பட்டா முறைகேடு : அடுத்தடுத்து உத்தரவுகள் ! விசாரணையிலிருந்து தப்பித்துவரும் தாசில்சார் !
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை, ஏலகிரி கிராமத்தைச் சேர்ந்த ஒப்பந்ததாரர் குமரேசன் என்பவருக்கு சொந்தமான, தனிப்பட்டாவில் வேறொருவரின் பெயரை சேர்த்து கூட்டுப்பட்டாவாக மாற்றியதாகவும்; பின்னர், மீண்டும் அந்த பெயர்களை நீக்கித்தர வேண்டுமென்றால், அதற்கு தனியே 20 இலட்சம் இலஞ்சம் கேட்டதாகவும் ஜோலார்பேட்டை தாசில்தார் சிவப்பிரகாசத்திற்கு எதிரான குற்றச்சாட்டு நீதிமன்ற விசாரணையில் இருந்து வந்த நிலையில், சர்ச்சைக்குரிய கூட்டுப்பட்டாவிற்கு இடைக்கால தடை விதித்திருக்கிறது, சென்னை உயர்நீதிமன்றம்.
தன்னிடம் இலஞ்சம் கேட்ட தாசில்தார் சிவப்பிரகாசத்திற்கு எதிராக, வருவாய்த்துறை அதிகாரிகளிடமும் போலீசிடமும் குமரேசன் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லாத நிலையில், கடந்த 2023 ஆம் ஆண்டு, நவம்பர் 25-ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
அந்த வழக்கு விசாரணையின்போது, அவர் மீது எஃப்.ஐ.ஆர். பதிவு செய்து வழக்கை முறையாக விசாரிக்க வேண்டுமென்று நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ” இலஞ்ச தாசில்தார் சிவப்பிரகாசத்தை பாதுகாக்கிறதா, ஜோலார்பேட்டை போலீசு? ஐகோர்ட் அதிருப்தி!” என்ற தலைப்பில் அங்குசம் செய்தி வெளியிட்டது. அங்குசம் செய்தி எதிரொலியால், தாசில்தாரும் போலீசாரும் இடமாற்றம் செய்யப்பட்டனர்.

இதற்கிடையில், தாசில்தார் சிவப்பிரகாசத்துக்கு எதிரான புகாரை வாபஸ் வாங்குமாறு அவரது தூண்டுதலின் பேரில், மின்வாரிய ஊழியர் அபுபக்கர் சித்திக் குமரேசனுக்கு கொலை மிரட்டல் விடுத்தார். அதற்கு எதிராகவும் போலீசில் குமரேசன் புகார் அளித்தார். போலீசாரோ, அபுபக்கர் சித்திக் மீது மட்டும் வழக்கை பதிவு செய்து, அவரை ஏவிய தாசில்தாரை வழக்கில் சேர்க்காமல் தவிர்த்தனர். இதனையடுத்து, மீண்டும் இதனை நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றார், குமரேசன். இந்த வழக்கில் ஒரு மாதத்திற்குள் விசாரணை நடத்தி முடிக்க வேண்டுமென்று நீதிபதி ஜெயச்சந்திரன் உத்தரவிட்டிருந்தார். அந்த உத்தரவும் ஆறு மாதங்களை கடந்தும் கிடப்பில் போடப்பட்டிருக்கிறது.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
இதுகுறித்து குமரேசன் தரப்பில் பேசியபோது, ” சம்பந்தபட்ட நிலத்தின் உரிமையாளரான என்னை விசாரிக்காமல், கோவிந்தராஜிடம் லஞ்சத்தை பெற்றுக்கொண்டு கூட்டப்பட்டாவில் இணைத்துள்ளார். பின்னர், அதை சரிசெய்ய என்னிடமே 20 இலட்சம் இலஞ்சம் கேட்டார். இதுபோன்ற வேலைகளுக்கு ஜோலார்பேட்டையைச் சேர்ந்த அபுபக்கர் சித்திக் என்பவர் புரோக்கராக செயல்படுகிறார். இப்படி தாசில்தார் சிவப்பிரகாசம் செய்த தில்லுமுல்லுகளால், பலர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.” என்கிறார், குமரேசன்.

சம்பந்தபட்ட கோவிந்தராஜிடம் பேசினோம். “எங்களுக்கு பூர்வீக சொத்து 56 செண்ட் நிலம் இருந்ததுங்க. அதில் 30 செண்ட் நிலத்தை அம்மா விற்றுவிட்டார். மீதி இருக்கும் 26 என்னுடைய பெயரில் கிரையம் செய்து வைத்தார். எனக்கு விபரம் தெரியாது. அதன்பிறகுதான், அபுபக்கர் சித்திக் என்பவரை சென்று பார்த்தேன். பிறகு கூட்டுபட்டாவாக இணைக்க வேண்டும் என்று தாசில்தார் சிவப்பிரகாசத்திடம் முறையிட்டேன்.” என்றார். “பத்திரம் ஏதும் இருக்கிறதா என்றதற்கு இருக்கிறது” என்றார். ஆனால், இதுவரை நமக்கு அனுப்பி வைக்கவில்லை.
சர்ச்சைக்குரிய தாசில்தார் சிவப்பிரகாசத்தையும் தொடர்புகொள்ள முயற்சித்தோம். நமது அழைப்பை அவர் ஏற்கவில்லை.
அடுத்தடுத்து, நீதிமன்றம் உத்தரவிட்டும் போலீசாரும், வருவாய்த்துறையினரும் தாசில்தார் சிவப்பிரகாசத்திற்கு ஆதரவு நிலை எடுத்து விவகாரத்தை கிடப்பில் ஏன் போடுகிறார்கள் என்பதுதான், இந்த விவகாரத்தில் புதிராக நீடிக்கிறது.
— மணிகண்டன்.