கரூர் கொடுந்துயர் ! விஜயை விளாசி தள்ளிய நீதிபதிகள் ! நடந்தது என்ன ?
தமிழகத்தை உலுக்கிய கரூர் கொடுந்துயரம், நாடு முழுவதும் பேசும் விவகாரமாக மாறியிருக்கிறது. இந்த விவகாரம் தொடர்பாக, சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் அதன் மதுரைக்கிளை ஆகியவற்றில் அடுத்தடுத்து பல்வேறு வழக்குகள் தொடுக்கப்பட்டன.
இந்த வழக்குகளின் விசாரணை காரசாரமாக நடைபெற்ற நிலையில், தவெக கட்சி குறித்தும் அதன் தலைவரும் நடிகருமான விஜய் குறித்தும் நீதிமன்றம் தெரிவித்துள்ள கருத்துக்கள் அரசியல் வட்டாரத்தில் அனல் பறக்கச் செய்திருக்கிறது.
சென்னை வில்லிவாக்கத்தைச் சேர்ந்த பி.எச்.தினேஷ் என்பவர் தொடுத்த வழக்கு, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி என்.செந்தில்குமார் முன்பாக விசாரணைக்கு வந்தது. அரசியல் கட்சிகளுக்கு ரோட் ஷோ நடத்துவது தொடர்பாக வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க வேண்டும். அதுவரையில் தமிழகத்தில் எந்த ஒரு அரசியல் கட்சிக்கும் ரோட் ஷோ நடத்த தடை விதிக்க வேண்டுமென்ற கோரிக்கையுடன் அந்த மனுவை தாக்கல் செய்திருந்தார் பி.எச்.தினேஷ்.
அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன், “மனுதாரர் தெரிவிப்பது போல வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கும் வரையில் யாருக்கும் நாங்கள் அனுமதி வழங்கப்போவதில்லை” என்ற உத்தரவாதத்தை நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
போலீசார் தரப்பில் ஆஜரான, அசன் முகம்மது ஜின்னா, “தவெக கரூர் மாவட்ட செயலர் மதியழகன், நகரச செயலர் பவுன்ராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். பொதுச்செயலர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் துணைப் பொதுச்செயலர் நிர்மல் குமார் ஆகியோரை தேடி வருகிறோம்.” என்பதாக தெரிவித்தார்.
முதலில் உயிரிழந்தவர்களுக்கு நீதிமன்றம் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தது. அதனை தொடர்ந்து பல்வேறு கருத்துக்களை பதிவு செய்தார் நீதிபதி என்.செந்தில்குமார்.
“வீடியோவை பார்க்கும் போது வேதனையாக இருக்கிறது. காவல் துறை கண்மூடி கொண்டிருக்கிறதா? எல்லோரும் சட்டத்தின் முன் சமமானவர்கள்தானே? முதல்வர் தொடங்கி பிரதமர் வரையில் பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்கள் இரங்கலையும் நேரில் சென்று ஆறுதலையும் தெரிவித்துள்ள நிலையில், விஜய் மற்றும் நிர்வாகிகள் மட்டும் எப்படி ஒதுங்கிப் போனார்கள்?
விஜய் பயணித்த பேருந்து பலரை இடித்து தள்ளி விபத்துக்குள்ளாக்கியிருக்கிறது. அதற்காக வழக்கு பதிவு செய்யப்படாதது ஏன்? இந்நேரம் அந்த வாகனத்தை பறிமுதல் செய்திருக்க வேண்டாமா? இது மனிதர்களால் உருவாக்கப்பட்ட பேரழிவு. அக்கட்சியின் தலைவனின் மனநிலையை காட்டுகிறது. விஜய்க்கு தலைமைப் பண்பு இல்லை. ஏன் விஜய் மீது வழக்குப்பதிவு செய்யவில்லை. என்ன மாதிரியான கட்சி இது? தலைவர்கள் தலைமறைவானதை ஏற்கத்தக்கது அல்ல. ஒரு கட்டுப்படுத்தப்படாத கலவரம் போல் இது நடந்துள்ளது. நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு அரசு கருணை காட்டுகிறதா? தொண்டர்கள், பின்தொடர்பவர்கள் அனைவரையும் கைவிட்டு தலைவர் முதல் அனைவரும் மறைந்துவிட்டனர். ஆதவ் அர்ஜூனா சட்டத்திற்கு அப்பாற்பட்டவரா? ” என்பது உள்ளிட்டு பல்வேறு கேள்விகளை நீதிபதி என்.செந்தில்குமார் முன்வைத்தார். இதனை தொடர்ந்து, வடக்கு மண்டல ஐ.ஜி. அஸ்ரா கார்க் தலைமையில், நாமக்கல் மற்றும் கரூர் எஸ்.பி. உள்ளடக்கிய சிறப்பு விசாரணைக்குழுவை அமைத்து உத்தரவிட்டிருக்கிறார்.
