இன்னும் மூன்று நாட்கள்தான் … இது நம்ம ஊர் திருவிழா !
திருச்சி – மத்திய பேருந்து நிலையம் அருகே, வெஸ்ட்ரி பள்ளி மைதானத்தில் பிப்-14 ஆம் தொடங்கிய திருச்சி புத்தகத் திருவிழா, எதிர்வரும் பிப்-22 ஞாயிற்றுக்கிழமையுடன் நிறைவடைகிறது.
தினமும் காலை 10 மணி முதலை இரவு 9 மணி வரையில் புத்தகக்காட்சி நடைபெறுகிறது. தமிழகம் முழுவதிலுமிருந்தும் நூற்றுக்கணக்கான புத்தக பதிப்பகத்தார்கள் இப்புத்தகக்காட்சியில் பங்கு பெற்றிருக்கிறார்கள்.
பதிப்புத்துறையில் நீண்ட பாரம்பரியம் கொண்ட பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனம், நேஷனல் புக் டிரஸ்ட் தொடங்கி, பாரதி புத்தகாலயம், விகடன், இந்து தமிழ்திசை, காலச்சுவடு, சிறுவர்களுக்கான நூல்கள், மலையாள மனோரமா உள்ளிட்டு போட்டித்தேர்வுகளுக்கான நூல்களை பதிப்பிக்கும் பதிப்பகங்கள் வரையில் பல்வேறு தளங்களில் இயங்கும் பதிப்பகங்கள் பங்கேற்றிருக்கிறார்கள். நமது ”அங்குசம் வெளியீடு” முதல் முறையாக, இந்தப் புத்தகக்காட்சியில் இடம்பெற்றிருக்கிறது. அரங்கு எண்: 66 இல் அங்குசம் வெளியீடு அமைந்திருக்கிறது.
தமிழகத்தில் பரவலான வரவேற்பை பெற்றிருக்கும் சென்னை புத்தகக்காட்சியை முன்மாதிரியாகக் கொண்டுதான், மாவட்டம் தோறும் இதுபோன்ற புத்தகத் திருவிழாக்களை நடத்தி வருகிறார்கள். இந்த முறை, தேர்தல் தொடர்பான அறிவிப்பு எப்போதும் வெளியாகலாம் என்ற நிலையில், தேர்தல் அறிவிப்புக்கு முன்னதாகவே, இப்புத்தகத்திருவிழாவை நடத்தி முடித்துவிட வேண்டுமென்ற நோக்கில், மாணவர்களுக்கான தேர்வுகாலத்தில், போதுமான விளம்பரங்கள், முன் அறிவிப்புகள் இன்றி நடத்துகிறார்கள் என்ற குற்றச்சாட்டை திருச்சி மாவட்ட எழுத்தாளர்கள் பலரும் சுட்டிக்காட்டியிருக்கிறார்கள். மேலும், புத்தகக்காட்சியில் பங்கு பெற்றிருக்கும் பதிப்பகத்தார்களுக்கும் போதுமான முன்ஏற்பாடு, குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசியமான ஏற்பாடுகளைக்கூட மாவட்ட நிர்வாகம் முறையாக செய்துதரவில்லை என்ற குற்றச்சாட்டையும் முன்வைத்திருக்கிறார்கள். மிகக்குறிப்பாக, போதுமான விளம்பரங்கள் இன்றி அவசரகதியில் ஏற்பாடு செய்யப்பட்டு நடத்தப்படும் நிலை காரணமாக, போதுமான வியாபாரம் இன்றி பதிப்பகத்தார்கள் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் இப்போதே புலம்பத் தொடங்கிவிட்டார்கள்.
இந்த குற்றச்சாட்டுகள் ஒருபுறமிருக்க, திருச்சி மாவட்ட வாசகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த புத்தகத் திருவிழா, இறுதி கட்டத்துக்கு வந்துவிட்டது. இன்றுடன் சேர்த்து மூன்று நாட்களே (பிப்-20,21,22) மிச்சம் இருக்கின்றன. பொதுவாக, வார நாட்களில் மாலை நேரங்களில் மட்டுமே இயங்கி வந்த புத்தகத் திருவிழா தற்போது, எல்லா நாட்களிலும் முழு நேரமும் இயங்கி வருவது வரவேற்பை பெற்றிருக்கிறது.
மாவட்ட நிர்வாகத்தின் முன் ஏற்பாட்டு குறைகளை தொடர்ந்து சுட்டிக்காட்டி அவற்றை சரிசெய்வதற்கான போராட்டம் ஒருபக்கம் நிகழ்ந்தாலும், இது நம்ம ஊர் திருவிழா. இது நமக்கான புத்தகத்திருவிழா. குழந்தைகளோடும் குடும்பத்தோடும் புத்தகத் திருவிழாவில் பங்கேற்க கிளம்பிவிட்டீர்கள்தானே?
— அங்குசம் செய்தியாளர் குழு.








Comments are closed, but trackbacks and pingbacks are open.