தில்லைநகர் காந்திபுரம் பல ஆண்டுகளாக பழுதடைந்துள்ள சாக்கடைகள்! மாநகராட்சி மேயரிடம் கோரிக்கை மனு!
தில்லைநகர் காந்திபுரம் பல வருடங்களாக பழுதடைந்துள்ள சாக்கடைகள் மாநகராட்சி மேயரிடம் கோரிக்கை மனு!
திருச்சி மாநகராட்சி கோ அபிஷேகபுரம் கோட்டம் வார்டு எண் 23 (தில்லைநகர் 5 ஆவது குறுக்குத் தெருவில்) உள்ள மக்கள் அதிகமாக குடியிருக்கும் காந்திபுரம் பகுதியில் நீண்ட வருடங்களாக உடைந்து பழுதடைந்துள்ள சாலையோர சாக்கடைகள் திருச்சி மாநகராட்சி சார்பாக தூர்வாரப்படாமலும், புதிதாக கட்டித்தரப்படாமலும் இதுநாள் வரை உள்ளது.

இதனால் சாக்கடையில் குப்பைகள் தேங்கி வீட்டிற்குள் கழிவுநீர் புகுந்து வருகிறது. குடிநீரிலும் கலக்கும் அபாயம் ஏற்படுகிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை நோய் தொற்றிற்கு ஆளாகி வருகின்றனர். பல முறை அதிகாரிகளிடமும் அப்பகுதி கவுன்சிலரிடமும் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் தற்போது வரை இல்லை.
எனவே பெரிய அளவில் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுவதற்கு முன்பாக மாநகராட்சி சார்பாக உடனடியாக போர்க்கால அடிப்படையில் சாக்கடைகள் தூர்வாரியும் புதிய சாக்கடைகள் கட்டி தரக்கோரியும் காந்திபுரம் பகுதி மக்கள் சார்பாக எமது மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மாவட்ட செயலாளர் தோழர் ஜீவா தலைமையில் திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன் மற்றும் ஆணையர் சரவணன் இருவரிடமும் கோரிக்கை மனுவாக இன்று 09.06.2025 காலை கொடுக்கப்பட்டது.

நடவடிக்கை எடுப்பதாக மேயர் அன்பழகன் உறுதியளித்தார். மேற்கண்ட நடவடிக்கைகள் உடனடியாக எடுக்காத பட்சத்தில் பாதிக்கப்பட்ட அப்பகுதி மக்களுடன் தொடர் போராட்டத்தில் ஈடுபடும் சூழல் ஏற்படும் என்பதை அக்கோரிக்கை மனுவின் வாயிலாக தெரிவித்துவிட்டு வந்தோம்.
இந்நிகழ்வில் மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மாநில செயற்குழு தோழர் லதா மாவட்ட பொருளாளர் தோழர் சரவணன், தோழர் சண்முகம், தமிழக விவசாயிகள் சங்க தலைவர் அய்யா சின்னதுரை ஆகியோர் உடனிருந்தனர்.