என்றேனும் அவரை சந்திக்கவேண்டும் எனும் ஆசை நிறைவேறுகிறதா பார்க்கலாம் !
அந்தக் குரலும் முகமும் நம் அனைவருக்கும் மிகவும் பரிச்சயம். தூர்தர்ஷன் மட்டுமே இருந்த காலம் அது. நான் அப்போது பள்ளி மாணவி. ‘World this week’ என்றொரு செய்தித் தொகுப்பை வழங்கினார் திரு. பிரணாய் ராய். அட்டகாசமான ஆங்கில உச்சரிப்போடு, அறிவார்ந்த அலசல்களைத் தந்து உலகச் செய்திகளை அறிந்துகொள்ளச் செய்தவர். அப்போது இறுதியில் அது ஒரு ‘NDTV Productions’ என்று வரும். அந்த NDTV நிறுவனத்தை உருவாக்கிய தூண் அவர். பின்னாளில் அதுவே செய்திச் சேனலாகிறது.
இன்று அதே கம்பீரக் குரல், மேற்கு வங்க வீதிகளிலும் கேரளத்தின் சாலைகளிலும் கேட்கிறது. தன் 76 ஆவது வயதில் கையில் ஒரு அலைபேசியோடு கையில் ‘Dekoder’ ஒலிவாங்கியைப் பிடித்தபடி மக்களை சந்திக்கிறார் பிரணாய். இரு மாநிலத் தேர்தல்களின்போது களத்தில் நின்று செய்திகளைத் தந்தார். இன்றைக்கு செய்தி நிறுவனங்கள் அனைத்தும் பாஜகவின் கைப்பாவைகளாக மாறிவிட்டிருக்கும்பொழுது பிரணாய் ராய் போன்ற ஒருவர் ஏ.சி. அறையில் அமர்ந்து கணிப்புகளைச் சொல்லாமல், மக்களை சந்திப்பதைப் பார்க்க மகிழ்ச்சியாக இருக்கிறது. ஊடகத் துறையின் முன்னோடி, இன்னும் சொல்லப்போனால் இந்திய தொலைக்காட்சி ஊடகத்தில் செய்திகளை தொகுத்தளித்து புகழ்பெற்ற முதல் ஊடகவியலாளர் பிரணாய் ராய். ஏன் பிரணாய் ராய் தான் உருவாக்கிய என்.டி.டி.வியில் தொடரமால் வெளியேறினார்? அது எப்பேற்பட்ட துயரம்?
தேர்தல்களுக்கும் பிரணாய் ராய்க்குமான உறவு நீண்டகாலத்தையது.
கொல்கத்தாவைச் சேர்ந்த பிரணாய் ராய் டேராடூனில் உள்ள டூன் பள்ளியில் விடுதியில் தங்கிப் படித்தார். அப்போதுதான் ராதிகாவை சந்தித்தார். அதன்பின், லண்டனில் மேற்படிப்பு படிக்க இருவருமே சென்றனர். அவர்களுடைய காதல் திருமணத்தில் முடிந்தது. லண்டனில் இருந்து மணம் முடித்த இணையர்களாக நாடு திரும்பினர் இருவரும்.
பிரணாய் ராய் நாடு திரும்பியபின், தேர்தல் கணிப்புகளில் ஆர்வம் காட்டத் தொடங்கினார். பொருளாதாரம் படித்த அவருக்கு சிறுவயதில் இருந்தே தேர்தல் கருத்துக் கணிப்புகளில் ஈடுபாடு இருந்தது. இந்தியாவில் முதல் தேர்தல் கணிப்பை வெளியிட்டவர் பிரணாய் ராய். 1977 பொதுத் தேர்தலில் பிரணாய் ராய் ஜனதா கட்சி ஆட்சியைப் பிடிக்கும் எனக் கணித்தார். அவருடய கணிப்புகள் ‘மெயின்ஸ்ட்ரீம்’ இதழில் வெளியானது. அதன்பின் ‘இந்தியா டுடே’ நிறுவனத்திற்காக தேர்தல் முடிவுகளை துல்லியமாகக் கணிக்கும் நிபுணரானார். 1984 தேர்தலில் 400 இடங்களை காங்கிரஸ் பெறும் எனக் கணித்தார்.

