அந்த அழகு தேவதையின் பெயர் ஆலி. கேரள மாநிலம், பத்தனம்திட்டா மாவட்டம் மல்லப்பள்ளியை சேர்ந்த அருண் ஆபிரகாம் – ஷெரின் ஆன் ஜான் எனும் அழகிய தம்பதியினரின் அன்பு மகள் அவள். அவளின் வயதோ வெறும் பத்து மாதங்கள். ஆனாலும், ஒரு வயதைக்கூட முழுமையாக நிறைவு செய்யாத, ஆலி-யின் அர்ப்பணிப்பு கற்பணைகளுக்கு எட்டாதவை. ஆகச்சிறந்த முன்னுதாரணமாய், இன்னும் ஏழு தலைமுறைகளை கடந்தும் அவள் பெயர் என்றும் நிலைத்திருக்கும்படியான காரியத்தை செய்து முடித்திருக்கிறாள்.
2026, பிப்ரவரி – 05 துர்பாக்கியமான நாள் அது. ஆலி தன் குடும்பத்தாரோடும், தாத்தா பாட்டியோடும் குதூகலமாக காரில் கிளம்பிச் சென்றாள். எதிர்பாரா விபத்தில் சிக்கியது, அவர்கள் பயணித்த கார். ஆலி உள்ளிட்டு அனைவரும் படுகாயமுற்றார்கள். முதலில் சங்கனாச்சேரி மற்றும் திருவல்லாவில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட ஆலி, உயர் சிகிச்சைக்காக கொச்சியிலுள்ள அம்ரிதா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டாள். ஒரு வாரத்திற்கும் மேலான உயர் சிகிச்சை எதுவும் அவளை மீட்டெடுக்க கை கொடுக்கவில்லை. பரிதாபமாக, பிப்-13 அன்று மூளைச்சாவு அடைந்ததாக அறிவித்தார்கள் மருத்துவர்கள்.

ஆலியின் குடும்பம் அப்படியே நொறுங்கிப்போனது. ஆசையாய் பெற்று வளர்த்த பத்து மாத பைங்கிளியை அப்படியே தூக்கிக் கொடுக்க எந்தப் பெற்றோரின் மனம்தான் ஏற்றுக்கொள்ளும்? ஆசையாய் சுமந்த ஆயிரம் கனவுகளும் அப்படியே தரைமட்டமாகி சுக்கு நூறாகி சிதைந்து போயிருந்தன.
அப்போதுதான், மருத்துவர்கள் மெல்ல பேசினார்கள் ஆலியின் பெற்றோர்களிடம். மூளைச்சாவு அடைந்த ஆலியின் உடல் உறுப்புகளை நீங்கள் தானமாக வழங்க முன்வந்தால், ஐந்து பேர்களின் உயிரில் ஆலி கலந்திருப்பாள் என்றார்கள்.
எந்தவிதமான யோசனைகளுக்கும் இடம்கொடுக்காமல், ஆலியின் பெற்றோரும் அவளது தாத்தா ரெஜி சாமுவேலும் மருத்துவர்களின் கோரிக்கையை நிறைவேற்ற முன்வந்தார்கள். மண்ணோடு மண்ணாக மட்கிப்போக இடம்தராமல், “எங்கள் மகள் மற்ற குழந்தைகளின் வாழ்வில் தொடர்ந்து வாழட்டும்” என்று உறுப்புத்தானத்துக்கு இசைவு தெரிவித்த அவர்களின் மனதைரியம் மெய்சிலிர்க்க வைக்கிறது. முன்னுதாரணமிக்கது. எதிர்கால சந்ததியினருக்கான சிறந்த வழிகாட்டியாகவும் அமைந்து போனது.
கொச்சி – அம்ரிதா மருத்துவமனையிலிருந்து, திருவனந்தபுரத்தின் பல்வேறு மருத்துவமனைகளுக்கும் ஆம்புலன்ஸ்கள் மின்னல் வேகத்தில் பறந்தன. ஆலியின் கல்லீரல் கிம்ஸ் மருத்துவமனையில் உள்ள ஆறு மாத குழந்தைக்கும்; சிறுநீரகங்கள் எஸ்.ஏ.டி மருத்துவமனையில் உள்ள குழந்தைக்கும்; இதய வால்வுகள் ஸ்ரீசித்ரா இன்ஸ்டிட்யூட்டில் சிகிச்சை பெறும் குழந்தைகளுக்கும் என நாலா புறமும் வெறும் மூன்றே மணி நேரத்தில், இலக்கை எட்டியது ஆலியின் உறுப்புகள். போலீசும், பொதுமக்களும் கனத்த இதயத்தோடு, ஆலியின் உடல் உறுப்புகளை சுமந்து சென்ற ஆம்புலன்களுக்கு வழியேற்படுத்திக் கொடுத்து இப்புண்ணிய சேவையில் தங்களையும் அர்ப்பணித்துக் கொண்டார்கள்.
ஆலியின் சிறுநீரகங்களால், தன் மகள் ஷ்ரேயாவை மரணத்தின் கொடுங்கரங்களிலிருந்து உயிருடன் மீட்டெடுத்த ஷ்ரேயாவின் தந்தை நடுக்கம் கண்ட இருகரங்களையும் கூப்பி நவின்ற நன்றி காண்போரை கண்கலங்க செய்தது. இதுபோலவே, மற்ற குழந்தைகளின் பெற்றோர்களும் ஆலியை நெக்குருகி நினைவுகூர்ந்தார்கள்.
உறுப்புதான அறுவை சிகிச்சையெல்லாம் முடிந்து, ஐவரின் வாழ்வில் ஒளியேற்றிவிட்டு, கோட்டயம் மருத்துவக் கல்லூரியிலிருந்து அரசு மரியாதையுடன் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டாள் ஆலி.
கேரள மாநிலத்தின், மிகவும் இளம் வயதில் உறுப்புதானம் செய்தவள் என்ற வரலாற்றுப் பெருமை ஆலியின் வசமானது. ஆலியின் திருமுகத்தை காண, அவளின் ஆகச்சிறந்த அர்ப்பணிப்புக்கு தலைவணங்க, கனத்த இதயத்தோடு கேரளாவே ஒன்றுகூடியிருந்தது. ஆளும் அரசின் பிரதிநிதிகளும், போலீசு படையினரும் குழுமியிருந்தார்கள். குண்டுகள் முழங்க, அரசு மரியாதையுடன் ஆலியை வழியனுப்பி வைத்தது கேரள தேசம்.
விதியை வெல்ல முடியாமல், அவள் தோற்றிருக்கலாம். மனிதத்தில் வென்றிருக்கிறாள். இதுகாறும் கண்களை குளமாக்கிச்சென்ற ஆலி, இப்போது ஒருத்தியல்ல. ஐந்து மழலைகளின் உயிரில் உருமாறியிருக்கிறாள். மனிதத்தை நேசிக்கும் நம் ஒவ்வொருவரிடத்திலும் அவள் இன்னும் உரையாடிக் கொண்டுதானிருக்கிறாள். ஆம்! ஆலி, வெறும் தேவதை அல்ல. அவள் மரணமற்ற தேவதை.
— இளங்கதிர்








Comments are closed, but trackbacks and pingbacks are open.