பொதுச்சேவையில் பெண்கள் ! மகிழ்வித்த மகிளா சக்தி சிறப்பு விருது !
தமிழகத்தின் சிறந்த சேவை நிறுவனமாக முதல்வரின் கரங்களால் 2025 ஆம் ஆண்டிற்கான விருது பெற்ற பெருமைக்குரிய, முன்னோடி தொண்டு நிறுவனமான SEVAI நிறுவனத்தின் சார்பில், பொதுநல தொண்டில் அர்ப்பணிப்பு மிக்க சேவையாற்றிய பெண்களை கௌரவிக்கும் வகையில் மகிளா சக்தி சிறப்பு விருது வழங்கும் விழா-வை நடத்தியிருக்கிறார்கள்.
டிசம்பர் – 24 அன்று, திருச்சி கலையரங்கத்தில் நடைபெற்ற இவ்விழாவில், ஓய்வுபெற்ற நீதிபதியும் தமிழ் ஆர்வலருமான குகன் என்கிற கே.கருணாநிதி சிறப்பு விருந்தினராக பங்கேற்று விழாவை சிறப்பித்தார்.
திருச்சியை சேர்ந்த ராஜேஷ்வரி சுப்புராமன், புதுக்கோட்டையை சேர்ந்த ஜெயா வெங்கடாச்சலம், மேலப்பட்டியைச் சேர்ந்த ராஜேஸ்வரி சந்திரசேகர், வனிதா பழனிச்சாமி, திருச்சி மெர்சி கிளாரா, திருச்சி காந்திமதி மற்றும் டாக்டர் கற்பகம் கிருபா ராஜேஷ்வரி ஆகிய 7 பேருக்கு ஓசோன் (OZONE) நிறுவனத்தின் சார்பில் மகிளா சக்தி சிறப்பு விருது வழங்கப்பட்டது. விருதுகளை சிறப்பு விருந்தினர் ஓய்வுபெற்ற நீதிபதி குகன் என்கிற கே.கருணாநிதி வழங்கி, அவர்களது சேவைகளை பாராட்டி பேசினார்.
நிறைவாக, சேவை நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் செயல் இயக்குநரும் ஓசோன் நிறுவனத்தின் தலைவருமான டாக்டர் கே.கோவிந்தராஜு பேசுகையில், “இன்று, சமூகப் பணிகளில் மாற்றத்தை ஏற்படுத்திய நம்பமுடியாத பெண்களைக் கௌரவிக்க நாம் இங்கே ஒன்றுகூடியிருக்கிறோம். உங்களது அர்ப்பணிப்பு, ஆர்வம் மற்றும் அயராத முயற்சிகள் அனைத்தும் நம் அனைவருக்கும் ஊக்கமளிப்பதாக அமைந்திருக்கிறது. நீங்கள் பலருக்கு முன்மாதிரியாக இருக்கிறீர்கள். தைரியம் மற்றும் இரக்க குணத்தால் எப்படியெல்லாம் சாதிக்க முடியும் என்பதை நிரூபித்திருக்கிறீர்கள். பொது சேவையின் உன்னதமான உணர்வை பிரதிபலித்திருக்கிறீர்கள்.” என்பதாக நெகிழ்ச்சி உரையாற்றினார்.







Comments are closed, but trackbacks and pingbacks are open.