அன்பு – அறம் – அறிவு – அருள் – யோகா விஜயக்குமார்
அன்பு – அறம் – அறிவு – அருள் – யோகா விஜயக்குமார் – முனைவர் ஜா.சலேத்
நாம் இந்த பூமியில் வாழ்ந்ததற்கு நல்லதா நாலு விசயம் செஞ்சுருக்கனும்னு எங்கள் கிராமத்தில் பெரியவங்க சொல்லி கேள்விப்பட்டு இருக்கேன். தான் இந்த பூமியில் வாழ்வதற்கே இந்த நாலு விசயத்துக்காகத்தான் எனத் தம் வாழ்வையே அடையாளம் காட்டிய மகத்தான ஆளுமைதான் திருச்சிராப்பள்ளியை நடுவமிட்டு போதிமரமாய் இயங்கும் அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் பெ.விஜயகுமார்.

மயான பூமியில் மனைவி, மகளுடன் ஆதரவற்ற, அனாதை பிணங்களை நல்லடக்கம் செய்து வருவது மனிதநேயப்பணி.
பசிப்பிணி போக்க அன்றாடம் அன்னதானம்.
அறிவார்ந்த சமூகத்தை உருவாக்க இலவச நூலகம்.
பாரம்பரியம் காக்க புழங்கு பொருட்கள் காட்சியகம்
மயான பூமியின் அன்புப்பணியில் ..
“மரணமானது துயரத்தின் உச்சம் ஆகும். உடலை அவரின் இறந்தவரின் சொந்த இருப்பிடத்துக்கோ, வீட்டுக்கோ, நெருக்கமானவர்களுக்கோ ஊருக்கோ உறவினர்க்கோ தகவல் கொடுக்கமுடியாமல் பெயர்விலாசம் தெரியாத உரிமைகோரப்படாத உடல்கள் ஏராளம். இப்படி உரிமை கோரப்படாத உடலை உரிய மரியாதையுடன் நல்லடக்கம் செய்து வருகிறோம். விபத்தில் பலியாகி உடல் மூட்டையாய் வந்ததும் உண்டு. ஆற்றுமதகில் ஊறிய நிலையில் கிடந்த உடலும் உண்டு எல்லாவற்றையும் காவல்துறையினர் உதவியோடு அடக்கம் செய்து வருகிறோம்.” எனக்கூறுகிறார் .

இவரது இணையர் வழக்கறிஞர் சித்ரா. மகள் கீர்த்தனா வழக்கறிஞர் பட்டப்படிப்பினைப் படித்துவருகிறார். கொரோனா இரண்டாவது அலை உச்சத்தில் இருந்தபோது பலஉடல்களை நல்லடக்கம் செய்துள்ளோம்.ஆதரவற்ற அனாதை பிரேத நல்லடக்க பணியினை மனைவி, மகளுடன் செய்யும் போதுபலர் எதிர்ப்பு தெரிவித்தனர் என்னைப் பொறுத்தவரை இது ஒரு புனிதப்பணியாக நான் கருதுகிறேன். இவர்களுக்கு மரியாதை செய்ய ஆளில்லை மலர்மாலை அணிவிக்க யாருமில்லை. இறுதி ஊர்வலத்திற்கு யாருமில்லை. பிரேதத்திற்கு வாய்க்கரிசி போட ஆளில்லை. இறந்த நபருக்கு ஒரு மகன் இருந்தால் ஒரு மகள் இருந்தால், ஒரு பேத்தி இருந்தால் என்ன செய்வார்களோ அந்தக்காரியத்தை நாங்கள் செய்கிறோம்.
பசிப்பிணி போக்கும் அறப்பணியில்…

உலகம் எவ்வளவோ முன்னேறினாலும் வறுமை மாறாமல் தொடர்கிறது. கொடிது கொடிது வறுமை கொடிது வறுமையின் விளைவை களப்பணியால் அறிந்து அதற்குண்டான அணுகு முறை கொள்கையுடன் தினசரி உணவகங்களில் உபரியாகும் உணவினை பெற்று வறியவர்களுக்கும் எளியவர்களுக்கும் கொண்டுசென்று அறப்பணியாற்றி வருகிறார். முதுமையாலோ, உறவுகள் கைவிடப்பட்டதாலோ சாலையோரங்களிலேயே உண்டு உறங்கி கிடக்கும் இதயங்களில் கிழக்குச் சூரியனாய் தினந்தோறும் உதயமாகிறார் விஜயகுமார்.
நூல்களை இளைப்பாறச் செய்யும் அறிவுப்பணியில்…

