கடற்கரை ராஜ் vs நயினார் – ஜாதி கணக்குகளை மீறி “விட்டமின் ப” தீர்மானிக்குமா?
விருதுநகர் மாவட்ட அரசியலில் எப்போதும் கவனிக்கப்படும் தொகுதியாக விளங்கும் சாத்தூர், 2026 தேர்தலை முன்னிட்டு மீண்டும் அரசியல் மையப்புள்ளியாக மாறியுள்ளது.
திமுக சார்பில் கடற்கரை ராஜ் மற்றும் பாஜக சார்பில் நயினார் நாகேந்திரன் களமிறங்கியுள்ள நிலையில், இந்த முறை போட்டி பல அடுக்குகளைக் கொண்ட சிக்கலான அரசியல் சமரமாக மாறியுள்ளது.
2011ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் திமுக வேட்பாளராக போட்டியிட்ட கடற்கரை ராஜ் 59,573 வாக்குகள் (39.07%) பெற்றார். அதிமுக வேட்பாளர் ஆர்.பி. உதயகுமார் 88,918 வாக்குகள் (58.32%) பெற்று 29,345 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அப்போது 12 வேட்பாளர்கள் களமிறங்கிய நிலையில், 82.16% வாக்குப்பதிவு பதிவானது.
தற்போது 67 வயதான கடற்கரை ராஜ், ரூ.3.77 கோடி சொத்து மதிப்புடன், குற்றச்சாட்டுகள் எதுவும் இல்லாத வேட்பாளராக மீண்டும் களமிறங்கியுள்ளார். அவருக்கு திமுக அரசின் முக்கிய அமைச்சர் மற்றும் வருவாய், பேரிடர் மேலாண்மை துறை பொறுப்பில் உள்ள கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரனின் அரசியல் ஆதரவும் கிடைக்கிறது. அவரது அனுபவம், தொகுதி மீதான பிடிப்பு மற்றும் கட்சியின் நிர்வாக வலிமை ஆகியவற்றின் அடிப்படையில், சாத்தூர் தொகுதியில் கடற்கரை ராஜை வெற்றி பெறச் செய்வதற்கான முயற்சிகள் தீவிரமாக நடைபெறலாம் என அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.
மறுபுறம், 65 வயதான நயினார் நாகேந்திரன், தொழிலதிபராகவும் அனுபவமிக்க அரசியல்வாதியாகவும் திகழ்கிறார். சமீபத்திய அறிவிப்புகளின்படி ரூ.31.94 கோடி சொத்து மதிப்புடன் களமிறங்கியுள்ள இவர், வலுவான பொருளாதார பின்னணியையும் தேர்தல் அனுபவத்தையும் பலமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறார்.
மூன்று அடுக்கு அரசியல்
சாத்தூர் தொகுதியில் வாக்கு அமைப்பை பொறுத்தவரை, தேவர் (மறவர்) சமூக வாக்குகள் முதலிடத்தில், நாயக்கர் சமூக வாக்குகள் இரண்டாவது இடத்தில், பிற சமூகங்களின் வாக்குகள் மூன்றாவது கட்டத்தில் உள்ளன என்பது பொதுவான அரசியல் மதிப்பீடாக உள்ளது.
இதனிடையே, விருதுநகர் மாவட்டம் முழுவதும் அதிமுக சார்பில் மறவர் சமூகத்தை சேர்ந்த வேட்பாளர்கள் அதிகளவில் நிறுத்தப்பட்டுள்ளதும், அந்த சமூக வாக்குகளை ஒருங்கிணைக்கும் அரசியல் முயற்சியாக பார்க்கப்படுகிறது. அதன் தாக்கம் சாத்தூரிலும் எதிரொலிக்குமா என்பது முக்கிய கேள்வியாக உள்ளது.

சிறுகட்சிகள்: “சின்ன ஓட்டு – பெரிய தாக்கம்”
நாம் தமிழர் கட்சி, தமிழக வெற்றி கழகம், புதிய தமிழகம் போன்ற கட்சிகள் தனித்துப் போட்டியிடும் சூழல் உருவாகியுள்ளது. இவை நேரடி வெற்றியைப் பெறாவிட்டாலும், பிரதான கட்சிகளின் வாக்கு விகிதத்தை மாற்றக்கூடிய சக்தியாக பார்க்கப்படுகின்றன.
அடிப்படை பிரச்சினைகள்: தரையில் நிலவும் உண்மை
குடிநீர் தட்டுப்பாடு, சாலை வசதி, வேலைவாய்ப்பு, கிராமப்புற உள்கட்டமைப்பு போன்ற பிரச்சினைகள் வாக்காளர்களின் முக்கிய எதிர்பார்ப்புகளாக உள்ளன. இவற்றில் யார் நம்பிக்கை அளிக்கிறார்கள் என்பதும் தேர்தல் முடிவில் தாக்கம் ஏற்படுத்தும்.
இறுதி அரசியல் கணிப்பு
சாத்தூர் தொகுதியில் இந்த முறை போட்டி வெறும் கட்சி மோதல் அல்ல; பல அடுக்குகளைக் கொண்ட அரசியல் சமநிலை.
சாதி கணக்கு, கட்சி வலிமை, வேட்பாளர் செல்வாக்கு, சிறுகட்சிகள் தாக்கம் – அனைத்தும் ஒன்றாக கலந்துள்ள சூழல். ஆனால், அரசியல் வட்டாரங்களில் பரவலாக பேசப்படும் ஒரே கருத்து:
“எல்லா கணக்குகளையும் தாண்டி… இறுதியில் முடிவு செய்வது ‘விட்டமின் ப’ தானா?”
— மாரீஸ்வரன்








Comments are closed, but trackbacks and pingbacks are open.