’மனிதர்கள்’ சினிமாவும் சில சேதிகளும் !
மே.30 ‘மனிதர்கள்’ என்ற படம் ரிலீசாகியுள்ளது. ’ஸ்டுடியோ மூவிங் டர்ட்ல் & ஸ்ரீகிரிஷ் பிக்சர்ஸ் பேனரில் ராஜேந்திர பிரசாத், நவீன்குமார், சாம்பசிவம் ஆகியோர் தயாரித்திருக்கிறார்கள். தரணிதரன், பரிமளா குலோத்துங்கன், யுவராஜ் ஆகியோர் இணைத் தயாரிப்பாளர்கள். படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் ராம் இந்திரா, பில்வேலன், தக்ஷா, குணவந்தன், அர்ஜுன் தேவ், சாம்பசிவம் ஆகிய ஐந்து புதுமுகங்கள் நடித்திருக்கிறார்கள். ஹீரோயின் கிடையாது, ஃப்ளாஷ்பேக் கிடையாது, படத்தில் அதற்கான அவசியமும் இல்லை. ஒளிப்பதிவு : அஜய் ஆபிரகாம் ஜார்ஜ், இசை : அனிலேஷ் மேத்யூ, எடிட்டிங் : தின்சா, பாடல்கள் : கார்த்திக் நேத்தா. பி.ஆர்.ஓ. : சதீஷ் & சிவா [ எய்ம்]
ஒரு இரவில் ஆறு நண்பர்களுக்குள் குடிபோதையில் நடக்கும் மோதலில் ஒரு நண்பன் இறந்துவிடுகிறான். எதேச்சையாக நடந்த இந்த சம்பவத்தால் வெலவெலத்துப் போகும் மீதி இருக்கும் ஐந்து பேரும் கார் டிக்கியில் நண்பனின் பிணத்தைப் போட்டு, அதை எப்படியாவது எரித்துவிட வேண்டும் அல்லது புதைத்துவிட வேண்டும் என்ற பதைபதைப்புடன் பயணம் செய்கிறார்கள். இந்த ஐந்து மனிதர்களும் எப்படிப்பட்டவர்கள், நண்பனின் பிணத்தை என்ன செய்தார்கள்? என்பதன் க்ளைமாக்ஸ் தான் இந்த ’மனிதர்கள்’.
ஒரு இரவில் கதை நடந்து முடிகிறது. அதுவும் காட்டுப்பகுதிகளில், கிராமச் சாலைகளில், தேசிய நெடுஞ்சாலையில். செல்போனில் மலர் என்பவர் அழைப்பதிலும் ஃபேமிலி போட்டோவிலும் தான் பெண் கேரக்டர் உள்ளது. அவர் தான் இறந்த நண்பனின் மனைவி.
படத்தில் நடித்திருக்கும் ஐந்து பேருமே புதுமுகங்கள் என்றாலும் நன்றாகவே நடித்திருக்கிறார்கள். ஒன்றரை மணி நேரப்படத்தில் முக்கால்வாசி சீன்கள் காருக்குள்ளேயே நடப்பதால், பயம், படபடப்பு, இதையெல்லாம் டைட் குளோசப் வைத்து அந்த ஐந்து பேரையும் நன்கு பயன்படுத்தியுள்ளார் டைரக்டர் ராம் இந்திரா. யாருடைய நடிப்பையும் குறை சொல்ல முடியாது தான். இந்த ‘மனிதர்களில்’ அசாத்திய மனிதர் என்றால், அது கேமராமேன் அஜய் ஆபிரகாம் ஜார்ஜ் தான். இரவு நேர காரின் வேகம், காருக்கு அடியில் கேமரா ஆங்கிள் என சிரத்தையாக உழைத்துள்ளார் அஜய்.
ஆனால் ஒரு குறும்பட அளவுக்கு தாங்கக்கூடிய கதையை ஒன்றரை மணி நேர முழு நீள சினிமாவாக மக்கள் எப்படி ஏற்பார்கள் என்பது தான் நமக்குப் புரியவில்லை.
படம் முடிந்த பிறகு பத்திரிகையாளர்களைச் சந்தித்தனர் படக்குழுவினர். சிறப்பு விருந்தினர்களாக நடிகர் சந்தோஷ் பிரதாப்பும் தயாரிப்பாளர் சி.வி.குமாரும் கலந்து கொண்டனர்.
“நான் பெரிய இயக்குனர்களிடம் வேலை செய்யாமல், குறும்படங்களை இயக்கி அனுபவம் பெற்ற பின் இந்தப் படத்தை நண்பர்களின் உதவியுடன் ஆரம்பித்தோம். 25 நாட்களில் ஷூட்டிங்கை முடித்தோம். ஆனால் ஷூட்டிங் நடந்த அதே லொக்கேஷனில் அதே இரவு நேரங்களில் 20 நாட்கள் ரிகர்சல் பார்த்தோம். இந்தப் படம் பாதிப்பேருக்குப் பிடிக்கலாம், பாதிப்பேருக்கு பிடிக்காமல் போகலாம். இது போன்ற புதுமுயற்சியை மக்களுக்குக் கொண்டு செல்ல பத்திரிகையாளர்கள் உதவ வேண்டும். ஐந்திலிருந்து பத்து தியேட்டர்கள் தான் கிடைக்கும் என எதிர்பார்த்தோம். ஆனால் இப்போது ஐம்பதுக்கும் மேற்பட்ட தியேட்டர்கள் கிடைத்துள்ளன. இதுவே எங்களுக்கு பெரிய வெற்றி தான். இனிமேல் மக்களின் கைகளில் தான் படத்தின் வெற்றி உள்ளது” என பல சேதிகளைச் சொன்னார் டைரக்டர் ராம் இந்திரா.
— மதுரை மாறன்.