மகாத்மாவை மாற்றிய மதுரை மண் !
மஹாத்மாவை மாற்றிய மதுரை மதுரைக்கும் மஹாத்மா காந்தியடிகளுக்கும் முக்கிய தொடர்பு உள்ளது.
அவரது வாழ்வை மாற்றிய முக்கிய ஒரு முடிவை அவர் மதுரை மண்ணில் எடுத்தார் என்றால் அதுவும் மிகையில்லை
செப்டம்பர் 21 ஆம் தேதி அக்கால மெட்ராஸ் மாநகரத்தில் இருந்து +மதுரை மாநகர் நோக்கி ரயிலில் பயணமானார் காந்தியடிகள்.
அப்போது அவரோடு உடன் பயணித்த சக பயணிகளாக தொழிலாளிகளைப் பார்க்கும் போது அவர்கள் உடுத்தியிருந்த உடை அனைத்தும் வெளிநாட்டு உடைகளாக இருந்தன.
அவர்களுடன் பேசத் தொடங்கிய காந்தியடிகள்
“ஏன் நம் நாட்டு கதர் ஆடையை அணிவதை விடுத்து அந்நிய நாட்டு உடைகளை அணிந்திருக்கிறீர்கள்?” என்று கேட்க அதற்கு அந்தத் தொழிலாளிகள்
“எங்களுக்கும் கதர் உடுத்த ஆசை தான். ஆனால் அதை விலை கொடுத்து வாங்க கையில் பணம் இல்லை” என்றனர்.
அப்போது காந்திக்கு சுருக்கென நெஞ்சில் முள் தைத்தது போன்றிருந்திருக்க வேண்டும்.
அப்போது தான் அவர் அக்கால இந்திய நாட்டின் வறுமையை நேரடியாக உணர்ந்தார்.
அதன் வலியை உணர்ந்தார்.
அதற்கடுத்த நாள் காலை, மதுரையில் இறங்கியதும் மேற்கு மாசி வீதியில் கதவு எண் 251இல் வசித்து வந்த தனது சீடர் வீட்டில் மாடியில் சிறிது ஓய்வுக்குப் பிறகு வெறும் கதர் வேட்டியும் தோலில் கதர் துண்டுடன் வெளியே வந்தார்.
அதைப் பார்த்ததும் அனைவருக்கும் ஆச்சரியம் கலந்த அதிர்ச்சி.
அவர் கூறினார் “இனி இப்படித் தான் இருக்கப் போகிறேன்.
எனது நாட்டின் பெரும்பான்மை மக்கள் இப்படியிருக்க நான் மட்டும் வேறு மாதிரி உடை அணிவது சரியாக இல்லை.
எனக்கு இந்த எண்ணத்தை ஊட்டி , இத்தகைய மனமாற்றம் ஏற்பட தைரியமும் தெம்பும் கொடுத்தது மதுரை தான்” என்றார்.
பிறகு அங்கிருந்து இராம்நாடு வழியாக திருநெல்வேலி செல்லும் பயணத்தை துவக்கினார்.
வழியில் அவரை சந்திக்க பல ஆயிரம் பேர் பொட்டலில் காத்திருந்தனர். அவர்கள் அனைவரையும் இதே உடையில் சந்தித்தார். வாழ்த்துகளைப் பெற்றார்.
காந்தியடிகள் தங்கியிருந்த அந்த சீடரின் வீடு -அவரது நினைவாக மேற்கு மாசி வீதியில் காதி எம்போரியமாக உள்ளது.
காந்தியடிகள் மக்களைச் சந்தித்த அந்த பொட்டல் தற்போது காமராஜர் சாலையில் அலங்கார் தியேட்டர் அருகில் காந்தி பொட்டல் என்று அழைக்கப்படுகிறது. அங்கு அவரது திரு உருவச் சிலையும் அமைந்துள்ளது.
மதுரையில் தனது உடையை மாற்றிக் கொண்ட அவர் வாழ்நாள் முழுவதும்
ஏன்… இங்கிலாந்து ராஜ வம்சத்தின் அரசர் ஐந்தாம் ஜார்ஜ் அவர்களை சந்திக்கும் போதும் சரி.. எப்போதும் உடையை மாற்றிக் கொள்ளவே இல்லை.
காந்தியடிகள் அப்படித்தான்= ஒன்றை முடிவு செய்து விட்டால் மறு பேச்சுக்கு இடமில்லை.
இப்படித்தான் அவரது சுய பரிசோதனைகள் முழுவதும் இருந்தன.
மதுரையில் அவர் கதர் வேட்டி மற்றும் துண்டை ஆடையாக பூண்டமையை நினைவு கூற காந்தி சுட்டுக் கொல்லப்பட்ட பின்பு அவரது ரத்தக் கரை தோய்ந்த துண்டு இப்போதும் காந்தி அருங்காட்சியகத்தில் அவரது தியாகத்தை ஈரத்துடன் சான்று பகர்கின்றது.
காந்தியடிகள் வாழ்க
அன்னாரின் தியாகம் வாழ்க
Dr.அ.ப.பரூக் அப்துல்லா
பொது நல மருத்துவர்







Comments are closed, but trackbacks and pingbacks are open.