பெருமாள்முருகனின் 60ஆவது பிறந்தநாள் ஒரு நாள் பன்னாட்டுக் கருத்தரங்கு !
எழுத்தாளர் Perumalmurugan அவர்களது 60 ஆவது அகவை நாள், ஒரு நாள் பன்னாட்டுக் கருத்தரங்க நிகழ்வாக சென்னை மாநிலக் கல்லூரியில் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்வில், பெருமாள் முருகன் அவர்களது படைப்புகள் சார்ந்து வேறுவேறு கோணங்களில் 60 பெண்கள் 60 கட்டுரைகள் எழுதி #நனவிலியின்-நிலம் என்ற நூலாகத் தொகுக்கப்பட்டு வெளியிடப்பட்டது.
நிகழ்வில் நூற்றுக்கணக்கான மாணவர்களுடன் அமர்ந்து ஒரு நாள் முழுவதும் அவரது படைப்புகள் சார்ந்து பல செய்திகளை அறிந்து கொண்ட அனுபவம் மிகவும் உவப்பானதாய் இருந்தது.
பேரா மங்கை- அம்மா என்றே இவரை அழைப்பேன். பெருமாள் முருகன் அவர்களது எல்லைகள் கடக்கும் படைப்புலகம் என்ற தலைப்பில் கணீர் குரலுடன் சொற்பொழிவு நிகழ்த்தி முடித்தவுடன் கட்டிக் கொண்டு மகிழ்ந்தேன். எப்போதும் என் மீது அன்பானவர் தோழர் Mangai Arasu அம்மா.
அடுத்து பேரன்பும் பெருங்கருணையும் நிறைந்த எனது Chithra Balasubramanian அக்கா. #மகத்தான ஆசிரியர் என்ற தலைப்பில் அழகான குரலில் பெருமாள் முருகன் அவர்களது படைப்பை மட்டுமல்ல ஆசிரியராக அவரின் பண்புகளையும் பதிவு செய்து விட்டு விடை பெறுகையில் அக்காவையும் கட்டிக் கொண்டு ஆனந்தக் கண்ணீர் வடித்த நொடிகள் எனக்குள் எத்தனையோ ஆறுதலைத் தந்தது.

தமிழ்நாட்டில் தமிழ் பேசுவது தேய்ந்து வரும் காலச்சூழலில் பிரான்ஸ் நாட்டு அரசுப் பள்ளி ஆசிரியர் லெத்திசியா- இபான்ஸ் மிக அழகான தமிழ் மொழியில் பேசி, மாதொருபாகன் நாவலை நேரடியாக தமிழிலிருந்து பிரெஞ்சு மொழியில் மொழிபெயர்ப்பு செய்த அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள அதிசயத்தக்க தருணமாக இருந்தது. அவருக்கு எனது இரண்டு நூல்களைப் பரிசாகக் கொடுத்து அன்பு பாராட்டிட இருவருக்கும் மகிழ்ச்சி.
நாள் முழுவதும் நிறைய அமர்வுகள். பெருமாள் முருகன் அவர்களது படைப்புகளைப் பண்புகளை நிறைய அறிந்து கொள்ள வாய்ப்பாக அமைந்தது.
மதிய வேளையில் பெருமாள் முருகன், அவரது இணையர் பேரா எழிலரசி, கல்லூரி முதல்வர் முனைவர் இராமன், பேரா கவிஞர் Perundevi Perundevi , ஆய்வாளர் பழ. அதியமான் ஆகியோருடன் நேரம் செலவழித்த மகிழ்வான தருணம். தோழி Arsha மற்றும் பலரையும் சந்தித்தேன்.
இறுதி நிகழ்வாக சிறப்பு விருந்தினராக நமது தமிழ்நாடு அரசு நிதித் துறைச் செயலர் த. உதயச்சந்திரன் அவர்கள் வருகை புரிந்து தனக்கும் பெருமாள் முருகன் அவர்களுக்குமான நீண்ட வருடங்கள் நட்புப்பயணத்தைப் பகிர்ந்து கொண்டார். அவர் IAS பணிக்குத் தயாராகும் போது தமிழ் இலக்கிய வகுப்புகளை அய்யா பெருமாள் முருகன் அவர்களிடம் தான் கற்றுக் கொண்டிருக்கிறார். சங்க இலக்கியம் நவீன இலக்கியம் வட்டார வழக்கு ஆகிய மூன்று புள்ளிகளையும் இணைக்கும் முக்கிய எழுத்தாளராக பெருமாள் முருகன் இருக்கிறார் தமிழ் நாட்டில் என்று உலகப் புகழ்பெற்ற எழுத்தாளரான பெருமாள் முருகன் குறித்து அவர் உரையாற்றியது மிகவும் ரசித்து உள்வாங்க முடிந்தது.
