கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சையில் சாதனை படைத்த மதுரை அரசு இராசாசி மருத்துவமனை !
தமிழக அரசு மருத்துவமனைகளில் சென்னைக்கு அடுத்து முதன் முறையாக மதுரை அரசு இராசாசி மருத்துவமனையில் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது.
தமிழக அரசின் உடல் உறுப்பு தானக் கொள்கையை நிறைவேற்றும் வகையில் சுகாதார மற்றும் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் வழிகாட்டுதல் மற்றும் ஆதரவுடனும் தமிழக அரசின் கூடுதல் செயலாளர் சுப்ரியா சாகு,ஐ.ஏ.எஸ்., தேசிய சுகாதார இயக்க நிர்வாக இயக்குநர் அருண் தம்புராஜ், ஐ.ஏ.எஸ்., மருத்துவக் கல்வி இயக்குநர் சங்குமணி, மதுரை அரசு இராசாசி மருத்தவமனை முதல்வர் அருள் சுந்தரேஷ் குமார் ஆகியோரின் ஊக்குவிப்பு மற்றும் வழிகாட்டுதலுடன் மதுரை இராசாசி மருத்துவமனையில் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
தற்செயலாக கீழே விழுந்து தலையில் காயம் ஏற்பட்ட 31 வயதான ஆயுதப்படை காவலர் மோகன்குமார் மதுரை அரசு இராசாசி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்த அவர் 05.02.2025 அன்று மூளைச்சாவு அடைந்தார்.

மேற்படி நபர் உடல் உறுப்பு தானம் செய்யத் தகுதியானவர் என அடையாளம் காணப்பட்டு அவர் மனைவி மற்றும் குடும்பத்தினர் ஒப்புதலுடன் உடல் உறுப்பு தானம் பெறப்பட்டது. அவரிடம் தானமாக பெறப்பட்ட கல்லீரல் 42 வயதான ஆண் நோயாளிக்கு மதுரை அரசு இராசாசி மருத்துவமனையின் சிறப்பு மருத்துவர் குழுவால் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
அறுவை சிகிச்சைக்குப்பிந்தைய நாளான இன்று சிறப்பு சிகிச்சை பிரிவில் தானம் பெற்ற நோயாளியின் உடல்நிலை சீராக உள்ளது.
மேலும் அன்றைய தினமே காவலரிடமிருந்து பெறப்பட்ட சிறுநீரகம் 22 வயதான நோயாளிக்கு அரசு இராசாசி மருத்துவமனையின் சிறப்பு மருத்துவர் குழுவால் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அரசு இராசாசி மருத்துவமனைக்கு ஆயுதப்படை காவலரிடமிருந்து கருவிழி, தோல் மற்றும் எலும்பு நன்கொடையாகப் பெறப்பட்டது. இச்செயலை பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் மதுரை ராஜாஜி மருத்துவமனை முதல்வருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
— ஷாகுல், படங்கள் :ஆனந்தன்.