இப்ப எதுக்காக இப்படி அழுது புலம்பிட்டிருக்கே, நடந்தது நடந்து போச்சு !
ஈரோடு மெடிக்கல் காலேஜ் அண்ட் ஹாஸ்பிடல் டீன் ஆக இருக்கும் டாக்டர் ரவிக்குமார் அவர்கள் அலைபேசியில் சில நாட்களுக்கு முன்பு என்னிடம் பேசிக் கொண்டிருந்த பொழுது ஒரு அனுபவத்தைச் சொன்னார்.
இளநீர் வியாபாரி ஒருவர் இளநீரை வெட்டி சீவும் பொழுது தன் கட்டை விரலையும் சேர்த்து சீவிக் கொண்டு விட்டார்.
ரத்தம் பீறிட்டு அடித்த போதும், அவர் கொஞ்சம் கூட அதைப் பொருட்படுத்தாமல், பதட்டப்படாமல் கீழே துண்டித்து விழுந்த விரலை எடுத்து, பிளாஸ்டிக் பையில் போட்டு, அதில் ஐஸ் கட்டி ஒன்றைப் போட்டுக்கொண்டு நேராக ஹாஸ்பிடலுக்கு வந்து விட்டார்.
அவருடைய மனைவியோ வாயிலும், வயிற்றிலும் அடித்துக்கொண்டு, கதறி அழுது ஒரு தடவை மயக்கம் போட்டு விழுந்து விட்டார்.
விரலை பறி கொடுத்தவர் சர்வசாதாரணமாக மனைவிக்கு ஆறுதல் சொன்னார்.
” இப்ப எதுக்காக இப்படி அழுது புலம்பிட்டிருக்கே. நடந்தது நடந்து போச்சு . டாக்டர்கிட்ட வந்துட்டோம்ல இனி அவர் சரி பண்ணிடுவாரு” என்று சொல்லி நான் அளித்த அந்த சிகிச்சை முறைக்கு ஒத்துழைப்பு கொடுத்து ஏற்றுக் கொண்டார்.
அடுத்த சில நாட்களில் அவருடைய கட்டை விரல் பழையபடி மற்ற விரல்களுக்கு சமமாக மகுடம் சூட்டிக் கொண்டது.
ஒவ்வொருவரும் இதே போல் எதிர்பாராமல் தங்களுக்கு ஏற்படக்கூடிய உடம்புப் பிரச்சினைகளைக் கண்டு கலங்காமல் மனரீதியாக எதிர் கொண்டால் பலன் கிடைக்கும். நடந்ததை எண்ணி புலம்பிக் கொண்டே இருந்தால் வலியும் அதிகமாக இருக்கும்.
இது போன்ற பல அனுபவங்களை அவர் தொகுத்து ‘உயிரின் வலி’ என்ற தலைப்பிலே ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார் என்று அவர் சொன்ன போது நான் ஆச்சரியப்பட வில்லை.
ஏனென்றால் அவர் திறமையான டாக்டர் மட்டும் அல்ல.
ஒரு நல்ல எழுத்தாளரும் கூட……
— ராஜேஷ்குமார்