வெறும் பத்தாயிரம் சம்பளத்தில் வாழ்வை ஓட்டிவிட முடியுமா ? பரிதவிக்கும் பகுதிநேர ஆசிரியர்கள் !
பணி நிரந்தரம் இப்படிதான் இருக்கவேண்டும் என பகுதிநேர ஆசிரியர்களின் சார்பில் திட்டவட்டமான அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார், தமிழ்நாடு பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் எஸ்.செந்தில்குமார்.
அடிப்படை சம்பளம் அகவிலைப்படி அரசு சலுகைகளோடு காலமுறை சம்பளம் நிர்ணயித்து வழங்க வேண்டும்; தங்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளோடு அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“திமுக தேர்தல் வாக்குறுதி 181ன்படி முதல்வர் ஸ்டாலின் பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.
கடந்த காலங்களில் தற்காலிகமாகவும் தொகுப்பூதியத்திலும் பகுதிநேரமாகவும் பணிபுரிந்த உடற்கல்வி ஆசிரியர்கள், ஓவிய ஆசிரியர்கள், தையல் ஆசிரியர்கள், இசை ஆசிரியர்கள், கணினி ஆசிரியர்கள், தொழிற்கல்வி ஆசிரியர்கள் அனைவரும் பின்னர் காலமுறை சம்பளத்தில் பணியமர்த்தப்பட்டு பணி நிரந்தரம் செய்யப்பட்டதைப் போலவே, 2012 ஆம் ஆண்டில் அதே பாடங்களில் நியமித்து பகுதிநேர ஆசிரியர்களாக பணிபுரியும் அனைவரையும் காலமுறை சம்பளத்தில் பணியமர்த்தி பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.

அதுபோல பகுதிநேர பணியாளர்களாக தற்காலிகமாகவும், தொகுப்பூதியத்திலும், தினக்கூலி அடிப்படையிலும் அரசின் பல்வேறு துறைகளிலும் பணிபுரிந்த துப்புரவு பணியாளர்கள், மணியகாரர், தலையாரி, எழுத்தர், நூலகர் என பலர் பின்னர் காலமுறை சம்பளத்தில் பணி நிரந்தரம் செய்யப்பட்ட வரலாறு தமிழ்நாட்டில் உள்ளது.
இன்னொரு பக்கம் சிறப்பாசிரியர்களாக பணிபுரியும் உடற்கல்வி, ஓவியம், தையல், இசை, கணினி ஆசிரியர்களுக்கு வழங்கப்படுகின்ற காலமுறை சம்பளத்தில் மேற்கண்ட இதே பாடங்களில் பணிபுரியும் பகுதிநேர ஆசிரியர்களை பணி அமர்த்த வேண்டும்.
சமவேலை, சமஊதியம் என்ற விதிப்படி ஒரே கல்வித்தகுதி உடைய ஒரே பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்களை ஒரே மாதிரியான சம்பளத்தில் பணி அமர்த்த வேண்டும்.
ஆனால், பகுதிநேர ஆசிரியர்களுக்கு தொகுப்பூதியமாக 10 ஆயிரம் ரூபாய் சம்பளமாகவும், மேலும் 2,500 ரூபாய் உதவித்தொகையாகவும் என இரண்டு முறையில் தனித்தனியாக இந்த பணம் வழங்கப்படுகிறது.
மொத்தமாக 12,500 ரூபாய் சம்பளமாக வழங்கக்கேட்டும் இதுவரை வழங்க வில்லை. இதனால் ஒவ்வொரு முறையும் சம்பளம் தாமதம் ஆகிறது. எனவே, ஆசிரியர்களுக்கு சம்பளம் IFHRMS முறையில் வழங்குவதுடன் இணைத்து பகுதிநேர ஆசிரியர்களுக்கும் வழங்க வேண்டும். பணிப்பதிவேடு பராமரிக்க வேண்டும்.
2012 ஆம் ஆண்டு முதல் 14ஆண்டுகளாக தொகுப்பூதியத்தில் பணி செய்கின்ற போதும் அரசின் சலுகைகள், பணப்பலன்கள் இதுவரை கிடைக்க வில்லை. மேலும் மே மாதம் சம்பளம், போனஸ், பண்டிகை கடன் போன்றவை ஒருமுறைகூட வழங்கவில்லை.
அதுபோல மரணம் அடைந்த ஆசிரியர் குடும்பத்திற்கு நிவாரணம், வருங்கால வைப்பு நிதி, மருத்துவ காப்பீடு, பணிக்கொடை போன்றவையும் வழங்கவில்லை.
