திருச்சி ஜோசப் கல்லூரியில் “ஒரே உலகம் ஒரே ஆரோக்கியம்” கருப்பொருளில் உலக யோகா தினக் கொண்டாட்டம்
ஐக்கிய நாடுகள் சபையில் இந்தியா கொண்டு வந்த தீர்மானம் ஏற்கப்பட்டு கடந்த 2015 முதல் ஆண்டுதோறும் ஜூன் 21ஆம் தேதி உலக யோகா தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் 11 வது ஆண்டு யோகா தினத்தை இன்று கொண்டாடுகிறோம். நல்லிணக்கம், சமாதானத்துக்கான யோகா, இதய நலனுக்கான யோகா, மனித குலத்துக்கான யோகா என ஒவ்வொரு கருப்பொருளுடன் யோகா தினம் கொண்டாடப்படுகிறது. ஒரே உலகம் ஒரே ஆரோக்கியம் (Yoga for One Earth, One Health) என்கிற இந்த ஆண்டுக்கான கருப்பொருளை மையப்படுத்தி, திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் உலக யோகா தினம் கொண்டாடப்பட்டது.
தேசிய மாணவர் படை, நாட்டு நலப்பணித் திட்டம், உடற்கல்வித்துறை இணைந்து கல்லூரியின் மாகே மைதானத்தில் கல்லூரி முதல்வர் அருள்முனைவர் சி.மரியதாஸ் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் இணை முதல்வர் முனைவர் குமார் முன்னிலை வகித்தார். குழுமணி அரசு ஆரம்ப சுகாதார மைய ஆயுஷ் மருத்துவ அலுவலர் மருத்துவர் ஹெலன் கிறிஸ்டில்டா சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். நடைபெற்ற இந்த விழாவில், தேசிய மாணவர் படை அலுவலர் முனைவர் டேவிட் ராஜா வரவேற்புரையாற்றினார்.
கல்லூரி முதல்வர் தம் தலைமையுரையில், யோகா என்பது ஒரு கலை. ஜூன் 21 ஆம் நாள் மட்டும் நடக்கின்ற ஒரு நிகழ்வாக இருக்கக்கூடாது என்பது என்னுடைய ஆசை. இனி வருகின்ற காலங்களில் மாதம் ஒருமுறை இரண்டாவது சனிக்கிழமையில் மாணவர்களும் ஆசிரியர்களும் ஒருங்கிணைந்து யோகா பயிற்சி மேற்கொள்ள வேண்டும் என்பதை எனது விருப்பம். நமது மாணவர்களிடையே யோகா குறித்த ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்கிற ஒரு செய்தியை நாம் இந்த நாளிலே சிந்திக்க வேண்டும். மனதை ஒருமுகப்படுத்தி அலைபேசியை நிறுத்திவிட்டு நாம் தியானம் செய்வதை உடல் ஆரோக்கியத்திற்கு உரியதாக இருக்கும். அப்படியே உறுதி ஏற்பதற்கு இந்த நாள் வழிகாட்டட்டும் எனப் பதிவு செய்தார்.
இணை முதல்வர் தனது முன்னிலை உரையில், பெரும்பாலும் இன்று அனைத்து மனிதர்களுமே பல்வேறு விதமான நோய்களுக்கு ஆட்படுத்தப்பட்டிருக்கிறோம். இதிலிருந்து நாம் விடுபட வேண்டுமென்று சொன்னால் நாம் நம் உடல் நலத்தைக் காக்க வேண்டும். அதற்கு சிறந்த உணவை எடுத்துக் கொள்ள வேண்டும். அதோடு மட்டுமல்லாமல் முதல்வர் தந்தை கூறியதுபோல தொடர்ச்சியாக நாம் இந்த யோகா பயிற்சிகளை கற்றுக் கொண்டு தினமும் அதை வழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டார்.
தொடர்ந்து மருத்துவர் ஹெலன் கிறிஸ்டில்டா நாம் அன்றாடம் பயன்படுத்துகிற இரு சக்கர வாகனத்தில் பளபளப்பாக இருக்கிற வாகனத்தை விரும்புகிறோமா? அல்லது சரியான இயக்க நிலையில் இருக்கிற வாகனத்தை விரும்புகிறோமா? ஒரு வயல்வெளி பச்சை பசேல் என்று இருக்க வேண்டும் என்று சொன்னால் அங்கு ஒரு நீர் இறைக்க இயந்திரம் சரியான முறையில் இயங்க வேண்டும். ஒரு அறை தூய்மையாக இருக்க வேண்டும் ஒட்டடை இல்லாத அறையாக இருக்க வேண்டும் என்று சொன்னால் அங்கு இருக்கக்கூடிய ஜன்னல்கள் விசாலமாக திறந்து வைக்கப்பட்டு வெளிப்புற காற்று உள்ளே சென்று திரும்பி வெளியில் வருகிற நிலையில் இருக்க இவையெல்லாம் நாம் அறிந்து ஒன்றே அதுபோல நம்முடைய நுரையீரலும் இதயமும் சரியாக இயங்குவது தான் ஒரு வளமான உடல் நலத்திற்கு சான்றாக அமையும். அப்படி நம்முடைய உடலை சிறப்பாக வைத்துக் கொள்ள யோகா சரியான வழிமுறை என்கிற முன்னுரை வழங்கி உடற்கல்வி பேராசிரியர் ரமேஷ் அவர்களோடு இணைந்து பல யோகாசன முறைகளை கற்றுக் கொடுத்தார்.
கல்லூரியின் தேசிய மாணவர் படை மாணவர்கள், நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள், உடற்கல்வித்துறை மாணவர்கள், கிரிக்கெட் கிளப் மாணவர்கள், பேராசிரியர் பெருமக்கள் உள்ளிட்ட பலரும் இந்த விழாவில் பங்கேற்று பயனடைந்தனர். தேசிய மாணவர் படை அலுவலர் முனைவர் டே.வில்சன் நன்றியுரையாற்றினார்.
— ஆதன்