லாக்கப் டெத் வழக்கு! பத்து இலட்சம் வழங்க உத்தரவிட்ட மனித உரிமை ஆணையம் !
சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள கருமலைக்கூடல் காவல் நிலையத்திற்கு கொலை வழக்கு ஒன்றின் விசாரணைக்காக காவல்நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட 22வயதான கோகுலகண்ணனை, கடுமையாகத் தாக்கி கொலை செய்தனர் சம்பந்தப்பட்ட காவல்துறையினர்.
இதுகுறித்து தகவல் அறிந்து, கோகுலகண்ணின் பிரேதம் இருந்த சேலம் அரசு தலைமை மருத்துவமனைக்குச் சென்று, கோகுலகண்ணனின் பிரேத பரிசோதனை செய்தபோது உடனிருந்து, காவல்துறையினர் அடித்ததால் ஏற்பட்ட பல்வேறு காயங்கள் குறித்து சுட்டிக்காட்டி அதை வீடியோவாக பதிவுசெய்ய வைத்தேன்.

காவல்துறையினர் மீது கொலை வழக்குப் பதிவு செய்யவும், கொலையை மறைக்க கருமலைக்கூடல் காவல்நிலையத்தில் சேலம் மாவட்ட காவல் கண்கானிப்பாளர் சுப்புலட்சுமி, தருமபுரி மாவட்ட காவல் கண்கானிப்பாளர் லோகநாதன், ஈரோடு மாவட்ட காவல் கண்கானிப்பாளர் சிபிசக்ரவர்த்தி ஆகியோர் கட்டப்பஞ்சாயத்து பேசியும், அச்சுறுத்தியும், வற்புறுத்தியும் கோகுலகண்ணனின் குடும்பத்தாருக்கு 12இலட்சம் சட்டவிரோதமாக வழங்கியது குறித்தும், 12இலட்சம் யாரிடம் வசூல் செய்து வழங்கினார்கள் என்பது பற்றி விசாரிக்கவும், வழக்கை சி.பி.ஐ. விசாரிக்கவும், கோகுலகண்ணனின் பிரேதத்தை மறு பரிசோதனை செய்யவும்,
தேசிய மனித உரிமை ஆணையத்திற்கு, தமிழ்நாடு மக்கள் உரிமை இயக்கம் (தற்போது, தமிழ்நாடு மக்கள் உரிமை கட்சி) சார்பாக, மாநிலத்தலைவர் பூமொழி ஆகிய நான் புகார் மனு அனுப்பினேன்.

கோகுலகண்ணன் கொலை குறித்து, வீடியோ & ஆடியோ மற்றும் புகைப்பட ஆதாரங்களை, 10.07.2015. அன்று சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள செய்தியாளர்கள் அரங்கில், அனைத்து ஊடகவியலாளர்கள் முன்பாக வெளியிட்டேன்.
இந்நிலையில், இந்த வழக்கில் விசாரணை மேற்கொண்ட பின்னர், நேற்று 27.05.2025 தீர்ப்பளித்த மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் உறுப்பினர் கண்ணதாசன்,
கோகுலகண்ணன் உயிரிழந்த வழக்கில் மாவட்ட ஆட்சியர், காவல்துறை சார்பில் அளிக்கப்பட்ட அறிக்கைகளில் காவல்துறையினர் தவறு செய்யவில்லை என கூறப்பட்டுள்ளது. அதே நேரத்தில் மனித உரிமைகள் ஆணையத்தின் குழு மேற்கொண்ட விசாரணையில், கோகுலகண்ணன் கடுமையாக தாக்கப்பட்டு உயிரிழந்திருக்கிறார் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.
எனவே, காவல் துறையின் லாக்அப்பில் உயிரிழந்த கோகுலகண்ணனின் குடும்பத்துக்கு தமிழ்நாடு அரசு ரூ.10 லட்சம் இழப்பீடாக வழங்க வேண்டும். இழப்பீட்டு தொகையில் தலா ரூ.2 லட்சம் உதவி ஆய்வாளர்கள் ஹரிஹரன், கீர்த்திவாசன் ஆகியோரிடம் இருந்து வசூலிக்கப்பட வேண்டும். சிறப்பு உதவி ஆய்வாளர்கள் வேணுகோபால், சந்திரசேகர் ஆகியோரிடம் இருந்து தலா ரூ.1.50 லட்சம், காவலர்கள் கிருஷ்ணமூர்த்தி, இளங்கோ மற்றும் மதன் சேகரிடம் இருந்து தலா ரூ.1 லட்சம் வசூலிக்க வேண்டும். மேலும், காவலர்கள் மீது நிலுவையில் உள்ள ஒழுங்கு நடவடிக்கையை 3 மாதத்தில் முடிக்க வேண்டும் என உத்தரவிட்டுளார்.
மனித உரிமை ஆணையத்தின் இந்த உத்தரவை, தமிழ்நாடு மக்கள் உரிமை கட்சி வரவேற்கிறது. அதே வேளையில், தாமதமாக வழங்கப்பட்ட நீதியும் அநீதியே என்று கண்டனத்தை தெரிவிக்கிறது.
பூமொழி, மாநிலத் தலைவர்,
தமிழ்நாடு மக்கள் உரிமை கட்சி.