வழக்குக்காக தினமும் 60 கி.மீ. அலைய முடியுமா ? போராட்ட களத்தில் வழக்கறிஞர்கள் !
சிவகங்கை மாவட்டம் காரைக்குடிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட சார்பு நீதிமன்றத்தை காரைக்குடி நீதிமன்ற வளாகத்திற்குள் உடனடியாக செயல்படுத்தக்கோரி, வழக்கறிஞர்கள் இரண்டு நாள் (மார்ச்-02,03) அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கி நடத்தி வருகிறார்கள்.
காரைக்குடி மற்றும் திருமயம் ஆகிய இரண்டு இடங்களிலும் சார்பு நீதிமன்றங்கள் அமைக்கப்படும் என்று அரசு தரப்பில் ஏற்கெனவே ஆணை பிறப்பிக்கப்பட்ட நிலையில், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே திருமயத்தில் சார்பு நீதிமன்றம் அமைந்துவிட்ட நிலையில், காரைக்குடியில் மட்டும் இன்னும் சார்பு நீதிமன்றம் செயல்பாட்டுக்கு வராத நிலையில், காரைக்குடி வழக்கறிஞர்கள் சங்கத்தின் சார்பில் இப்போராட்டத்தை முன்னெடுத்திருப்பதாக தெரிவிக்கிறார்கள்.

காரைக்குடி வழக்கறிஞர்கள் சங்கத்தின் தலைவர் ஆறுமுகம், உண்ணாவிரத போராட்டக்குழுவின் தலைவர் கமல் தயாளன், மூத்த வழக்கறிஞர் சங்கர், வழக்கறிஞர் சொர்ணம் உள்ளிட்டோர் முன்னிலையில், காரைக்குடி நீதிமன்ற வளாகத்தில் நூற்றுக்கணக்கான வழக்கறிஞர்கள் பங்கேற்புடன் உண்ணாவிரத போராட்டம் தொடர்ந்து வருகிறது.
மார்ச் -02 அன்று தொடங்கிய முதல்நாள் உண்ணாவிரத போராட்டத்தில், காரைக்குடி மாநகர திராவிடர் கழகத்தின் பொறுப்பாளர் ப்ராட்லா, அதிமுக மாநகர செயலாளர் மெய்யப்பன், அமமுக மாவட்ட செயலாளர் தேர்போகி பாண்டியன், காரைக்குடி வணிகர் சங்கத் தலைவர் திராவிட மணி உள்ளிட்டு காரைக்குடியை சேர்ந்த பிரமுகர்கள் பலரும் தாங்களாகவே முன்வந்து தங்களது ஆதரவை வழங்கி வருவதாகவும் குறிப்பிடுகிறார்கள்.

இந்த விவகாரம் தொடர்பாக, காரைக்குடி வழக்கறிஞர்கள் சங்கத்தின் தலைவர் ஆறுமுகத்திடம் பேசினோம். ”தற்சமயம் காரைக்குடியில் முன்சீப் மற்றும் மாஜிஸ்திரேட் நீதிமன்றங்கள் மட்டுமே இயங்கி வருகின்றன. காரைக்குடியில் சட்டக்கல்லூரி செயல்பட்டு வருகிறது. அழகப்பா பல்கலை கழகம் அமைந்திருக்கிறது. காரைக்குடி மாநகராட்சி அந்தஸ்து பெற்றிருக்கிறது. எப்படி பார்த்தாலும், காரைக்குடி டவுனில் மட்டும் சுமார் 1.5 இலட்சம் மக்கள் வசிக்கிறார்கள். ஆனாலும், காரைக்குடியில் சார்பு நீதிமன்றம் இன்னும் அமையவில்லை.
சிவகங்கை மாவட்ட கூடுதல் நீதிமன்றத்தில் மட்டும் காரைக்குடி நீதிமன்ற எல்லைக்குட்டபட்ட வழக்குகள் சுமார் 70% மேல் நடைபெற்று வருகிறது. தேவக்கோட்டையிலும் இப்படித்தான். இந்த வழக்குகளுக்காக, சுமார் 60 கி.மீ. தூரம் சிவகங்கைக்கு செல்ல வேண்டியிருக்கிறது. வழக்கு தொடுத்தவர்களுக்கும் அலைச்சல். வழக்கறிஞர்களுக்கும் அலைச்சல். காரைக்குடியில் வயதான வழக்கறிஞர்கள் பலர் இருக்கிறார்கள். அவர்கள் தினம் 60 கி.மீ. தூரம் பயணித்து வழக்கை நடத்த முடியுமா? அடுத்து, காரைக்குடியில் சட்டக்கல்லூரி இயங்கி வரும் நிலையில், காரைக்குடியிலேயே அவர்கள் வழக்கறிஞர் பயிற்சியை மேற்கொள்ள முடியும்.
இந்த கள நிலவரங்களையெல்லாம் கருத்தில் கொண்டுதான், மெட்ராஸ் உயர்நீதிமன்றம் காரைக்குடியில் சார்பு நீதிமன்றம் அமைக்க வேண்டுமென்றும், தேவக்கோட்டை மற்றும் சிவகங்கை நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்குகளை இங்கே மாற்ற வேண்டுமென்றும் ஆர்.ஓ.சி. எனும் உத்தரவை பிறப்பித்திருந்தார்கள். திருமயத்திற்கு சார்பு நீதிமன்றம் வந்துவிட்டது. ஆனால், காரைக்குடிக்கு இன்னும் முடிவு தெரிந்தபாடில்லை. அதிகாரிகளை கேட்டால், விரைவில் செய்கிறோம் என்று சொல்லியே காலத்தை ஓட்டிவிட்டார்கள். எங்களுடைய நியாயமான இந்த கோரிக்கையை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டுமென்ற நோக்கில்தான் இந்த அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கியிருக்கிறோம்.” என்கிறார், வழக்கறிஞர் ஆறுமுகம்.

சமீபத்தில், திருச்சி இலால்குடி நீதிமன்ற வழக்கறிஞர்களும் 14 ஆண்டுகளாக வாடகை கட்டிடத்தில் இயங்கி வரும் நீதிமன்ற கட்டிடத்தை மாற்றக்கோரி போராடினார்கள். தற்போது, காரைக்குடியில் வழக்கறிஞர்கள் போராட்டம் தொடங்கியிருக்கிறது. தமிழகத்தில் இயங்கிவரும் நீதிமன்றங்களின் அவலங்களை வெளிச்சத்துக்கு கொண்டு வந்திருக்கிறது, அடுத்தடுத்து தொடர்ந்து வரும் வழக்கறிஞர்களின் போராட்டங்கள்.
– ஆதிரன்
வழக்கறிஞா்கள் உண்ணாவிரத போராட்டம் தொடா்பான அங்குசம் இணையத்தில் வெளியான செய்திகள்
லால்குடி புதிய நீதிமன்றம் எப்போ…?
கலெக்டர வர சொல்லுங்க … வட்டாட்சியரை முற்றுகையிட்ட வக்கீல்கள் !








Comments are closed, but trackbacks and pingbacks are open.