தூய வளனார் கல்லூரி மாணவா்களின் மனநல விழிப்புணர்வு குறித்த களப்பணி ஆய்வு !
திருச்சிராப்பள்ளி நகரின் நடு வண்ணாரப்பேட்டை பகுதியில், தூய வளனார் கல்லூரி விரிவாக்கத்துறை சார்பாக சமூகப் பொறுப்புணர்வை மையமாகக் கொண்டு சிறப்பான களப்பணி நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில் கல்லூரியைச் சேர்ந்த 33 மாணவர்கள் உற்சாகமாக கலந்து கொண்டு, அப்பகுதி மக்களுடன் நேரடி தொடர்பு கொண்டு மனநலம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
நிகழ்ச்சியின் முக்கிய நோக்கம், மனநலத்தின் அவசியத்தை மக்களிடம் எடுத்துரைப்பதோடு, அவர்களின் சமூகத் தேவைகள், வாழ்க்கைச் சவால்கள் மற்றும் அன்றாட பிரச்சினைகள் குறித்து தரவுகளை சேகரிப்பதாகும். மாணவர்கள் வீடு தோறும் சென்று மக்களுடன் கலந்துரையாடி, மனஅழுத்தம், கவலை, குடும்பப் பிரச்சினைகள், இளைஞர்களின் மனநிலை மாற்றங்கள் போன்ற அம்சங்களைப் பற்றி விழிப்புணர்வு பரப்பினர். மனநலம் என்பது உடல்நலத்திற்கு இணையான முக்கியத்துவம் வாய்ந்தது என்பதையும், தேவையான சமயங்களில் ஆலோசனையை நாட வேண்டியதையும் வலியுறுத்தினர்.
மேலும், அப்பகுதி மக்களின் கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு, குடிநீர், சுத்தம் போன்ற அடிப்படை சமூகத் தேவைகள் குறித்து மாணவர்கள் ஆய்வு மேற்கொண்டனர். சேகரிக்கப்பட்ட தகவல்கள் எதிர்கால சமூக மேம்பாட்டு திட்டங்களுக்கு அடிப்படையாக அமையும் வகையில் தொகுக்கப்பட உள்ளன.
இந்நிகழ்வை விரிவாக்கத்துறை ஆசிரியர்கள் ஜெயச்சந்திரன் மற்றும் ஜோசப் கிறிஸ்து ராஜா ஆகியோர் திறம்பட வழிநடத்தினர். மாணவர்களுக்கு முன்னோட்டப் பயிற்சி அளித்து, மக்களிடம் எவ்வாறு அணுக வேண்டும், தகவல்களை எவ்வாறு பதிவு செய்ய வேண்டும் என்பன குறித்து வழிகாட்டினர்.
களப்பணியின் மூலம் மாணவர்கள் சமூக வாழ்வின் நிஜ நிலையை அறிந்து, மனிதநேயப் பண்புகளை வளர்த்துக் கொள்ளும் வாய்ப்பு பெற்றனர். அப்பகுதி மக்கள் இந்நிகழ்வை பாராட்டி, மாணவர்களின் சமூக அக்கறைக்கு நன்றி தெரிவித்தனர்.
இந்த நிகழ்வு கல்வி நிலையங்கள் சமூக மாற்றத்திற்கான முக்கியத் தூண்களாக விளங்குகின்றன என்பதை மீண்டும் ஒருமுறை உணர்த்தியது.








Comments are closed, but trackbacks and pingbacks are open.