சண்முகம் ஏன் அவசரப்படுகிறார் ? – ஜெய் தேவன்
இடதுசாரி மார்க்ஸிஸ்ட் நண்பர்கள் கோபித்துக் கொள்ளக்கூடாது . நானும் அந்த சித்தாந்தத்தில் ஆர்வம் உள்ளவன் தான் . அந்த அமைப்போடு தொடர்பு உள்ளவர்கள் நிறைய எனக்கு உள்ளனர் . ஆனாலும் ஒரு உண்மையை மனம் விட்டு எழுத வேண்டும் என்று கருதுகிறேன்.
புது மாநில செயலாளராக சண்முகம் அவர்கள் வந்த பிறகு சில முரண்பாடான கருத்துக்களை தங்கள் கூட்டணிக்கு எதிராக பேசுவது எதிரிக்கு சாதகமாக அமையும் என்பதை அவர் புரிந்து தான் பேசுகிறாரா என்பது தெரியவில்லை.
தீக்கதிருக்கு தந்த பேட்டியில் “கூட்டணிகள் இல்லாவிட்டால் திமுக வெற்றி பெற முடியாது” என்று போகிறபோக்கில் சொல்லிக் கொண்டு போகிறார். இது எதிரிக்கு ஒரு கை வாளை எடுத்து கையில் கொடுப்பது போல என்று அவருக்குப் புரியவில்லை.. தொகுதி பங்கீடு என்பது பேசுகின்ற பொழுது ரகசியமாக பேச வேண்டிய ஒரு விஷயம். அதை பொதுவெளியில் பேசி உடைப்பது அவ்வளவு பண்பட்ட செயலாக எனக்குத் தெரியவில்லை.

“2021 வேண்டா வெறுப்பாக ஆறு இடங்களை சட்டமன்றத்திற்கு பெற்றுக் கொண்டோம் இந்த முறை கூடுதல் இடங்கள் கேட்போம்” என்று பகிரங்கமாக சொல்லி உள்ளார் அதாவது குறைந்தது பத்துக்கு மேல் இருக்கும் என்று எதிர்பார்க்கிறேன்.
முன்பை விட திமுக கூட்டணியில் இப்போது மக்கள் நீதி மையம் சேர்ந்துள்ளது ஆகவே தொகுதிகள் பிரிப்பதில் அவர்களுக்கும் ஒரு பங்கு தர வேண்டியது இருக்கிறது.
கம்யூனிஸ்ட் இயக்கங்கள் இல்லாவிட்டால் திமுக ஜெயிக்காது என்பது முக்கியம். ஆனால் அதைவிட திமுக இல்லாவிட்டால் ஒரு தொகுதிகள் கூட இடதுசாரி கட்சிகள் டெபாசிட் கூட வாங்க முடியாது என்பதும் நிதர்சனம்.
மக்கள் நல கூட்டணியாக இருக்கின்ற பொழுது இரண்டு கம்யூனிஸ்டுகளும் வாங்கிய வாக்கு சதவீதம் தலா ஒரு சதவீதம் தான் என்பதை இடதுசாரி கட்சிகள் புரிந்து கொள்ள வேண்டும்.
இந்த ஒரு சதவீதத்தை விட தேசிய முற்போக்கு திராவிடர் கழகம் கூடுதலாக சதவீதங்களை பெற்றுள்ளது. இடதுசாரிகள் விலகினால் தேமுதிகவை இணைத்து அந்த இழப்பை திமுக எளிதாக சரி கட்டி விடும் அதே சமயம் இடதுசாரிகளுக்கு போவதற்கு தான் இடமில்லை. அதிமுக கூட்டணிக்கு போக முடியாது. விஜய் கட்சிக்குப் போனால் டெபாசிட் உத்தரவாதம் இல்லை இது எல்லாம் மனதில் வைத்துக்கொண்டு கொஞ்சம் நெளிவு , சுழிவு தெளிவாக பேச வேண்டும்.
புதிதாக வந்துள்ளதால் புரட்சிகரமாக எதையாவது பேச வேண்டும் என்று திரு சண்முகம் அவர்கள் பேசுவது போல் எனக்கு படுகிறது. பண்பட்ட கம்யூனிஸ்டாளர்கள் இந்த மாதிரி பேச மாட்டார்கள்.
இப்படிப்பட்ட பேச்சுகளால் கூட்டணியில் மற்றவர்களையும் இப்படி கூடுதல் பெற தூண்டுவது போல் ஆகும். அப்படி நிகழும் பொழுது தொகுதி பங்கீடு சிக்கல் வரும் இது பிஜேபி கட்சிக்கு சாதகமாக அமையும் அதேசமயம் இந்த கட்சிகள் எதுவும் வேறு கட்சிகளுடன் சேர்ந்து பணியாற்ற முடியாது.
தமிழக வெற்றி கழகம் என்பதெல்லாம் ஒரு அரசியல் கட்சியாக அங்கீகரிக்க முடியாது . அது ஒரு நடிகரின் கட்சி. பாரம்பரிய மிக்க கட்சிகள் அங்கே போய் குப்பை கொட்டுவது மிக கேவலமாக முடியும் ஆகவே இன்னும் காலம் இருக்கிறது முதல்வர் ஸ்டாலினோடு பேசி சுமுகமாக இதை முடிப்பதை விட்டுவிட்டு தீக்கதிர் பேட்டியில் தன்னுடைய கருத் திரு சண்முகம் அவர்கள பேசியது சரியா என்பதை தோழர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.
வேறு கட்சி என்றால் வேறு மாதிரி விமர்சனம் எழுதியிருப்பேன் நான் இடதுசாரி அனுதாபி என்பதால் மேலோட்டமாக இதை எழுதியிருக்கிறேன்.
தன் வலியும் மாற்றான் வலியும் துணை வலியும்
சீர்தூக்கி செயல் என்பது திருக்குறள்
— ஜெய் தேவன், எழுத்தாளர்.