‘கெணத்த காணோம்’ அரசியல் கதையில் யோகிபாபு!
ஜியோ ஹாட்ஸ்டார் வழங்க, ஆர்.ரமேஷ்பாபு & ஜெகன் பாஸ்கரன் இணைந்து தயாரித்துள்ள படம் ‘கெணத்த காணோம்’. மறைந்த இயக்குனர் சுரேஷ் சங்கய்யா டைரக்ட் பண்ணியுள்ள இப்படத்தின் கதையின் நாயகனாக யோகிபாபு, மற்ற கேரக்டர்களில் லவ்லின் சந்திரசேகர், ரேச்சல் ரபேக்கா, ராமகிருஷ்ணன், ஜார்ஜ் மரியான், கவிதா பாரதி, மொட்டை ராஜேந்திரன் உட்பல பலர் நடித்துள்ளனர். ஒளிப்பதிவு : வி.தியாகராஜன், இசை : நிவாஸ் கே.பிரசன்னா, எடிட்டிங் : ஆர்.ராமர், பி.ஆர்.ஓ. ஸ்ரீவெங்கடேஷ். வெளியீடு : ’ட்ரீம் வாரியர்ஸ்’ குகன்.
படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா, சென்னை பரணி ஸ்டுடியோ தியேட்டரில் மார்ச்.02-ஆம் தேதி இரவு நடந்தது.
இதில் பேசியவர்கள்…..

டைரக்டர் வசந்தபாலன், “வடிவேலுவின் காமெடி டயலாக் இப்போது அரசியல் பேசும் படமாகியுள்ளது. இந்தப் படத்திற்காக தண்ணீர்ப் பஞ்சம் உள்ள கிராமத்தைத் தேடி படக்குழு அலைந்தும் அப்படிப்பட்ட கிராமம் எதுவும் அவர்களுக்கு கிடைக்கவில்லை. இதான் தமிழ்நாடு. நம்ம யோகிபாபுவுக்கு ‘மண்டேலா’ எப்படி அரசியல் சார்ந்த அழுத்தமான படமாக அமைந்ததோ..அந்த மாதிரி இந்தப் படமும் இருக்கும். இந்தப் படத்தை இயக்கிக் கொண்டிருக்கும் போதே சுரேஷ் சங்கய்யா மரணித்த வலியை இந்த மேடையில் உணர முடிகிறது”.
குகன், “இந்தப் படம் மூலம் இயக்குனர் சுரேஷ் சங்கய்யா நம்முடனேயே இருப்பதாக உணர்கிறேன்.
இயக்குனர் கரு.பழனியப்பன், “படத்தை இயக்கியவர் இன்று உயிருடன் இல்லாத போது, அவரைப் பாராட்டிப் பேசுவது மிகவும் அரிது. அதனை சிறப்பாக செய்யும் தயாரிப்பாளர் ரமேஷ்பாபுவுக்காக இப்படம் கண்டிப்பாக ஜெயிக்க வேண்டும்”
நிவாஸ் கே.பிரசன்னா, “இப்படத்தின் ரீரெக்கார்டிங் ஆரம்பித்த பிறகு தான் சுரேஷ் சங்கய்யாவுடன் நெருங்கிப் பழக ஆரம்பித்தேன். படம் முடிய சில நாட்கள் இருக்கும் போது திடீரென இறந்தது அதிர்ச்சியாக இருந்தது. அவரின் நேர்மைக்காக இந்தப் படம் வெற்றி பெற வேண்டும்”.

யோகிபாபு, “ காக்காமுட்டை படத்திலிருந்து சுரேஷ் சங்கய்யாவைத் தெரியும். அவருடைய ‘ஒரு கிடாயின் கருணை மனு’ படத்தில் நான் நடிக்க வேண்டியது. அப்போது எனக்கிருந்த தயக்கத்தால் அப்படம் கைகூடவில்லை. இப்போது என்னை ஹீரோவாக வைத்து படமெடுக்க வேண்டும் என்ற உறுதியுடன் இந்தப் படத்தை எனக்குக் கொடுத்துள்ளார். நல்ல இயக்குனரை நாம் இழந்துவிட்டோம். ஆனால் இப்படம் மூலம் , படத்தில் பேசியுள்ள அரசியல் மூலம் நம்முடனேயே இருக்கிறார். நான் ஏற்கனவே சொன்னபடி அவரின் குழந்தையின் படிப்புச் செலவை நான் ஏற்பதை கடமையாக கருதிகிறேன்” என உருக்கமுடன் பேசிய யோகிபாபு, அதற்கான தொகையை மேடையிலேயே வழங்கினார்.
— ஆண்டவர்








Comments are closed, but trackbacks and pingbacks are open.