60 பெண்கள் எழுதிய கட்டுரைகளில் நானும் ஒரு கட்டுரை எழுதியுள்ளேன். என்னைப் போல கட்டுரை எழுதிய சிலருக்கு மேடையில் செயலர் உதயச்சந்திரன் அவர்கள் நூல் வழங்கினார். மேடை ஏறி வணக்கம் கூறும் போதே, “என்னம்மா நல்லா இருக்கீங்களா?”, என்றார். நானும் பதிலுரைக்க புன்முறுவல் தந்தார். கடந்த பத்தாண்டுகளுக்கு முன்பு அவர் தமிழ் இணையக் கழகத்தின் இயக்குநராகப் பொறுப்பு வகித்த போது , அவரது வழிகாட்டலில், விக்கிப்பீடியா தமிழ்க் கட்டுரைகள் எழுத அரசுப் பள்ளி ஆசிரியர்களை வைத்து பயிற்சிப் பட்டறை ஒன்றை ஒருங்கிணைத்தேன். அதனைத் தொடர்ந்து கான் அகாடமி காணொளிகளை தமிழ் மொழியில் மொழிபெயர்ப்பு செய்ய அவரே எனக்கு ஒருங்கிணைப்புப் பணியாற்றக் கூறிட ஏறத்தாழ இரண்டரை மாதங்கள் 80 ஆசிரியர்களை வைத்து இப்பணிகளை இன்றைய அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் செய்து முடித்தேன்.
அதன் பிறகு அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் கணினிப்பயிற்சி, செயலி வடிவமைப்பு உள்ளிட்ட பல பணிகள் பயிற்சிகள் என அவரது வழிகாட்டலில் செய்யும் வாய்ப்பு அமைந்தது. SCERTஇல் பணியாற்றிய போது தான் இவையெல்லாம் செய்தேன். அனைத்திற்கும் மகுடம் வைத்தது போல 2015 இல் மாநில அளவில் அடிப்படை கணினிப் பயிற்சியை சென்னை டிபிஐ வளாகத்தில் இருந்து அனைத்து மாவட்டங்களிலும் ஒருங்கிணைத்து நடத்திட உதயச்சந்திரன் அவர்கள் அப் பயிற்சியின் பணிகளை வாட்ஸ் அப் குழு வழியாகக் கவனித்து வந்தார். பாராட்டுக்களையும் அளித்தார். ஈரோடு உமா எப்படி இருக்கீங்க என்று தான் கேட்பார். நீண்ட வருடங்களுக்குப் பிறகு சுமார் 8 ஆண்டுகள் கழித்து நேற்று தான் அவரை மேடையில் சந்தித்து அவரது கரங்களில் இருந்து நூல் பெற்ற போது மேற்சொன்ன அத்தனையும் அடுக்கடுக்கான நினைவுகளாக வரிசை கட்டின. மிகவும் நன்றிங்க சார்.
இத்தனை அழகான ஒரு நாளை நான் கொண்டாட காரணம் நம்முடன் வாழும் சக மனிதர் உலகமே கொண்டாடும் ஒரு படைப்பாளியாக இருக்கிறார் என்பதே.
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிறைவான நாளை நமக்காக உருவாக்கி பெரும் பணியைச் செய்தவர் கல்லூரி முதல்வரும் உயர்கல்வி இணை இயக்குநருமான முனைவர் இராமன் அவர்கள். அவருக்கு நம்முடைய மனமார்ந்த பாராட்டுகளும் அன்பும். அவருக்கு உறுதுணையாக தமிழ் மற்றும் ஆங்கிலத் துறைப் பேராசிரியர் குழுவினருக்கும் நன்றியும் அன்பும்.
நூலைத் தொகுத்த பேராசிரியர் குழுவினருக்கும் அன்பும் பாராட்டுகளும். கட்டுரைக்காக என்னைத் தொடர்பு கொண்டு தொடர்ந்து உரையாடிய பேரா தோழர் இரா. மோகன வசந்தன் அவர்களுக்கு நிறைய அன்பும் நன்றியும்.








Comments are closed, but trackbacks and pingbacks are open.