ராதிகா ராயும் பிரணாய் ராயும் இணைந்து என்.டி.டி.வி யை 1984ல் தொடங்கினர். தூர்தர்ஷன் அப்போது அந்நிறுவனத்திற்கு நிகழ்ச்சித் தயாரிப்புக்கான அனுமதியையும் நேரத்தையும் அளித்தது. உள்நாட்டுச் செய்திகளை வெளிநிறுவனத்திற்கு அளிக்க முதலில் தயங்கியது தூர்தர்ஷன். அப்போதைய காங்கிரஸ் அரசின் ஊதுகுழலாகவே செயல்பட்டது தூர்தர்ஷன். (பின்னாளில் தூர்தர்ஷன், ஆல் இந்தியா ரேடியோ இரண்டையும் தன்னாட்சி அமைப்புகளாக மாற்ற வி.பி.சிங் பிரதமராக இருந்த காலத்தில் பிரசார் பாரதி கொண்டு வந்தார்.)
1989 பொதுத் தேர்தலின்போதுதான் இந்தியாவின் தேர்தல் முடிவுகளை அலசும் முதல் நிகழ்ச்சி தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. இதை பிரணாய் ராய் வெற்றிகரமாக நடத்தினார். அதன்பின் ‘World this week’ நிகழ்ச்சியை தொகுத்தளித்தார். வெள்ளி இரவு அந்த ஒரு மணி நேரச் செய்திகளே அப்போது உலகச் செய்திகளை விரிவாக அலசும் நிகழ்ச்சியாக இருந்தது. அப்போதெல்லாம் பள்ளி மாணவியாக இருந்த எனக்கு பிரணாய் ராயின் ஆங்கிலம் புரிகிறது என்பதிலேயே மிகுந்த மகிழ்ச்சி உண்டாகும். புரியாத வார்த்தைகளை அவர் சொன்னால் அதை மனதில் இருத்தி டிக்ஷனரியில் தேடிக் கண்டுபிடிப்பதுண்டு.
தூர்தர்ஷன் செய்திகளில் நாம் காட்சித் துணுக்குகளைக் காண்பதைவிட அதிக நேரம் ஷோபனா ரவி, சந்தியா ராஜகோபால் போன்ற செய்தி வாசிப்பாளர்களின் முகங்களையே அதிக நேரம் பார்க்கவேண்டி இருந்தது. டெல்லியில் இருந்து ஒளிபரப்பாகும் ஆங்கிலச் செய்திகளிலும் அப்படியே. ஆனால் வோர்ல்ட் திஸ் வீக்கில் காட்சிகள் அதிகம். அது காட்சி ஊடகவியலில் ஒரு புரட்சி எனலாம். இவ்வளவு சுவாரஸ்யமாக உலகச் செய்திகளைச் சொல்ல முடியுமா என வியப்பாக இருக்கும். இந்நிகழ்ச்சியின் வெற்றியை அடுத்து உள்நாட்டுச் செய்திகளை வழங்க என்.டிடி.வியை ஒப்பந்தம் செய்ய முன்வந்தது தூர்தஷன். ‘The News tonight’, News hour’, ‘Good morning India’ போன்ற நிகழ்ச்சிகளை வெற்றிகரமாக நடத்தியது என்.டி.டி.வி.
ஸ்டார் டிவி இந்தியாவில் பிரபலமானபோது அதனுடன் ஒப்பந்தம் ஏற்பட்டு என்.டி.டி.வி சுதந்திரமான சேட்டலைட் சேனலாக உருமாறியது.
