கடம்பூரை கலக்கும் லாரி வசூலும் பிஎம்டபிள்யூ கார் கனவும் !
கடம்பூர் பகுதியில் அதிகளவு காற்றாடி மற்றும் சோலார் நிறுவனங்கள் உள்ளன. இந்த நிறுவனங்களுக்கு நாள்தோறும் ஏராளமான லாரிகள் வந்து செல்கின்றன. இந்த சூழ்நிலையில் கடந்த ஏப்ரல் 18 அன்று தனியார் சோலார் நிறுவனத்திற்கு வந்த 4 லாரிகளுக்கு கடம்பூர் காவல் நிலைய போலீசார் அபராதம் விதித்தாக கூறப்படுகிறது.
ஏன் அபராதம் ? என்று கேட்டபோது சம்பந்தப்பட்ட சோலார் நிறுவனத்தை தங்களை வந்து பார்க்கும்படியும், பலமுறை சொல்லியும் ஏன்? வரவில்லை என்று அபராதம் விதித்தவர்கள் பதில் சொல்லி உள்ளனர்.
இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த லாரி டிரைவர்கள் தங்களது உரிமையாளர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதில் ஒரு உரிமையாளர் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தை தொடர்பு கொண்டு கேட்ட போது முன்னுக்குப் பின் முரணாக பதில் தெரிவித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து இப்பிரச்சனை குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கும் சம்பந்தப்பட்ட லாரி உரிமையாளர்கள் மற்றும் லாரி அசோசியேஷன் நிர்வாகத்தினர் புகார் தெரிவித்துள்ளனர்.
எந்த லாரி வந்தாலும் ரைட்டரை பார்க்க வேண்டும் என்றும் ஒரு லாரிக்கு 22,000 தர வேண்டும் என்று அந்தக் காவல் நிலைய அதிகாரி எழுதப்படாத உத்தரவு போட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
இதனை செய்ய மறுத்த ஒரு பெண் உதவி ஆய்வாளருக்கு தொடர்ந்து நெருக்கடி கொடுத்தது மட்டுமின்றி, அவர் மீது மொட்டை பெட்டிஷன் போடவும் செய்துள்ளனர்.
வேறு வழியில்லாமல் அந்தப் பெண் உதவி ஆய்வாளர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரை பார்த்து தனது நிலைமையை கூறி ஆயுதப்படைக்கு சென்ற நிகழ்வும் ஏற்பட்டுள்ளது.
அந்தக் காவல் நிலைய அதிகாரிக்கு, ஏற்கனவே பல்வேறு பிரச்சினை நிகழ்ச்சிக்கு அங்கு பணியாற்ற கூடியவர்கள் பக்கத்துக் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பிஎம்டபிள்யூ கார் வாங்கி விட்டார் , அவருக்கு ஏசி வைத்த அறைவேறு தயாராகிக் கொண்டிருக்கிறது. நீங்க பொழைக்க தெரியாம இருக்கீங்க… வண்டிக்கு 5000 கேக்காதீங்க 20,000 கேளுங்க என்று உசுப்பேத்தி விட.. அந்த அதிகாரியும் களத்தில் இறங்கி எப்படியாவது பிஎம்டபிள்யூ கார் வாங்கிய விட வேண்டும் என்று முனைப்பில் செயல்படுவதாக அங்கு பணிபுரியக்கூடிய நேர்மையான காவலர்களும், பாதிக்கப்பட்டவர்களும் புலம்பித் தள்ளுகின்றனர்.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
ரைட்டர், உளவுத்துறையில் இருந்து விடுபட்டு வந்தவர், அதிகாரிகளுக்கு டிரைவராக இருந்தவர் ஆகியோர் கூட்டணியில் வியாபாரம் கல்லா கட்டுவதாக கூடுதல் தகவலை கூறுகின்றனர் அந்த காவல் நிலைய நல்ல காவலர்கள்.
ஏற்கனவே கயத்தாரில் மைனர் குஞ்சு உறவினர் வைத்த குவாட்டர் பாட்டிலும் கோழி பிரியாணியும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், கடம்பூரில் பிஎம்டபிள்யூ காரும், லாரி வசூலும் மேலும் பரபரப்பை கூட்டி உள்ளது.
— மணிபாரதி.