சிபிஐக்கு மாறி ஏழு வருஷமாச்சு ! ஜவ்வாக இழுக்கும் பரிவார் டெய்ரீஸ் மோசடி வழக்கு !

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

விருதுநகர் தாலுகா அலுவலகத்தில் சுமார் 500-க்கும் மேற்பட்டோர் அங்கிருந்த அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார்கள். பின்னர் மதுரை – விருதுநகர் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தை நடத்தியிருக்கிறார்கள். இதனையடுத்து, அதிகாரிகள் அவர்களை சமாதானம் செய்ததையடுத்து கலைந்து செல்கிறார்கள்.

பரிவார் டெய்ரீஸ் மோசடி வழக்குமஞ்சள் பை சகிதமாக விருதுநகர் தாலுகா அலுவலகத்தில் குவிந்தவர்கள் அனைவரும் பரிவார் டெய்ரீஸ் அண்ட் அல்லைட் லிமிடெட் நிறுவனத்தை நம்பி முதலீடு செய்து பணத்தை இழந்தவர்கள். கடந்த பத்தாண்டுகளாக போட்ட பணம் கிடைக்காத விரக்தியில் இருந்தவர்கள். தற்போது நீதிமன்ற உத்தரவின்படி, பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்களிடமிருந்து விவரங்களை சேகரிப்பதற்காக வந்திருந்த அதிகாரிகள் தங்களது புகார்களை நீதிமன்றம் வகுத்தளித்த அவகாசத்திற்குள் வழங்கிவிட வேண்டுமென்பதற்காக படையெடுத்து வந்திருந்தார்கள். நாள் ஒன்றுக்கு இருநூறு பேருக்கான பதிவை மட்டுமே அவர்கள் மேற்கொண்ட நிலையில், எங்கே தங்களது புகாரை ஏற்க மறுத்து திருப்பியனுப்பிவிடுவார்களோ என்று அஞ்சிதான் சாலை மறியல் போராட்டத்தை நடத்தியிருக்கிறார்கள்.

உலகில் No1 ரோட்டரி இந்தியா-Vision 2030 மூலம் மாற்றும் திட்டம்-MMM முருகானந்தம் தகவல்

நியோமேக்ஸ் மோசடிக்கெல்லாம் பிதாமகன் பரிவார் டெய்ரீஸ் மோசடி !

மத்தியபிரதேசத்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வந்த கம்பெனிதான் பரிவார் டெய்ரீஸ் அண்ட் அல்லைட் லிமிடெட். 2008 இல் தனது சொந்த மாநிலமான மத்தியபிரதேசத்தில், முதல் வேட்டையை நடத்தியது பரிவார் டெய்ரீஸ். இதனைதொடர்ந்து, 2010 இல் அடுத்தகட்ட வேட்டைக்கு தமிழகத்திற்குள் கால் பதிக்கிறது. மதுரையை மையமிட்டு பல்வேறு இடங்களில் கூட்டங்களை நடத்துகிறது. பலரும் அந்நிறுவனத்தை நம்பி பணத்தை முதலீடு செய்கிறார்கள். நூறு ரூபாயிலிருந்து எவர் ஒருவரும் முதலீடு செய்யலாம் என ஆசை வார்த்தை கூறி பணத்தை வசூலிக்கிறார்கள். 6.5 ஆண்டுகளில் போட்ட பணம் இரட்டிப்பாக திருப்பித்தருவதாக  வாக்குறுதியளிக்கிறார்கள்.

2025 ANGUSAM Book MAY 16 – 31 – இணையத்தில் படிக்க….

பரிவார் டெய்ரீஸ் மோசடி வழக்கு”இலட்சியங்கள் அருகில் வர … இலாபங்கள் பெருகிவர… இலட்சாதிபதியாக பரிவாரின் அருமையான திட்டம்” என்பதாக, இவர்கள் அளந்துவிட்ட மோசடி வாக்குறுதிகளை நம்பி பலரும் முதலீடு செய்திருக்கிறார்கள். மிக முக்கியமாக, எல்.ஐ.சி. நிறுவனத்தின் ஒரு அங்கம் என்பதாக கதைகட்டி பெரும் வசூல் வேட்டையை நடத்தியிருக்கிறார்கள். 2014 ஆம் ஆண்டு வரையில் எந்த சிக்கலும் இல்லாமல் கம்பெனியை நடத்தியவர்கள், 2015 இல் கடையை சாத்திவிட்டு தலைமறைவாகிவிடுகிறார்கள்.

இதேபாணியில், மத்தியபிரதேசம், தமிழகம் என நாட்டின் பல மாநிலங்களில் 1,74,000 பேர் வரையில் கைவரிசையை காட்டியிருக்கிறார்கள். சுமார் 1500 கோடிகளுக்கும் மேல் சுருட்டியிருக்கிறார்கள்.

பரிவார் டெய்ரீஸ்-க்கு எதிராக பதிவான வழக்குகள் !

