இந்தி, சமஸ்கிருதத்துக்கு காட்டும் அக்கறையில் நூற்றில் ஒரு பங்கை தமிழுக்கு காட்டுங்களேன் … கோரிக்கை விடுத்த எம்.பி. ரவிக்குமார் !
மும்மொழிக் குறித்த வாத – பிரதி வாதங்களை தொடர்ந்தும் பிப்ரவரி – 21 உலக தாய்மொழி நாளாக அனுசரிக்கப்படுவதை தொடர்ந்தும், நாடாளுமன்ற ஆவணங்களை தமிழில் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் கடந்த 2021 இல், குடியரசுத் துணைத்தலைவர் வெங்கய்யா நாயுடுவுக்கு தான் எழுதிய அலுவல் கடிதம் ஒன்றை பகிர்ந்திருக்கிறார், விழுப்புரம் மக்களவை தொகுதி உறுப்பினரும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலருமான முனைவர் துரை.ரவிக்குமார்.
அந்த கடிதத்தில், “இந்தி, சமஸ்கிருதம் ஆகிய மொழிகளின் வளர்ச்சியில் காட்டும் அக்கறையில் நூற்றில் ஒரு பங்கையேனும் அரசியலமைப்புச் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் இடம்பெற்றுள்ள தமிழ் உள்ளிட்ட மொழிகளின் வளர்ச்சியில் இந்த அரசு காட்டவேண்டும்” என்பதை அழுத்தம் திருத்தமாக பதிவு செய்திருக்கிறார்.
இதோ, அந்த கடிதம் …
பெறல்:
மாண்புமிகு குடியரசுத் துணைத் தலைவர் அவர்கள்,
இந்திய அரசு,
6, மௌலானா ஆசாத் சாலை,
புது டெல்லி -110 011
வணக்கம்
பொருள்: நிதிநிலை அறிக்கை உள்ளிட்ட ஆவணங்களைத் தமிழ் உள்ளிட்ட மொழிகளில் வழங்க நடவடிக்கை எடுத்தல் குறித்து
அனைத்துலகத் தாய்மொழி நாள் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 21 ஆம் நாள் கடைபிடிக்கப்படுகிறது. இந்திய ஒன்றியத்தின் குடியரசுத் துணைத் தலைவர் என்னும் பெருமைவாய்ந்த பொறுப்பை வகிக்கும் தாங்கள் அனைத்துலகத் தாய்மொழி நாளையொட்டி எனக்கு எனது தாய்மொழியான தமிழிலேயே கடிதம் ஒன்றை எழுதியிருப்பதற்காக எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
” நமது நாடு சுமார் 19,500 மொழிகள் மற்றும் கிளை மொழிகளின் தாயகமாகும். அவற்றில் சுமார் 200 மொழிகள் உடனடி அழிவின் அபாயத்தைச் சந்தித்து வருகின்றன.. ஒவ்வொரு இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை உலகின் மொழிகளில் ஒன்று அழிந்து வருவதாக ஐக்கிய நாடுகள் சபை கவலை தெரிவித்துள்ளது. அதனால், ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 21-ம் தேதியை சர்வதேச தாய் மொழிகள் தினமாக கடைப்பிடிக்க ஐ.நா தீர்மானித்துள்ளது.” எனச் சரியாக சுட்டிக்காட்டியுள்ள நீங்கள், “ இந்தியர்களாகிய நமக்கு, சர்வதேச தாய் மொழிகள் தினம் சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.
கலாச்சாரமும், மொழி பன்முகத் தன்மையும் இந்திய நாகரிகத்தின் படுகையாக வடிவெடுத்துள்ளன. நமது மாண்புகள் மற்றும் தொலைநோக்கு, விருப்பங்கள் மற்றும் லட்சியங்கள், வாழ்க்கை மற்றும் இலக்கியம் ஆகியவற்றை வெளியிட தாய் மொழி ஒரு வழியாகும். பல்வகைப்பட்ட மொழிகள், கிளை மொழிகளின் வளமை ஆகியவற்றுடன், தொன்மையான அறிவின் களஞ்சியங்களாக உள்ள பகுதிகளை நாம் கொண்டிருந்தோம். அவற்றில் பல இன்று பாதிக்கப்பட்டுள்ளன. நமது தாய் மொழியை அலட்சியமாகக் கருதும் மனப்பான்மையே இதற்கு முக்கிய காரணமாகும்.” என்றும் குறிப்பிட்டிருக்கிறீர்கள்.

குடியரசுத் துணைத் தலைவரான தங்களது அக்கறை மெய்யானதென்றே நான் கருதுகிறேன். இந்தியாவின் தொன்மையான மொழியான தமிழ் மொழியையும், பிற மாநில மொழிகளையும் புறக்கணிக்கும் விதமாக தற்போதைய ஒன்றிய அரசு செயல்படுவதைத் தாங்கள் ஏற்க மாட்டீர்களென நம்புகிறேன். இந்தி, சமஸ்கிருதம் ஆகிய மொழிகளின் வளர்ச்சியில் காட்டும் அக்கறையில் நூற்றில் ஒரு பங்கையேனும் அரசியலமைப்புச் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் இடம்பெற்றுள்ள தமிழ் உள்ளிட்ட மொழிகளின் வளர்ச்சியில் இந்த அரசு காட்ட வேண்டும் என்ற எமது வேண்டுகோளைத் தாங்கள் ஏற்றுக்கொள்வீர்களென எதிர்பார்க்கிறேன்.
