தமிழர்களின் அற மரபும் அறிவு மரபும்- அர்த்தமுள்ள ஆன்மீகம் -தொடா் 7
நீங்கள் அறம் செய்ய வேண்டும் என்றால் அறிவு வேண்டும். நல்லது எது? கெட்டது எது? என்பது தெரிய வேண்டும் என்றால் அறிவு வேண்டும். நமக்காக நிறையபேர் யோசித்துக் கொண்டிருக்க நாம் ஏன் யோசிக்க வேண்டும் என்று நினைக்கின்றோம். மக்களாட்சி என்பதுகூட நீங்கள் யோசிப்பதுதான்.
1789 இல் இந்தியாவுக்கு வந்த வெள்ளைக்காரர்கள், சில பாதிரி மார்கள் உடன்கட்டை என்னும் பழக்கத்தை கண்டிக்கின்றார்கள். உடன்கட்டை ஏறுதலில் 3 வயது குழந்தை இருக்கக்கூடாது. 12 வயது சிறுமி இருக்கக்கூடாது என்ற ஒரு சட்டம் 1812இல்தான் நடைமுறைக்கு வருகின்றது. பின்னர் இராஜாராம் மோகன்ராய் அவர்கள் இந்தப் பிரச்சனையைக் கையில் எடுத்து வங்கச் சமூகத்தில் இக் கொடுமைக்கு எதிராகப் பிரச்சாரம் செய்கிறார்.
பென்டிங் பிரபு என்னும் ஆங்கிலேயன் வந்துதான் உடன்கட்டை ஏறுதல் என்னும் கொடுமையை 1829இல் தடை செய்கிறார். உயிரைக் கொலை செய்யும் அயோக்கிய தனத்தை, அறம் என்ற பெயரில் நம் தலையில் ஏற்றி வைத்தார்கள். அதை தூக்கி எறிந்து உடன் கட்டை ஏறும் வழக்கத்தை ஒழிக்க நமக்கு 40 ஆண்டுகள் தேவைப்பட்டது. அறம் செய் என்று நான் உங்களைப் பார்த்து எப்படி கட்டளையிட முடியும். நீங்களாகத்தான் செய்ய வேண்டும். அதனால்தான் அறம் செய்ய விரும்பு என்றார்கள்.
அறம் செய்ய யாரும் உத்தரவு போடமுடியாது. கிருஷ்ணபரமாத்மா சொல்லியிருக்கிறார். வைதிக அறிஞர் விளக்கம் கொடுத்துள்ளார் என்றெல்லாம் யாரும் கட்டளையிட முடியாது. இது கடவுள் விதித்த விதி என்று யாரும் சொல்லிவிட முடியாது
கடவுள் மறுப்பைத் தமிழர்கள் சென்ற நூற்றாண்டில்தான் தொடங்கினார்கள். கடவுள் மறுப்பும் அதற்கான எதிர்வினையும் தமிழ்ச் சமூகத்தில் தொடர்ந்து நடந்துகொண்டுதான் இருக்கின்றது. தமிழ்ச் சமூகம் தொடர்ந்து அறத்தை நோக்கி செலுத்தப்பட்டுக் கொண்டே இருக்கின்றது. ‘எனக்கு ஏன் இது நிகழ்கிறது’ என்றால் நீ செய்த பாவம், புண்ணியம் சார்ந்துதான் நடக்கின்றது. அதைத்தான் நீ தற்போது அனுபவித்துக் கொண்டிருக்கின்றாய் என்றுதானே சொல்கிறார்கள். இதை மாற்றமுடியாது என்றும் சொல்கிறார்கள்.
’அறத்தாறு இதுவென வேண்டா சிவிகை பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை’ என்று திருக்குறள் சொல்கிறது. ஒரு பல்லாக்கு செல்கிறது. அதில் ஒருவன் உட்கார்ந்திருக்கிறான். அந்தப் பல்லாக்கை 4 பேர் தூக்கி சுமந்து செல்கிறார்கள். இந்த ஏற்றத்தாழ்வு ஏன் நடக்கின்றது என்றால் உட்கார்ந்து இருப்பவன் போன ஜென்மத்தில் புண்ணியம் செய்தவன். பல்லாக்கைச் சுமக்கும் 4 பேர் போன ஜென்மத்தில் பாவம் செய்தவர்கள் என்று என்னிடம் சொல்லவேண்டாம். இது அறம் என்று சொல்லாதே. இதற்கான காரணங்கள் வேறு. மநுதர்மம், சாஸ்திரங்கள் அனைத்தையும் புறக்கணிக்கின்றோம்.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
நமக்கு இரண்டு மரபுகள் மட்டுமே உள்ளன. அற மரபு என்ற ஒன்றும், அறிவு மரபு என மற்றொன்றும் உள்ளது. அறிவு மரபு என்பது சிந்திக்கின்ற மரபு. அற மரபு என்பது செய்கின்ற செயல்படுகின்ற மரபு. வேறு எந்த மரபும் தமிழர்களிடம் இருந்ததில்லைறீ
– ஆக்கம் : பேராசிரியர் தி.நெடுஞ்செழியன்