திருச்சிக்கு பெருமை சோ்க்கும் கலைஞா் ஒருங்கிணைந்த புதிய பேருந்து நிலையம் !
திருச்சி மக்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் பஞ்சப்பூர் பேருந்து முனையம் திறப்புவிழா காண இருக்கிறது. கடந்த 2021-ம் ஆண்டு டிசம்பர் 30-ந் தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டி னார். இதை தொடர்ந்து பணிகள் மும்முரமாக நடந்து வந்த நிலையில், 2025 மே 9 ஆம் தேதி புதிய பேருந்து முனையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க இருக்கிறார்.
பஞ்சப்பூரில் திறக்கப்பட உள்ள பேருந்து நிலையம் கலைஞர் பெயரிலும், கனரக வாகன முனையம் அறிஞர் அண்ணா பெயரிலும், புதிதாக கட்டப்பட உள்ள மார்க்கெட் தந்தை பெரியார் பெயரிலும் திறக்கப்பட உள்ளது. மேலும் சென்னை கத்திப்பாராவில் உள்ளது போன்ற பிரம்மாண்ட பாலம் ஒன்று பஞ்சப்பூரில் அமைக்கப்படும். ஐடி பார்க்கிற்கான பணிகள் நடந்து வருகிறது. அடுத்த 5 ஆண்டுகளில் திருச்சி மாவட்டம் மிகப்பெரிய வளர்ச்சி அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. 40 ஏக்கர் பரப்பளவில் நவீன வசதிகளுடன் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் 246 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ளது. இந்த பேருந்து நிலையம் ஒரு நாளைக்கு சுமார் 3 ஆயிரத்து 200 பேருந்துகளை கையாளும் திறன் கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது.
மேல் தளத்தில் நகர பஸ்கள், கீழ் தளத்தில் விரைவு பஸ்கள் இயக்கப்பட உள்ளன. ஒரு மணி, 2 மணி நேரம் நிற்கக் கூடிய பஸ்களுக்கு தனியாக இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. எஎக்ஸ்பிரஸ் பஸ்களுக்கும் தனியாக இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. மொத்தம் 401 பேருந்துகள் ஒரே நிறுத்த வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதன்படி, நகர பேருந்துகளில் 56 இடங்களும், வெளியூர் பேருந்துகள் நிறுத்த 141 இடங்களும், மற்ற பேருந்துகள் வந்து செல்ல 120 இடங்களும் அமைக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி, பார்க்கிங் வசதிக்காக 1,935 இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் இடமும், 216 கார்கள் நிறுத்தவும், 100 ஆட்டோக்கள் நிறுத்தவும் வசதி அமைக்கப்பட்டுள்ளது.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
பேருந்து நிறுத்தும் தளம், பயணிகளுக்கான காத்திருப்பு அறை, தாய்மார்களுக்கான பாலூட்டும் அறை, கழிவறை வசதிகள் மேலும் பயணிகள் பயன்படுத்தும் வகையில் மின் தூக்கிகள் மற்றும் நகரும் படிக்கட்டுகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. மேலும், மாற்றுத்திறனாளிகள் பயணிக்கும் வகையில் பிரத்யேக தடங்கள் புல்வெளி பரப்புகள் மற்றும் ஒளிரும் போக்குவரத்து எச்சரிக்கை பலகைகள் மற்றும் ஆம்னி தனியார் பேருந்து நிலையம் உள்ளிட்டவைகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. பயணிகள் வசதிக்காக கடைகள், உணவகங்கள் மற்றும் ஓய்வெடுக்கும் இடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.