் கடுமையான முகபாவனைக் கொண்டவர்களாகவும், பெரும்பாலும் சோர்வான முகம், பணி ஒரு சுமை போல, மனத்தை எங்கோ வெளியில் வைத்துக்கொண்டே வேலையில் ஆர்வமற்றவர்களாகவே இருந்தனர். எனக்குக் காலை வணக்கம் தெரிவித்த முதல் ஆட்டோ ஓட்டுநர் இந்தப் பெண்தான்😍

நான் இறங்குவதற்கு முன் ” இதுவரை எனக்குக் குட் மார்னிங் சொன்ன முதல் ஆட்டோ ஓட்டுநர் நீ தாம்மா என்றேன். “ஓ” என்று சிரித்துக்கொண்டாள். “உன்னோட ஒரு ஃபோட்டோ எடுத்துக்கலாமா?” என்று கேட்டேன். அவள் உடனடியாக ஆட்டோவை அணைத்துவிட்டு, அழகாக இறங்கி, கைகுலுக்குவதற்காகக் கையை நீட்டி, கம்பீரமாகத் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டாள். “I am Shiva Sankari ma’am, நான் காரும் ஓட்டுவேன். உங்களுக்கு என்ன உதவி தேவைப்பட்டாலும் , கால் பண்ணுங்க. முடிஞ்ச வரைக்கும் ஹெல்ப் பண்ண ட்ரை பண்றேன்” என்றாள் மலர்ந்த முகத்துடன்.. அந்தச் சிரிப்பில்—தன்னம்பிக்கையும் உயிர்ப்பும் கலந்து இருந்தது.
பல ஆண்களுக்கு, வேலை என்பது அடையாளம் அல்லது திறனை நிரூபிக்கும் ஒரு கடமையாகவே இருக்கிறது. ஆனால் ஒரு பெண்ணுக்கு, வேலை என்பது பெரும்பாலும் அவள் உலகைத் தொடும் விதம் – அவள் எப்படிப் பார்க்கிறாள், உணர்கிறாள், வெளிப்படுத்துகிறாள் என்பது. அவள் பெரும்பாலும் தான் செய்யும் வேலையில் தன் முழுச் சுயத்தையும் வெளிப்படுத்துகிறாள். இந்த எண்ணத்தை நான் அவளுடன் பகிர்ந்து கொண்டேன், அவள் “கரெக்ட் தான் மேம்” என்று சம்மதத்துடன் தலையசைத்தாள்.
நான் அவளிடம், இந்தப் புகைப்படத்தைப் பதிவிட்டு அவளைப் பற்றி எழுதுவேன் என்று சொன்னேன். அவள் மெதுவாகச் சிரித்துவிட்டு, “ஓ மேம், நீங்க எனக்கு முன்னிடியே சொல்லியிருந்தா, என் முழுக் கதையையும் நான் உங்கள்ட ஷேர் பண்ணியிருப்பேன்” என்றாள்.
அவளுடைய கதை அழகானதாகவும் கடினமானதாகவும் இருக்கும், தைரியத்தால் வடிவமைக்கப்பட்டிருக்கும் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன்.
அடுத்த முறை திருச்சி வரும்போது, நான் அவளை மீண்டும் அழைப்பேன் – ஒரு பயணத்திற்காக மட்டுமல்ல, அவள் கதையைக் கேட்கவும்…
— ஸ்ரீதரன் தீபா








Comments are closed, but trackbacks and pingbacks are open.