இறந்த மனைவியின் உடலை பைக்கில் கட்டி எடுத்துச்சென்ற கணவர்!
மத்திய பிரதேசத்தின் ஜபல்பூரை சேர்ந்தவர் அமித், இவர் வேலை நிமித்தமாக கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக தனது குடும்பத்துடன் மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் அருகில் உள்ள கராடி என்ற இடத்தில் வசித்து வருகிறார்.
இந்தநிலையில், அமித் மற்றும் அவரது மனைவி கியார்சி அமித் இருவரும் சொந்த ஊர் செல்வதற்கு நாக்பூர் மற்றும் ஜபல்பூர் சாலையில் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது மொர்பதா என்ற இடத்திற்கு அருகில் சென்றபோது அவர்களது வாகனத்தின் மீது லாரி ஒன்று இடித்துவிட்டது. இதில் சம்பவ இடத்திலேயே மனைவி கியார்சி இறந்து போனார். உடனே அந்த வழியாக வந்த வாகனங்களை நிறுத்தி தனது மனைவியின் உடலை எடுத்துச்செல்ல உதவும்படி அமித் கேட்டுக்கொண்டார். ஆனால் எந்த வாகன ஓட்டியும் வண்டியை நிறுத்தி உதவி செய்யவில்லை. இதனால் விரக்தியடைந்து வேறு வழியில்லாமல் தனது மனைவியின் உடலை இரு சக்கர வாகனத்தின் பின்புறம் வைத்து கயிற்றால் கட்டிக்கொண்டு வாகனத்தைத் தனது சொந்த ஊருக்கு எடுத்துச்செல்ல ஆரம்பித்தார். முதலில் பொதுமக்கள் அதனைச் சரியாகக் கண்டுகொள்ளவில்லை.
ஆனால் அவர் இறந்த பெண்ணின் உடலை எடுத்துச்செல்வதை அறிந்த சிலர் அவரது வாகனத்தை நிறுத்த முயன்றனர். ஆனால் வாகனத்தை நிறுத்தினால் பிரச்னை என்று பயந்து வாகனத்தை வேகமாக எடுத்து சென்றுவிட்டார். அவர் தனது மனைவியின் உடலை வாகனத்தில் எடுத்துச் செல்வதை சிலர் வீடியோ எடுத்தனர் அது சமூக வலைத்தளத்தில் வைரலானது. இது குறித்து சிலர் போலீஸாருக்கும் தகவல் கொடுத்தனர். உடனே போலீஸார் விரைந்து செயல்பட்டு அமித் சென்ற இரு சக்கர வாகனத்தைத் தடுத்து நிறுத்தி, அவரிடம் இருந்த மனைவியின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேதப் பரிசோதனையின் அறிக்கை வந்த பின் அதன் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்போவதாக போலீஸார் தெரிவித்தனர்.
– மு.குபேரன்