ஐ.நா. மருத்துவரான … மக்கள் மருத்துவர் அ.ப.ஃபரூக் அப்துல்லா !
முன்பெல்லாம் மேநிலை வகுப்பு இறுதித் தேர்வில் மாநில அளவில் முதல் மூன்று இடங்களைப் பிடிக்கும் மாணவர்களை ஊடகங்கள் பேட்டி காணும்போது, அதில் பெரும்பாலானோர் சொல்லி வைத்தாற்போல உதிர்க்கும் வாசகங்களில் ஒன்று “எதிர்காலத்தில் டாக்டர் ஆகி ஏழைகளுக்கு சிகிச்சை அளிப்பேன்” என்பது. ஆனால், அதுபோல் எத்துனை மருத்துவர்கள் பொது சேவையாற்றி வருகிறார்கள் என்பது குறித்து எந்த ஊடகமும் இதுவரை பதிவு செய்ததும் இல்லை.
இது ஒருபக்கம் இருக்க, இன்று பொதுவில் மருத்துவம் என்பதே நல்ல பணம் கொழிக்கும் தொழிலாக மாறிவிட்டது. அதிலும் குறிப்பாக அரசு மருத்துவர்களில் பெரும்பாலோர், தனியார் மருத்துவமனைகளை நோக்கி நிற்க நேரம் இல்லாமல் ஓடிக்கொண்டே இருக்கிறார்கள்.

இதற்கு மத்தியில்தான், சிவகங்கையை சேர்ந்த டாக்டர் பரூக் அப்துல்லா தனித்துவத்தோடு களத்தில் நிற்கிறார். அவர் ஒரு அரசு மருத்துவர். பணி நேரம் போக, எஞ்சிய நேரத்தில் தனியார் மருத்துவமனைகளுக்கு சென்றால், வருமானம் இரட்டிப்பாகும். ஆனாலும் அவர் அவரது ஓய்வு நேரத்தை மருத்துவம் சார்ந்த விழிப்புணர்வு கட்டுரைகளை எழுதுவதற்காக ஒதுக்குகிறார்.
அதுவும் ஒருகாலத்தில், சமஸ்கிருதம் தெரிந்திருந்தால் மட்டுமே படிக்க முடியும் என்றொரு நிலையில் இருத்தி வைக்கப்பட்டிருந்த அலோபதி மருத்துவத்தை பட்டிக்காட்டானும் புரிந்து கொள்ளும்படி அவ்வளவு எளிமையாக எழுதி வருகிறார். அவர் நீட் தேர்வு எழுதி தேர்வான மருத்துவர் அல்ல என்பதும் இங்கே அழுத்தமாக பதிவு செய்ய வேண்டியிருக்கிறது.
கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து சமூக மருத்துவ விழிப்புணர்வு, ஆசிரியப் பணி மற்றும் நோய் சிகிச்சைப் பணியை அங்கீகரிக்கும் விதமாக, ஐக்கிய நாடுகள் சபையின்
இந்திய நாட்டின் – ஐக்கிய நாடுகள் மருத்துவர்/ ஆராய்ச்சியாளர்/ மருத்துவ தன்னார்வலர் எனும் அங்கீகாரத்தை வழங்கியிருக்கிறது. பூமா கல்வி அறக்கட்டளை தாமாக முன்வந்து இவரை அடையாளம் கண்டு ஐநா சபைக்கு பரிந்துரை செய்தததன் அடிப்படையில் இந்த அங்கீகாரம் கிடைத்திருக்கிறது.
தமிழகத்தை சேர்ந்த அரசு மருத்துவர் ஒருவரின் மருத்துவ விழிப்புணர்வு பணிகளுக்குச் சர்வதேச அங்கீகாரம் கிடைத்திருப்பதன் பயனாக, மருத்துவர் பரூக் அப்துல்லா எழுதும் மருத்துவ விழிப்புணர்வுக் கட்டுரைகள் மொழிபெயர்க்கப்பட்டு ஐ.நா சபையின் சர்வதேச இணையதளங்களில் தொடர்ந்து வெளியாகவிருக்கிறது. தமிழகத்தை தாண்டி உலகம் முழுவதிலும் பல்வேறு நாட்டினரிடமும் சென்றடைய போகிறது அவரது எழுத்து. அங்குசம் சார்பில் வாழ்த்துகள் … மக்கள் மருத்துவர் அ.ப.ஃபரூக் அப்துல்லா !
— ஜெ.டி.ஆர்








Comments are closed, but trackbacks and pingbacks are open.