அறிவோம் (மன்னா மெஸ்) Non veg கடை
சமீபத்தில் கோவையில் சாய்பாபா காலனியில் உள்ள மன்னாமெஸ் என்ற இந்த ஹோட்டலுக்கு போனேன்.
இந்த Insta Influencers வலையில் பல நாள் சிக்காமல் இருந்த நிலையில் இந்த முறை வகையாக சிக்கினேன்.
அசைவ முழு சாப்பாடு 250 ரூபாய். இலையை போட்டுவிட்டு ஊறுகாய் உப்பு என எதையும் வைக்காமல் நேராக உருளை பொரியலையும் பருப்பு அவியலையும் வைத்தார்கள்.
அசைவத்தில் ஆரோக்கியம் என பெயர் இருப்பதால் அப்பளம் உள்ளிட்ட எண்ணெய் பொருட்களை தவிர்க்கிறார்கள் என நினைத்துக் கொண்டேன்.
நேராக நடுவில் சாதத்தை கொட்டினார்கள். Insta-வில் பேசியவர்கள் நாட்டுகோழி குழம்பு, நண்டு குழம்பு, மீன் குழம்பு, மட்டன் குழம்பு எல்லாம் கொடுப்பார்கள் அது இது என அளந்து விட்டிருந்தார்கள்.
முதலில் கருவாடு தொக்கு வைத்தார்கள் ஒரே ஒரு கருவாடு துண்டு இருந்தது சுவையும் நன்றாக இருந்தது.
பரிமாறிய அக்கா நாட்டுக்கோழி குழம்பு ஊற்றட்டுமா என கேட்டார்கள் இருந்த பசிக்கு சரி என தலையை மட்டும் ஆட்டினேன்.
வெறும் குழம்பை மட்டும் ஊற்றினார்கள். அதில் கோழியையும் காணவில்லை நாட்டையும் காணவில்லை.
நண்டு தொக்கு கொடுத்தார்கள் அதில் நண்டு எங்கே இருக்கிறது என தேடுவதற்குள் மட்டன் குழம்பு ஊற்றட்டுமா என்றார்கள்?
இந்த இடத்தில் எனது அதிர்ஷ்டம் எனக்கு கை கொடுத்தது எனது சுண்டு விரலுக்கும் பாதியான அளவில் ஒரு துண்டு மட்டன் கிடைத்தது. என் அதிர்ஷ்டத்தை நானே பாராட்டிக் கொண்டிருக்கும் போதே அடுத்து ரசம் தயிர் இருக்கிறது என சொன்னார்கள்.
குழம்பு குழம்பு, ரசம் ரசம்,மோரு மோரு என சாப்பிடும் சோத்துமூட்டை வகையறாவில் வந்த எனக்கு அது கொஞ்சம் அதிர்ச்சியை கொடுத்தது. வேறு என்ன இருக்கிறது என தயக்கத்துடன் கேட்டேன் மீன் குழம்பு இருக்கிறது என்றார்கள் அடடா கோவை மீன் குழம்பு சாப்பிட்டு ரொம்ப நாள் ஆகி இருந்ததால் கொடுங்கள் என்றேன். மட்டன் எந்த அளவிற்கு இருந்ததோ அதே அளவிற்கு ஒரு துண்டு மத்தி மீன் வந்து கிடைத்தது.
அசைவத்திலேயே ஊறிப்போன என் நாக்கிற்கு அது போதவில்லை. வெட்கத்தை விட்டு அந்த அக்காவிடம் மீண்டும்
கருவாடு தொக்கு என கேட்டேன். கடந்த முறை எந்த சைஸில் கிடைத்ததோ அதே சைஸில் ஒரு துண்டு கருவாடு கிடைத்தது.
இலையில் இன்னும் கொஞ்சம் வெள்ளை சோறு இருந்தது. அடுத்து என்ன வேண்டும் என கேட்பதற்கு ஆளை ஐந்து நிமிடங்களுக்கு தேட வேண்டியதாக இருந்தது பிறகு அதே அக்கா வந்தார் அவராக முடிவு செய்து ரசம் கொடுக்கட்டுமா என்றார். சரி கொடுங்கள் என்று உள்ளங்கை அளவு இருந்த சாதத்தில் பாதியை ரசத்திற்கு ஒதுக்கிவிட்டு தயிருக்காக காத்திருந்தேன் தயிர் கிடையாது மோர் தான் இருக்கு என்றார்.
மோருக்கு தொட்டுக் கொள்ளலாம் என்றால் எதுவுமே இல்லை மோரில் உப்பும் இல்லை இலையிலும் உப்பில்லை இங்க வந்தது ஏன் தப்பு தாண்டா என நொந்து கொண்டே சாப்பிட்டு முடித்தேன்.
இளநீர் பாயாசம் சூப்பராக இருக்கும் சாப்பிடுகிறீர்களா என்றார் சப்ளயர். சரி என சொல்லிவிட்டு கையை கழுவி விட்டு வருவதற்குள் சாப்பிட்ட இலையையும் காணும் உட்கார்ந்திருந்த நாற்காலியையும் காணோம் அதற்குள் என்னை போன்ற இன்னொரு இளிச்சவாயனை உட்கார வைத்திருந்தார்கள்.
கையில் பாயாசத்தை கொடுத்து விட்டு பல் இளித்தார் அவர். இதை நான் இப்போது எங்கெங்கே உட்கார்ந்து சாப்பிடுவது என கேட்டவுடன் ஐயோ சாரி சார் என்றார்.

உங்க கடைக்கு வந்தேன் பாருங்க நான் தாங்க சாரி சொல்லணும் என மனதுக்குள் நினைத்துக் கொண்டு பாயசத்தை அவர்களிடமே கொடுத்துவிட்டு பணம் செலுத்தப் போனால் போன் பே பேடிஎம் எதுவுமில்லை என சொல்லிவிட்டார்கள் மானத்தை காப்பாற்ற பணமிருந்தது.
அதைக் கொடுத்துவிட்டு கடைக்கு ஒரு பெரிய கும்பிடு போட்டு விட்டு இனி உங்கள் பக்கம் தலையே வச்சு பார்க்க மாட்டேன் டா என தலை தெறிக்க ஓடி வந்தேன்.
Non veg meals -ல் non veg இல்லாமல் சாப்பிட்ட முதலும் கடைசியுமான கிறுக்கன் நானாக இருக்கட்டும் என்கிற நல்ல எண்ணத்தில் தான் இந்த பதிவு
நூறு ரூபாய் மதிப்பில் உள்ள சாப்பாடை போட்டுவிட்டு 250 ரூபாய் வசூலிக்கும் இந்த கடை முதலாளி சீரும் சிறப்புமாக இருக்கட்டும். விளம்பரத்துக்கு செலவு செய்கிற பணத்துல கொஞ்சமாவது தரமான சாப்பாடு கொடுக்கிறதுல செலவு செய்யலாம்ங்கறது அவருக்கு என்னுடைய தாழ்மையான வேண்டுகோள்.
60 ரூபாய்க்கு மீன் குழம்பு சாப்பாடு விக்கிற தள்ளுவண்டி அக்காவோட ருசிக்கும் மனசுக்கும் இந்த படவாதிகள் பக்கத்தில் கூட வர மாட்டார்கள்.