இதனால் தற்போது கிடைக்கின்ற 12,500 ரூபாயை வைத்து கொண்டு இன்றைய விலைவாசி உயர்வில் குடும்பம் நடத்த முடியவில்லை. இதனால் கல்விப் பணியில் ஈடுபட்டுள்ள 12ஆயிரம் குடும்பங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளார்கள்.
ஏழாவது ஊதியக்குழுவில் பகுதிநேர தொகுப்பூதியத்தில் உள்ளவர்களுக்கும் 30 சதவீதம் சம்பள உயர்வு உண்டு என குறிப்பிட்டு இருந்தாலும் பகுதிநேர ஆசிரியர்களுக்கு கிடைக்க வில்லை.
எட்டாவது ஊதியக்குழுவே அமுல் செய்ய உள்ள நிலையில் பகுதிநேர ஆசிரியர்களுக்கு இன்னும் அடிப்படை சம்பளத்துடன் கூடிய அகவிலைப்படி உயர்வு உள்ளிட்டவை கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வில்லை.
எனவே, தொகுப்பூதிய முறையை கைவிட்டு இனிமேல் அடிப்படை சம்பளம், அகவிலைப்படி என காலமுறை சம்பளம் நிர்ணயித்து வழங்க வேண்டும்.
அப்படி செய்தால்தான் இனி அகவிலைப்படி உயர்த்தும்போது சம்பளம் உயரும். அதனுடன் ஓய்வூதியம் உள்ளிட்ட அரசின் அனைத்து சலுகைகள், பணப்பலன்கள் உடனுக்குடன் கிடைக்கும்.
இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் சிறப்பாசிரியர்களுக்கு வழங்குகின்ற Pay Band Level 10 இன்படி ரூபாய் 20,600 என்ற அடிப்படை சம்பளத்தையே, பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்து முறைப்படுத்தி வழங்க வேண்டும்.
பணிப்பாதுகாப்பு மற்றும் வாழ்வாதாரத்தை மேம்படுத்த இதை தான் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு செய்ய வேண்டும். பல இலட்சம் மாணவர்கள் கல்வி மேம்பாட்டிற்காகவும், ஆசிரியர்களின் 14ஆண்டு பணி அனுபவத்தையும் கருத்தில் கொண்டும், 12ஆயிரம் பேர் குடும்ப நலன், எதிர்காலத்தை கவனத்தில் கொண்டு இதை கல்வி சேவையாக செய்ய வேண்டும்.

பணி நிரந்தரம் செய்வதாக திமுக தேர்தல் வாக்குறுதியில் முதல்வர் ஸ்டாலின் கொடுத்து இருப்பதால் அதற்கு அரசாணை வெளியிட வேண்டும். இதற்காக வருகின்ற சட்டசபை கூட்டத் தொடரில் அரசு கொள்கை முடிவு என பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்து சிறப்பாசிரியர்களாக பணியமர்த்த வேண்டும்.
எதிர்க்கட்சியாக திமுக இருந்தபோது வைத்து இந்த கோரிக்கையை சட்டசபையில் இப்போது திமுக ஆட்சியில் மற்ற அனைத்து கட்சிகளும் கோரிக்கை வைக்கிறது. 2021 சட்டசபை தேர்தலில் திமுக கொடுத்த பணி நிரந்தரம் வாக்குறுதியை இந்த சட்டசபை ஆட்சி காலத்திலேயே நிறைவேற்றி பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்வதுதான் முதல்வர் ஸ்டாலினுக்கு பெருமை சேர்க்கும். இல்லை என்றால் குறையாக குற்றச்சாட்டாக மாறும்.
திமுக தேர்தல் வாக்குறுதி 181ன்படி பணி நிரந்தரம் நிறைவேற்ற கோரிக்கை நேரிலும் ஈமெயிலிலும் தபாலிலும் கொடுத்து வலியுறுத்தி வருகின்றோம். பல போராட்டங்களும் நடத்தி வலியுறுத்தப்பட்டுள்ளது.
ஆனாலும், 53 மாதங்கள் முடிந்த பின்னரும் பணி நிரந்தரம் செய்ய வில்லை. ஆட்சி இன்னும் ஏழு மாதங்கள் தான் உள்ளது. அதிலும் அடுத்த சட்டமன்ற தேர்தலுக்கான விதிகள் நடைமுறைக்கு வந்துவிட்டால் அரசாணை பிறப்பிக்க இயலாது. எனவே போர்க்கால அடிப்படையில் அமைச்சரவை முடிவாக பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்து முதல்வர் ஸ்டாலின் அறிவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என்பதாக கோரிக்கைகளை முன்வைத்திருக்கிறார், தமிழ்நாடு பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் எஸ்.செந்தில்குமார்.
— அங்குசம் செய்திப்பிரிவு.
Comments are closed, but trackbacks and pingbacks are open.