பன்முகத்தன்மையை சிதைப்பதை, வேடிக்கை பார்க்கலாமா ?
“ஆனந்தமடம்” நாவலில் ஆயுதம் தாங்கிய படையின் தலைமையாக செயல்படும் கதாபாத்திரம், தனக்கு எந்த உறவும் இல்லை, தேசம் மட்டுமே என்று கூறும் இடத்தில் இன்னொரு கதாபாத்திரத்துடன் நடைபெறும் உரையாடல் மூலம் பாடும் பாடலாக இடம் பெற்றுள்ளதை; சட்டத்தின் ஆட்சி நடக்கும், சுதந்திரம், சமத்துவம், சகோதரத்தும் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட நாட்டின் தேசியப் பாடலாக எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்?
நமது இந்தியத் தாய் மிகவும் அன்பானவர். தனக்கு நட்பு நாடுகள் மட்டுமே உண்டு. பகை நாடு கிடையாது என்று அறிவித்த நாடு இந்தியா. இந்தியாவின் பஞ்சசீலக் கொள்கை உலகை திரும்பிப் பார்க்க வைத்தது. நூற்றுக்கும் மேலான நாடுகள் அணிசேரா நாடுகளாக அணிதிரண்டது. அத்தகைய அமைதியும் நட்பும்தான் இன்றைய இந்திய வளர்ச்கிக்கு அடிப்படையாக அமைந்தது. அத்தகைய இந்தியத் தாய், இன்று ஏன் பத்து கைகளில் பத்து ஆயுதங்கள் தாங்கி நிற்க வேண்டும்?
விடுதலைப் போராட்ட முழக்கங்களாக இருந்த சில வரிகளும் வந்தேமாதரம் பாடலில் இருக்கிறது என்பது மட்டுமே உண்மை. மொத்த பாடலும் விடுதலைப் போராட்டக் களத்தில் இல்லை என்பதே முழு உண்மை. காந்தியின் அகிம்சையே இந்திய மக்களை அணிதிரட்டியது என்பது வரலாறு. பகத்சிங்கின் “இன்குலாப் சிந்தாபாத்” முழக்கமே இளைஞர்களை பெரும் அளவில் இந்திய விடுதலைப் போராட்டக் களத்திற்கு ஈர்த்தது என்பதை வரலாறு நமக்கு உணர்த்துகிறது.

விடுதலைப் போராட்டக் களத்தில் முழங்கப்பட்ட முழக்கமான “வந்தே மாதரம்” வரிகள் ஏற்கனவே தேசியப் பாடலாக இந்திய நாடாளுமன்றம் அறித்துள்ளப்போது, நாடாளுமன்றத்தையும், இந்திய அரசமைப்புச் சட்டத்தின் விழுமியங்களையும், அதன் கூறுகளையும் மதிக்காமல், ஒரு நாவலில் வெறுப்பு, கோபம், பதற்றம் ஆகியவற்றை ஊக்குவிக்கும் ஆயுதம் தாங்கிய கும்பல் பாடிய பாடல் முழுவதையும் தேசியப் பாடலாக பாட வேண்டும் என்று ஒன்றிய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டிருப்பது, மக்களாட்சி, கூட்டாட்சி ஆகியவற்றுக்கு விடப்பட்ட சவால் மட்டுமல்ல, இந்தியாவின் அடிப்படைக் கோட்பாடான பன்முகத்தன்மையை சிதைக்கும் செயல். வேற்றுமையில் ஒற்றுமை என்ற கோட்பாட்டின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்ட இந்திய ஒருமைப்பாட்டை சிதைக்கும் செயல்.
ஒன்றிய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள உத்தரவை திரும்பப் பெற வலியுறுத்தி தமிழ்நாடு சட்டமன்றம் தீர்மானம் நிறைவேற்றுவது தமிழ்நாடு சட்டமன்றத்தின் வரலாற்றுக் கடமை.
கடைசி நாள் பல அலுவல் இருக்கலாம். கூடுதலாக குறைந்தபட்ச நேரம் ஒதுக்கியாவது தேச நலன் கருதி விவாதித்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று மாண்புமிகு பேரவைத் தலைவர் உள்ளிட்ட மாண்புமிகு உறுப்பினர்களை பொதுப் பள்ளிக்கான மாநில மேடை சார்பாக பொதுச் செயலாளர் பு. பா. பிரின்ஸ் கஜேந்திர பாபு கேட்டுக்கொண்டுள்ளார்.








Comments are closed, but trackbacks and pingbacks are open.