அதற்கு முதற்படியாக நாடாளுமன்றத்தில் உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் நிதிநிலை அறிக்கை உள்ளிட்ட ஆவணங்களை நமது அரசியலமைப்புச் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் இடம்பெற்றுள்ள மொழிகளில் வழங்கவேண்டும். அதற்கு மாண்பமை குடியரசுத் துணைத் தலைவராகவும் மாநிலங்களவைத் தலைவராகவும் விளங்குகிற தாங்கள் கருணைகூர்ந்து நடவடிக்கை எடுக்கவேண்டும். இந்த கோரிக்கையை கடந்த பிப்ரவரி 10, 2021 அன்று நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் மாண்புமிகு பிரல்ஹாத் ஜோஷி அவர்களுக்கு நான் அளித்த கடிதத்தில் வலியுறுத்தியுள்ளேன். அக் கடிதத்தைத் தங்களது மேலான பார்வைக்காக இங்கே தருகிறேன்:
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
“வளமான பாரம்பரியங்களைக் கொண்ட மொழிகள் நிறைந்த நாடு இந்தியா ஆகும். 1961 ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் அறிக்கையில் இந்தியாவில் 1652 தாய்மொழிகள் சுமார் 200 மொழிகளாகவும், நான்கு மொழிக் குடும்பங்களாகவும் வகைப்படுத்தப்பட்டு இருந்தன என்று கூறப்பட்டது. அரசியலமைப்புச் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் 22 மொழிகள் தற்போது இடம்பெற்றுள்ளன. எட்டாவது அட்டவணையில் ஒரு மொழியைச் சேர்ப்பதென்பது நாடாளுமன்றத்தில் மொழிபெயர்க்கப்படுவது உள்ளிட்ட சில வசதிகளை அம்மொழிக்கு ஏற்படுத்தித் தருகிறது.
அரசியலமைப்புச் சட்டத்தின் உறுப்பு 350, ‘எந்த ஒரு நபரும் தனக்கான குறைகளைத் தீர்க்குமாறு மத்திய மாநில அரசுகளின் ஒரு அதிகாரியிடமோ அல்லது அமைப்புகளிடமோ மத்திய அரசு மற்றும் மாநில அரசுகள் பயன்படுத்தும் மொழியில் முறையிடலாம் ‘ எனக் கூறுகிறது. அரசியலமைப்புச் சட்டத்தின் உறுப்பு 350 அளிக்கும் அந்த வசதி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குக் கிடைக்கவேண்டும். எனவே, பாராளுமன்றத்தின் பொருளாதார ஆய்வறிக்கை மற்றும் நிதிநிலை அறிக்கை உள்ளிட்ட முக்கியமான ஆவணங்களை அரசியலமைப்புச் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் இடம்பெற்றுள்ள மொழிகளில் வழங்க வேண்டும் என்று பணிவோடு வேண்டுகிறேன்”

“இந்தியா, பல்வேறு மொழிகள், கலாச்சாரத்தின் தளமாக உள்ளதுடன், வேற்றுமையில் ஒற்றுமை என்ற உணர்வைக் கொண்டுள்ளது குறித்து நாம் பெருமிதம் கொள்கிறோம். கிராமமாக மாறி வரும் உலகத்துக்கும் இது பொருந்தும். பல்வேறுபட்ட கலாச்சாரங்களின் செழுமையை, தாய் மொழிகளை மேம்படுத்துவதன் மூலமே பாதுகாக்க முடியும்.” என்ற தங்களது கூற்றில் நான் முழுமையாக உடன்படுகிறேன். அதே உணர்வோடு நான் முன்வைத்துள்ள இந்த வேண்டுகோளைப் பரிசீலித்துத் தகுந்த நடவடிக்கைகளை எடுப்பீர்களென எதிர்பார்க்கிறேன்.
பணிவுடன்,
( முனைவர் துரை.ரவிக்குமார் )
மக்களவை உறுப்பினர், விழுப்புரம்
( புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில் எட்டாவது அட்டவணையில் இடம்பெற்ற மொழிகள் பெரும்பாலானவற்றில் பேசுவதை இந்தியிலும் ஆங்கிலத்திலும் மொழிபெயர்ப்பதற்கான வசதி செய்யப்பட்டது. கடந்த கூட்டத் தொடரில் சமஸ்கிருதம், உருது, போடோ, டோக்ரி, மைதிலி, மணிப்புரி ஆகிய ஆறு மொழிகளுக்கு அந்த வசதி விரிவுபடுத்தப்பட்டிருப்பதாக மக்களவைத் தலைவர் அறிவித்தார். நாடாளுமன்ற ஆவணங்கள் சிலவும் அந்தந்த மொழிகளில் மெஷின் டிரான்ஸ்லேஷன் மூலம் வழங்கப்படுகின்றன. )
— அங்குசம் செய்திப்பிரிவு.