அடுத்து, தவெக நாமக்கல் மாவட்ட மா.செ சதீஸ்குமார் முன்ஜாமீன் கேட்டு தொடுத்திருந்த வழக்கு விசாரணையிலும், “தொண்டர்கள் மருத்துவமனையை தாக்கியிருக்கிறார்கள். அக்கட்சியின் நிர்வாகியாக உங்களுக்கு இதில் பொறுப்பு இல்லையா? “ என்ற கேள்வியை எழுப்பி முன்ஜாமீன் வழங்க மறுத்துவிட்டார்.
இதுஒருபுறமிருக்க, சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் கரூர் விவகாரம் தொடர்பாக 7 ரிட் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. கே.கே.ரமேஷ், செந்தில் கண்ணன், கதிரேசன், பிரபாகரபாண்டியன், ஜி.எஸ்.மணி, எம்.எல்.ரவி, தங்கம் ஆகியோர் தாக்கல் செய்திருந்த வழக்குகள் நீதிபதிகள் தண்டபாணி மற்றும் ஜோதிராமன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது.

அரசு தரப்பில் ரவீந்திரன், உள்துறை செயலர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ ஆகியோர் ஆஜராகியிருந்தார்கள். வழக்கின் விசாரணையை சிபிஐக்கு மாற்ற வேண்டும்; வழிகாட்டுதல் நெறிமுறைகளை வகுக்க வேண்டும்; அதுவரையில் எந்த கட்சிக்கும் அனுமதி வழங்கக்கூடாது; கூட்டம் நடத்தும் கட்சியினரே பங்கேற்கும் தொண்டர்களுக்கு குடிநீர், உணவு, கழிப்பறை, மருத்துவம், ஆம்புலன்ஸ் சேவை உள்ளிட்டவற்றை வழங்க வேண்டும்; அவர்களிடமிருந்து பிரமாண பத்திரம் எழுதி வாங்க வேண்டும்; டெபாசிட் தொகை வசூலிக்க வேண்டும் என்பது உள்ளிட்டவை இந்த வழக்குகளின் கோரிக்கைகளாக அமைந்திருந்தன.
வழக்கின் விசாரணை தொடக்கக்கட்டத்திலேயே, சிபிஐக்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை ஏற்புடையதல்ல என்பதால் அந்தக் கோரிக்கையை நீதிபதிகள் நிராகரித்தார்கள். மனுதாரர்கள் தரப்பில் பல்வேறு வாதங்கள் முன்வைக்கப்பட்ட நிலையில், நீதிமன்றத்தை அரசியல் மேடையாக்க வேண்டாம் என்ற நீதிபதிகள் சிபிஐ விசாரணை கோரி தொடுக்கப்பட்ட வழக்குகளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்கள்.
இதனையடுத்து, அதே நீதிமன்றத்தில் புஸ்ஸி ஆனந்த் மற்றும் நிர்மல்குமார் தரப்பில் முன்ஜாமீன் கேட்டு தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், “மதியம் 12 மணிக்கு வருவார் என்று அவர்களே தெரிவித்துவிட்டு 7 மணி நேரம் தாமதமாக வந்திருக்கிறார். அதுவரையில் அவர்களுக்கு தண்ணீர், உணவு ஏற்பாடு எதுவும் செய்து தரப்படவில்லை.” என்பது உள்ளிட்ட வாதங்களை அரசு தரப்பில் முன்வைத்த நிலையில், வழக்கின் ஏ2 மற்றும் ஏ3 ஆக இவர்கள் இருப்பதால் இவர்களுக்கான முன்ஜாமீன் வழங்க மறுத்துவிட்டது நீதிமன்றம்.
— ஆதிரன்
Comments are closed, but trackbacks and pingbacks are open.