தேசிய அளவிலான கராத்தே போட்டியில் பதக்கம் வென்ற வீராங்கனைகளுக்கு உற்சாக வரவேற்பு !
உத்தரகண்டில் நடைபெற்ற தேசிய அளவிலான கராத்தே போட்டியில் பதக்கங்களை வென்று வந்த திருச்சியை சேர்ந்த இரு வீராங்கனைகளுக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
நான்காவது தேசிய அளவிலான கராத்தே போட்டி உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் கடந்த 12ம் தேதி தொடங்கி 15ஆம் தேதி வரை 4 நாட்கள் நடைபெற்றது.
இப்போட்டியில், 30க்கும் மேற்பட்ட மாநிலங்களைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டிருந்தனர். மாநில அளவிலான போட்டிகளில் தங்கப்பதக்கம் வென்று, தமிழ்நாடு சார்பில் தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்ற வீரர், வீராங்கனைகள் சிறப்பாக தங்களது திறனை வெளிப்படுத்தியதில் தமிழ்நாடு முதலிடத்தை பிடித்ததுடன், 11 வயதுக்குட்பட்டோருக்கான குமித்தே பிரிவில், 45கிலோவிற்கு மேற்பட்ட எடை பிரிவில் திருச்சியைச் சேர்ந்த காவலரான தனசேகரன் என்பவரது மகள் தனன்யஸ்ரீ வெள்ளி பதக்கமும், பெல் நிறுவனத்தில் பணிபுரியும் ஹரிபாலன் என்பவரது மகள் சுபந்தனா 12வயதிற்குட்பட்ட, 45 கிலோ எடை பிரிவில் வெண்கல பதக்கமும் வென்று தமிழகத்திற்கு பெருமையை தேடித்தந்தனர்.
பதக்கங்களை வென்று விமானம் மூலம் திருச்சி வந்தடைந்த இரு வீராங்கனைகளுக்கு விமான நிலையத்தில் அவர்களது மக்கள் சக்தி இயக்கம் மாநிலப் பொருளாளர் கே.சி.நீலமேகம், தண்ணீர் அமைப்பு செயலாளர் பேரா. கி.சதீஸ்குமார், குடும்பத்தினர், உறவினர்கள், பயிற்சியாளர்கள், சமூகநல அமைப்பினர், விளையாட்டு ஆர்வலர்கள் என பலரும் வருகைதந்து சால்வை மற்றும் மலர்மாலை அணிவித்து தங்களது வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டனர்.
போட்டிகள் சவாலாக இருந்தாலும், சிறப்புடன் விளையாடி பதக்கங்களை குவித்ததாகவும், அடுத்து வரும் தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளில் நிச்சயம் தங்கப்பதக்கம் வென்று தமிழகத்திற்கும், இந்தியாவிற்கும் பெருமைதேடித் தருவோம் என வீராங்கனைகள் உறுதிப்பட தெரிவித்தனர்.