நம் முன்னோர்களின் வாழ்க்கை முறையை நிலவியல், வணிகம், போராட்டம் இயற்கைச் சூழல், சமூக ஒழுக்கம் உள்ளிட்ட பண்டைய தமிழரின் தொல்லறிவை உறுதி செய்ய நமக்குத் துணை செய்வது சங்க இலக்கியங்களே. பண்டைத்தமிழர்கள் கடல் வணிகத்தில் ஈடுபட்டார்கள் என்பதை அரிக்கமேட்டில் கிடைத்த வரலாற்றுச்சான்றுகள் உறுதிபடுத்துகின்றன. சங்கப் பாடல்கள் குறிப்பிடும் நீர் பராமரிப்பு முறைகள் கீழடி அகழாய்வுகளில் கண்டுபிடிக்கப்பட்ட வடிகால் அமைப்புகளோடு பொருந்துகின்றன. இப்படி எண்ணற்ற அறிவுக்களஞசியங்களைச் சேகரித்து அரிய கருவூலமாக நூலகத்தை உருவாக்கியுள்ள இவரை வாழ்த்துவதால் வாழ்த்து பெருமை கொள்ளும்.
புழங்குபொருள்கள் சேகரிக்கும் அருள்பணியில்…
தொல்லறிவு என்பது பண்டைய தமிழர்களின் வாழ்க்கை முறையை வெளிச்சம் போடும் அறிவியல். பிறப்பு தொடங்கி அவர்கள் பயன்படுத்திய மண்பாண்டங்கள், கருவிகள், கல்வெட்டுகள், குடியிருப்புகள், தகன முறைகள் வரையிலான அனைத்தையும் ஆய்வு செய்து வரலாற்றின் உண்மைச் சித்திரத்தை உருவாக்குவதே தொல்லறிவின் பணி.
மண்பாண்டங்களில் இருந்த கலைச் சித்திரங்கள் அழகிய கைவினையைப் புகழ்கின்றன. உலோகச் சிற்பங்கள், தங்fk;> வெள்ளி அலங்காரங்கள் அவர்களின் கைவினைத் திறமைக்கு சான்று. கல்வெட்டுகள் அவர்கள் எழுத்தறிவையும் இலக்கிய உணர்வையும் நிரூபிக்கின்றன. தமிழர்களின் தொல்லறிவு உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது. ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமையானது என்பதால் மட்டுமல்;ல. அதையும் கடந்து பண்டைய தமிழரின் தொன்மைக் கலாச்சாரம்> அறிவியல்> சமூக நாகரிகத்தை வெளிப்படுத்துகிறது என்பதனாலுமே அது போற்றப்படுகிறது.

இத்தகைய தொல்லறிவு தொடர்புடைய புழங்குபொருள்களைச் சேகரித்து தம் இல்லத்தையே அருங்காட்சியகமாக மாற்றி அதிலே இல்லறம் நடத்தி வருவது நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது. தம் இல்லத்தையே அருங்காட்சியகமாக வைத்து தமிழரின் வரலாற்றை நத்தை தம் முதுகில் கூட்டைத் தூக்கிச் செல்வதைப்போலத் தூக்கிச் செல்லும் இக்குடும்பத்தினரை கரம் கூப்பி வணங்க வைக்கிறது. அந்த பொருள்களை ஆவணமாக்க நூலாக்கும் பணியையும் தொடங்கியுள்ளார்.
இருபத்தைந்து முறைக்கு மேல் குருதிக்கொடை அளித்துள்ளார்தனது உடலினை தானமாக வழங்க உறுதியேற்று, மனையி மகள் ஒப்புதலுடன் திருச்சி கி.ஆ.பெ விஸ்வநாதன் அரசு மருத்துவக்கல்லூரியில் பதிவு செய்துள்ளார். இந்த சமூகத்திற்கு ஒருவரியில் ஏதாவது சொல்லுங்களேன் என்ற வினாவிங்கு நெற்றியில் அடித்தாற்போலச் சொல்கிறார் வாழ்நாளிற்குப்பிறகு படமாய் இருப்பதைவிட பாடமாய் இருப்போம் என.
ஆம்… நீங்கள்தாம் எங்கள் கண்ணெதிரே நிற்கும் போதிமரம். தொடரட்டும் தங்களின் அன்புப்பணி, அறப்பணி, அறிவுப்பணி, அருள்பணி.
முனைவர் ஜா.சலேத்








Comments are closed, but trackbacks and pingbacks are open.