கல்குவாரி குண்டர்களால் தாக்கப்பட்ட செய்தியாளர்கள் ! திருச்சி டிஸ்ட்ரிக்ட் பிரஸ் & மீடியா கிளப் கண்டனம் !
கரூர் மாவட்டத்தில், அரசு விதிமுறைகளை மீறி இயங்கிவரும் கல்குவாரி குறித்து செய்தி சேகரிக்கச் சென்ற, தனியார் தொலைக்காட்சி ஒன்றின் திருச்சி மாவட்ட செய்தியாளர் கதிரவன் மற்றும் அவருடன் சென்ற ஒளிப்பதிவாளர் செபாஸ்டின் ஆகியோர் கொடூரமாக தாக்கப்பட்ட விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்த விவகாரம் தொடர்பாக, திருச்சி டிஸ்ட்ரிக்ட் பிரஸ் & மீடியா கிளப் சார்பில் தலைவர் செந்தமிழினியர், செயலர் சார்லஸ் ஆகியோர் கூட்டாக விடுத்துள்ள அறிக்கையில், “திருச்சி நியூஸ் தமிழ் செய்தியாளர் கதிரவன், ஒளிப்பதிவாளர் ஜெபாஸ்டின் ஆகியோர் தாக்கப்பட்டதற்கு வன்மையான கண்டனத்தை திருச்சி டிஸ்ட்ரிக்ட் பிரஸ் & மீடியா கிளப் தெரிவித்துக் கொள்கிறது.
கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் பகுதியில் இயங்கும் கல்குவாரியில் சட்ட விரோதமாக அரசு அனுமதித்த அளவைவிட கனிம வளங்களை கொள்ளையடிப்பதாக வந்த தகவலின் பேரில் இன்று செய்தி சேகரிக்கச் சென்ற செய்தியாளர் கதிரவன், ஒளிப்பதிவாளர் ஜெபாஸ்டின் ஆகியோர்கள் மீது குவாரியில் இருந்த குண்டர்கள் செய்தியாளரையும் ஒளிப்பதிவாளரையும் தூக்கிச் சென்று கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளனர்.
மேலும், அவர்கள் பயன்படுத்திய கேமரா மற்றும் ஒளிப்பதிவுக்கான விலை உயர்ந்த சாதனங்கள் உடைத்து சேதப்படுத்தப்பட்டதாக தெரிகிறது. இது போன்ற காட்டுமிராண்டித்தனமான செயல்கள் வன்மையாக கண்டிக்கக் கூடியது. உடனடியாக தாக்குதல் நடத்திய குண்டர்களை மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து கைது செய்ய வேண்டும். படுகாயம் அடைந்த செய்தியாளர் மற்றும் ஒளிப்பதிவாளரை உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்து உயர் சிகிச்சை அளிக்க வேண்டும் எதிர்வரும் காலங்களில் அவர்களுக்கு எந்தவித ஆபத்தும் ஏற்படாத வண்ணம் அரசு உறுதி அளிக்க வேண்டும் என திருச்சி டிஸ்ட்ரிக்ட் பிரஸ் & மீடியா கிளப் வலியுறுத்துகிறது.” என்பதாக கண்டனத்தை தெரிவித்திருக்கிறார்கள்.
— அங்குசம் செய்திப்பிரிவு.










Comments are closed, but trackbacks and pingbacks are open.