தமிழகத்தில் முதன் முதலதாக, மதுரை குற்றப்பிரிவில் (64/2015) இந்நிறுவனத்திற்கு எதிராக வழக்கு பதிவாகிறது. அதனை தொடர்ந்து, விருதுநகரை சேர்ந்த சங்கரசுப்பிரமணியன் என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில்  மதுரை பொருளாதாரக்குற்றப்பிரிவில் (1/2016) அடுத்த வழக்கு பதிவாகிறது. குணசீலன் என்பவர் மதுரையை சேர்ந்த தெய்வம் என்பவரை அறிமுகம் செய்ததாகவும், நிறுவனத்தை பற்றி அவர் சொன்ன கவர்ச்சிகரமான திட்டங்களை நம்பி 30.04.2009 இல் முதலீடு செய்ததாகவும், பின்னர் தனது உறவினர்களையும் முதலீடு செய்ய வைத்ததாகவும் அந்த புகாரில் குறிப்பிடுகிறார் சங்கரசுப்பிரமணியன். மேலும், அவர் முதலீடு செய்த மூன்றே மாதத்தில் கம்பெனியின் பெயரை PDA FOUNDATION என்பதாக மாற்றியதாகவும், இதற்கு முன்னர் தனக்கு வழங்கிய பாண்டுகளை புதிய நிறுவனத்தின் பெயருக்கு மாற்றி வழங்கியதாகவும் முதிர்வுகாலம் முடிவடைந்தும் முதலீட்டுத்தொகையை திருப்பித்தராமல் ஏமாற்றியதாகவும் புகாரில் குறிப்பிடுகிறார், சங்கரசுப்பிரமணியன்.

பரிவார் டெய்ரீஸ் மோசடி வழக்குஇந்நிலையில், மதுரை பொருளாதாரக்குற்றப்பிரிவு போலீசார் வழக்கு விசாரணையை விரைந்து முடிக்கவும், நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்வதற்கு கால நிர்ணயம் செய்ய வேண்டுமென்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளுடன் பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள் தரப்பில், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர்.

நீதிமன்றத்தில் வழக்கு !

2016 ஆம் ஆண்டு முதலாகவே விசாரணையில் இருந்து  வந்த இந்த வழக்கு, 2018 இல் திருப்பத்தை கண்டது. வழக்குப்பதிவுசெய்து இரண்டு ஆண்டுகள் கடந்த நிலையிலும் பொருளாதாரக்குற்றப்பிரிவு போலீசார் ஒருவரைக்கூட கைது செய்யவில்லை என்பது உள்ளிட்டு பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள் தரப்பில் முன்வைத்த சிக்கல்களை பரிசீலித்தது. குறிப்பாக, மத்தியபிரதேசத்தை தலைமையிடமாக கொண்ட நிறுவனம் என்பதாலும், பிரதான குற்றவாளிகள் எல்லோருமே வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பதாலும், தமிழகத்தை தாண்டி நாட்டின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த இலட்சக்கணக்கானோர் பாதிப்பிற்குள்ளாகியிருக்கின்றனர் என்பதாலும்; மோசடியின் அளவும் ஆயிரம் கோடிகளை கடந்திருப்பதாலும் தமிழக போலீசாரே தொடர்ந்து இந்த வழக்கை விசாரிப்பது பொருத்தமற்றது என்ற முடிவுக்கு வந்தது சென்னை உயர்நீதிமன்றம்.

பரிவார் டெய்ரீஸ் மோசடி வழக்குஅதிலும் குறிப்பாக, மத்திய பிரதேசத்தில் இதே நிறுவனம் மோசடி செய்த விவகாரத்தை விசாரித்த மத்திய பிரதேச நீதிமன்றம் வழக்கை சிபிஐ வசம் மாற்றி உத்தரவு பிறப்பித்திருந்தது. இதனையும் கருத்திற்கொண்ட சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேசன், தமிழகத்தில் நடைபெற்று வரும் வழக்கையும் சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும் என்று 11.09.2018 இல் அதிரடி தீர்ப்பை அளித்திருக்கிறார்.

Apply for Admission

சிபிஐக்கு மாற்றம் !

இதன்படி, 29.11.2018 இல் சிபிஐ போலீசின் பொருளாதாரக்குற்றப்பிரிவு போலீசார் புதியதாக ஒரு முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்து வழக்கை விசாரித்து வருகிறார்கள். குற்றவாளிகள் பலரை கைது செய்து சிறையிலடைத்ததோடு, அந்நிறுவனம் தொடர்பான சொத்துக்களையும் சிபிஐ போலீசார் முடக்கினர். மேலும், பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள் தங்களது முதலீடு குறித்த தகவல்களை சிபிஐ போலீசாரிடம் மின்னஞ்சல் வழியாக சமர்ப்பிக்க வேண்டுமென்று, 2023 இல் ஒரு பொது அறிவிப்பை வெளியிட்டிருந்தார்கள்.

