”வாழ்க்கை இன்னும் முடியலமா, இனிமேதான் ஆரம்பிக்க போகுதுமா…“
குழந்தை திருமணத்திற்கு எதிரான மரகதம் குறும்படம் !
”இந்த கட்டிலுக்கு கூட தெரியும் என்னோட வழி என்னனு … இந்த கடிகாரம் என்னுடைய கஷ்டத்தை நினைத்துதான் ஓடாமல் இருக்கோ என்னவோ” … தங்கை உடன் மரகதம் பள்ளிக்கு செல்ல தாயோடு புறப்படுகிறாள். மனைவியை இழந்த வயதான ஒருவர் மரகதத்தை பெண் கேட்டு சீர் வரிசை உடன் வழி மறிக்கிறார். ”நீங்கள் எல்லாம் தேடி வந்தது எனக்கு சந்தோஷம் தான் அவள் கல்லூரி வரை படிக்க வேண்டும்” என்கிறார் மரகதத்தின் தாயார். ”இத பாரு அண்ணனுக்கு யாரும் உத்தாசை இல்லை அவர் முதல் மனைவி இறந்துவிட்டார். உனக்கோ இரண்டும் பெண் குழந்தைகள் படிக்க வைக்க வேண்டும் என்றால் கட்டுக்கட்டாக நோட்டுகள் வேண்டும்.” என்கிறார் மாப்பிளை உடன் வந்தவர்.
”இங்க பாரு மரகதத்தை நான் படிக்க வைக்கிறேன். உங்கள் பெயரில் ஒரு தோப்பை எழுதி வைக்கிறேன். மரகதத்தை அனுப்பி வைங்க” என்று கூறி வழுக்கட்டாயமாக சிறுமி மரகதத்தை கையைப் பிடித்து இழுத்துச் சென்று தாலி கட்டி மனைவி ஆக்கி விடுகிறார் அந்த வயதான மாப்பிள்ளை.
ஒருநாள் மரகதம் தோழிகளுடன் பல்லாங்குழி (பாண்டி) , விளையாடிவிட்டு வீட்டுக்கு வரும்போது, ”ஏய் நில்லு ஏங்க போன, யாரை கேட்டு போன, உன்ன தொட்டு தாலி கட்டியவன் நான் இனி வீட்டை விட்டு வெளியே போன இரண்டு கால்களையும் வெட்டி விடுவேன்” என்று மிரட்டுகிறார் மரகதத்தின் வீட்டுகாரர்.
கதவை தாழிட்டு, ”இந்த கட்டிலுக்கு கூட தெரியும் என்னோட வழி என்னனு, இந்த கடிகாரம் என்னுடைய கஷ்டத்தை நினைத்துதான் ஓடாமல் இருக்கோ என்னவோ” என்கிறாள் மிரட்சியுடன்.
”அய்யோ, மரகதம், உன் கணவர் கார் விபத்தில் இறந்து விட்டாராம். உன் வாழ்க்கையே நாசமா போச்சே என்று மரகதத்தின் தாயார் கதறி அழ, என் வாழ்க்கை இன்னும் முடியலமா, இனிமேதான் ஆரம்பிக்க போகுதுமா…” என சடங்கு முடித்து புன்னகையோடு தாய்க்கு ஆறுதல் கூறிவிட்டு, தங்கையோடு மீண்டும் பள்ளிக்கு செல்ல ஆயத்தம் ஆகிறாள் மரகதம்.
”குற்றங்களிலிருந்து பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கல்வியை கற்பிப்போம்”, என திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ள “மரகதம்” என்னும் பெயரிலான விழிப்புணர்வு குறும்படத்தில் இடம்பெற்ற காட்சியமைப்புகள்தான் முன் சொன்னவையெல்லாம்.
![வழக்கறிஞர் ஷெனாஸ்](https://angusam.com/wp-content/uploads/2024/03/maragadham-short-movie-05-1024x1006.jpeg)
நூறு ஆண்டுகளுக்கு முன்பு குழந்தை திருமணத்தை பலர் ஆதரித்தனர். அப்போது மனிதன் சராசரி ஆயுள் 40 வயதாக இருந்தது. தற்போது 70 வயதாக இருக்கிறது. சொத்துக்கள் வேறு ஒருவருக்கு செல்லக்கூடாது என்பதற்காகவும், சிறுபிள்ளைகளுக்கு திருமணம், முடித்தால் நோய்கள் தீரும் என்ற மூட நம்பிக்கை இருந்தது.
குழந்தைகள் திருமணத் தடுப்பு சட்டம் கடந்த 1929-ல் இயற்றப்பட்டது. இந்த சட்டத்திற்கு 2006-ல் வலு சேர்க்கப்பட்டது. வரதட்சணைக்கு தடை சட்டம் உள்ளது. ஆனாலும், வரதட்சணை வாங்குகின்றனர். இதை இளைஞர்களின் மன மாற்றத்தால்தான் ஒழிக்க முடியும். அதேபோல குழந்தை திருமணத்தையும் மன மாற்றத்தால்தான் தவிர்க்க முடியும். தடை சட்டத்தால் ஒன்றும் நடக்காது. என்கிறார்.
மேலும், ”குழந்தை திருமணமும் பாலியல் வன்முறைதான் சமீபத்தில் பாண்டிச்சேரி, சிறுமி வக்கிரகாரர்களுக்கு இரையான சம்பவம் நாடே உலுக்கி வருகிறது. இதுகுறித்து, காணொளி வெளியிட்ட மாவட்ட காவல்துறைக்கு எனது வாழ்த்துக்களும், நன்றிகளும். திருப்பத்தூர் மாவட்டத்தில், மரகதங்கள் ஏராளாக இருக்கிறார்கள், ஏன் நாடு முழுதும் ஒவ்வொரு நாளும் லட்சக்கணக்கான மரகதங்கள் உருவாக்கப்படுகிறார்கள். இளம் வயது திருமணத்தை தடுப்போம். பெண் குழந்தைகளை பாதுகாப்போம், பெண்களுக்கு கல்வி ஒன்றே நிரந்தர துணையாக்குவோம்” என்கிறார், திருப்பத்தூரை சேர்ந்த மனித உரிமை ஆர்வலரும் வழக்கறிஞருமான ஷெனாஸ்.
- மணிகண்டன்.