சவுக்கு சங்கர் முதலாளி ஃபெலிக்ஸ் ஜெரால்டு – டெல்லியில் தூக்கிய திருச்சி போலீஸ் டீம் !
சவுக்கு சங்கர் முதலாளி ஃபெலிக்ஸ் ஜெரால்டு – டெல்லியில் தூக்கிய திருச்சி போலீஸ் டீம் ! காவல் உயர் அதிகாரிகள் மற்றும் பெண் காவலர்கள் குறித்து அசிங்கமாகவும் கேவலமான மனநிலையில் பேசிய வழக்கில் யூட்யூபரான சங்கர் கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது ரெட்பிக்ஸ் யூட்யூப் சேனல் ஃபெலிக்ஸ் ஜெரால்டை திருச்சி எஸ்.பி. வருண்குமார் தனிப்படை டீம் டெல்லியில் வைத்து கைது செய்துள்ளனர்.
பிரபல யூட்யூபரான சவுக்கு சங்கர் காவல்துறை அதிகாரிகள் பெண் காவலர்கள் குறித்தும் அசிங்கமாகவும் கேவலமான மனநிலையில் கருத்து தெரிவித்திருந்தார். இது தொடர்பாக மேலும் கோவை மாநகர சைபர் கிரைம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். தேனியில் கஞ்சா வழக்கும் பதிவு செய்தனர். தமிழகம் முழுவதும் இருந்து சுமார் 26 தமிழக பெண் போலீசாரிடம் இருந்து புகார்கள் வந்த நிலையில் அதில் இருந்து குறிப்பிட்ட 5 வழக்குகளில் மட்டும் வழக்கு பதிவு செய்தனர்.
இதனை தொடர்ந்து சவுக்கு சங்கரின் வீட்டில் காவல்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி கஞ்சா, பணம், லேப்டாப் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்துள்ளனர். இந்த நிலையில் சவுக்கு சங்கர் கைதை தொடர்ந்து ரெட் பிக்ஸ் யூட்யூப் சேனலின் எடிட்டர் பெலிக்ஸ் ஜெரால்டை டெல்லியில் வைத்து தமிழக போலீசார் கைது செய்துள்ளனர்.
இந்த வழக்கில் தனக்கு முன் ஜாமீன் வழங்க கோரி பெலிக்ஸ் ஜெரால்ட் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு செய்திருந்தார். இந்த முன் ஜாமின் மீதான விசாரணை உயர்நீதிமன்ற நீதிபதி குமரேஷ்பாபு யூடியூப் சேனல்கள் பொறுப்பற்ற வகையில் நடந்து கொண்டு சமுதாயத்தில் அமைதியின்மையை ஏற்படுத்துவதாக குறிப்பிட்டார்.
மேலும் இந்த வழக்கில் அநாகரீகமாக விவாதம் செய்த ரெட் பிக் யூடியூப் சேனலின் தலைமை நிர்வாகி பெலிக்ஸ் ஜெரால்டை முதல் குற்றவாளியாக சேர்த்திருக்க வேண்டும் என்று தனது கருத்தை பதிவு செய்தார். இந்த வழக்கில் மனுதாரருக்கு தற்போது இடைக்கால நிவாரணம் எதுவும் வழங்க முடியாது என கூறி காவல்துறை பதில் மனு தாக்கல் செய்ய ஒரு வார காலம் ஒத்தி வைத்தார்.
இந்நிலையில், டெல்லியில் பிரஸ் கவுன்சில் ஆப் இந்தியாவின் சேர்மனிடம் மனு கொடுக்க சென்றிருந்த ஃபெலிக்ஸ் ஜெரால்டை இரவு 11.30 மணி அளவில் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமாரின் தனிப்படையினரால் அதிரடியாக கைது செய்யப்பட்டார். கோவை போலீசார் அவருக்கு சம்மன் வழங்கியிருந்த நிலையில் விமானம் மூலம் திருச்சிக்கு அழைத்து வருவதாக போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.
சவுக்கு சங்கருக்கு ஆரம்ப காலத்தில் இருந்து தற்போது எல்லாவகையிலும் துணையாகவும் முதலாளியாகவும் இருந்தார் பெலிக்ஸ் ஜெரால்டு என்பது குறிப்பிடதக்கது.