இந்நிலையில், பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள் தரப்பில் தொடுக்கப்பட்ட வழக்கு ஒன்றில், பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள் பணம் செலுத்திய அசல் சான்றிதழை சேகரிக்கவும் அவற்றை சரிபார்க்கவும் தகுதிவாய்ந்த அங்கீகரிக்கப்பட்ட அதிகாரிகளை நியமனம் செய்ய வேண்டுமென்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

பரிவார் டெய்ரீஸ் மோசடி வழக்குஇந்த நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்களிடமிருந்து சிபிஐ போலீசார் விவரங்களை சேகரித்து வருகிறார்கள். பரிவார் டெய்ரீஸ் & அல்லைட் லிமிடெட் மற்றும்/அல்லது M/s. PDA அறக்கட்டளையில் டெபாசிட் செய்து அசல் வைப்புச் சான்றிதழுடன் கடைசி தவணை கட்டண ரசீதையும் வைத்திருக்கும் நபர்கள் அல்லது முதிர்ச்சியடைந்த வைப்புச் சரண் சான்றிதழ்/ஒப்புதல் அசல் ஆவணங்களை வைத்திருப்பவர்கள் அதன் அசல் ஆவணங்களை நேரில் ஒப்படைக்க வேண்டுமென்று அறிவித்திருந்தார்கள்.

எல்லோரும் புகார் அளிக்க ஒரு வாய்ப்பு !

சென்னை, திருத்தணி, காஞ்சிபுரம், பெரம்பலூர், தஞ்சாவூர், ஈரோடு, மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம், மார்த்தாண்டம் ஆகிய 13 இடங்களிலும் எந்த இடத்தில் எந்த  தேதியில் தொடங்கி எந்த தேதி வரையில் பொதுமக்கள் தங்களது தரப்பு ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்பதை அறிவிப்பாக வெளியிட்டிருந்தார்கள். இந்த அறிவிப்பு சிபிஐ வலைத்தளத்திலும் (https://cbi.gov.in/) வெளியிடப்பட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டத்தை பொருத்தமட்டில், விருதுநகர் தாலுகா அலுவலகத்தில் மே 19 தொடங்கி மே 21 ஆம் தேதி வரையில் ஆவணங்களை சமர்ப்பிக்கலாம் என்பதாக அறிவித்திருந்த நிலையில், நாளொன்றுக்கு 200 பேரிடம் மட்டுமே ஆவணங்களை பெற்று வந்திருக்கிறார்கள் சிபிஐ போலீசார். கெடு தேதி நெருங்க, நெருங்க பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள் படையெடுக்க கிளம்பியதையடுத்து சிக்கலானது. பலரும் ஆவணங்களை சமர்ப்பிக்க முண்டியடித்தனர். ஒரே நாளில் 500-க்கும் மேற்பட்டோர் குவிந்தனர். இந்த பின்னணியிலிருந்தே தொடக்கத்தில் சுட்டிக்காட்டியிருந்த சிக்கலும் எழுந்தது. பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்களும் சாலைமறியல் போராட்டத்தை நடத்தியிருந்தனர்.

பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்களிடம் சமாதானம் பேசிய, சிபிஐ இன்ஸ்பெக்டர் தினேஷ், நீதிமன்றத்தின் கவனத்திற்கு எடுத்து சென்று மீண்டும் ஆவணங்களை பதிவு செய்யும் நடைமுறை நீட்டிக்கப்படும் என்பதாக வாக்குறுதியளித்ததையடுத்தே கலைந்து சென்றனர்.

ஏதேனும் சந்தேகமா? தயங்காமல் கேளுங்கள் !

பரிவார் டெய்ரீஸ் அண்ட் அல்லைட் லிமிடெட் மோசடி தொடர்பாக, ஏதேனும் சந்தேகம் அல்லது தெளிவு தேவைப்பட்டால், அனைத்து வேலை நாட்களிலும் காலை 10.00 மணி முதல் மாலை 5 மணி வரை சென்னை பொருளாதார குற்றப்பிரிவு, மத்திய புலனாய்வுப் பிரிவை 044-24461959 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்பதாகவும் அறிவித்திருக்கிறார்கள்.

தமிழகத்தில் நியோமேக்ஸ் மோசடி விவகாரத்தை ஒத்ததாக அமைந்திருக்கிறது, பரிவார் டெய்ரீஸ் அண்ட் அல்லைட் விவகாரம். வழக்கில் சிக்கிய இரண்டே ஆண்டுகளில் சிபிஐ வசம் மொத்த வழக்குகளும் மாற்றப்பட்ட நிலையிலும்கூட, சுளையாக எட்டாண்டுகள் ஆகியும் பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்களையும் அவர்களது முதலீட்டு தொகையையும் இறுதி செய்ய முடியாத கட்டத்திலேயே தேங்கிக்கிடக்கிறது, இந்த மோசடி வழக்கு. நல்லவேளை, நியோமேக்ஸ் மோசடி விவகாரத்தில் மோசடிக்காரர்கள் எல்லாம் தமிழகத்தை சேர்ந்தவர்களாகவே அமைந்துவிட்டனர். இல்லாவிட்டால், பரிவார் டெய்ரீஸ் அண்ட் அல்லைட் கதை போல, ஆகியிருக்கும்.

 

–           அங்குசம் புலனாய்வுக்குழு.

செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்

Leave A Reply

Your email address will not be published.