அப்போது தூர்தர்ஷனின் தலைமை இயக்குநராக இருந்தவர் பதவி விலகி ஸ்டார் டிவியில் இணைந்தார். தூர்தர்ஷனில் பணியாற்றுகையில் என்.டி.டி.விக்கு அவர் சலுகை காட்டியதாகக் கூறி ஒன்றிய அரசு அவர் மீதும் பிரணாய் ராய் மீதும் வழக்கு தொடர்ந்தது. அந்த வழக்கின் தீர்ப்பு 2013ல்தான் வந்தது. எந்தத் தவறும் நடக்கவில்லை எனக்கூறி பிரணாய் ராய் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
ஸ்டார் டிவியுடனான ஒப்பந்தம் 2003 இல் முடிந்தது. NDTV (24×7), NDTV India என இரு சுதந்திரமான சேனல்கள் உருவாகின. குஜராத் வன்முறைகளில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் படு_லை செய்யப்பட்டபோது, என்.டி.டி.வி துணிந்து உண்மைகளை உலகுக்குக் காட்டியது. அப்போதைய குஜராத் முதல்வர் நரேந்திர மோ_டிக்கு இது எப்படி உவப்பானதாக இருக்கும்?
பிரணாய் ராயின் இல்லத்தில் சி.பி.ஐ. சோதனையிட்டது. பின்னர் SEBI மூலமாக வந்தது அடுத்த வினை. 2008இல் வாங்கிய ஒரு கடனுக்காக பிரணாய் ராயையும் ராதிகா ராயையும் என்.டி.டிவியின் இணை தலைவர்கள் பொறுப்பில் இருந்து 2 ஆண்டுகளுக்கு விடுவித்தது. அதன்பின் அவர்களுக்கு 27 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
உச்ச நீதிமன்றம் சென்றபின் அவ்வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.
ஆனால் சிக்கல் வேறு ரூபத்தில் வந்தது. 2008 இல் பிரணாய் ராயும் ராதிகா ராயும் விஷ்வப்ரதான் கமர்ஷியல் நிறுவனத்திடம் இருந்து கடன் பெற்றிருந்தனர். பின்னாளில் அந்நிறுவனத்தை அதானி வாங்கிவிட அதானிக்கு கடன் கொடுக்கவேண்டியவராக ராய் மாற, இந்தக் கடனுக்காக, என்.டி..டி.வியின் பங்குகளை அதானி பெறுகிறார். 64.72℅ பங்குகள் அதானிவசம் வந்தபின் அது பாஜக புகழ் பாடவேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது
இதற்கு உடன்படாத பிரணாய் ராய் வேறு வழியின்றி என்.டி.டி.வி இயக்குநர் பொறுப்பில் இருந்து பதவி விலகினார். ராதிகா ராய், உடன் மேலும் நான்கு இயக்குநர்களும் அங்கிருந்து விலகினர்.
செய்தி சேனல்கள் அதிகரித்துவிட்ட பின்னும், பிரணாய் ராய் இருந்தவரை தனக்கான தனித்தன்மையை NDTV தக்கவைத்திருந்தது. ஊடகவியலின் முன்னோடியான பிரணாய் ராய் தன் கனவு நிறுவனமாக உருவாக்கிய என்.டி.டிவியை விட்டு வெளியேறி அது சங்கிகளின் ஊதுகுழலாக தன் கண் முன்னால் மாறி நிற்பதைக் காணும் கெடுவாய்ப்பைப் பெற்றார் என்பது அவலத்திலும் அவலம்.
” I am resigning owing to the change in ownersip of the Company. There are no other material reasons for my resignation ” எனக் குறிப்பிடுகிறார் பிரணாய் ராய்.
ஆடின காலும்.பாடின வாயும் சும்மா இருப்பதில்லைதானே? இக்கூற்று கலைக்கு மட்டும் பொருந்துவதல்ல. அழகியலும் நேர்மையும் கொண்டதாக அமைந்த அவருடைய ஊடக வாழ்க்கையயும் அப்படித்தான். எத்தனை வயதானாலும் ஓர் ஊடகவியலாளரின் மனம் செய்திகளின் பின்னால் அலைந்துகொண்டிருக்கும்.
தேர்தல்களையும் பிரணாயையும் பிரிக்க முடியாது.
பெரும் நிறுவனத்தின் ஆணிவேராக இருந்து அதை வளர்த்து பிரம்மாண்டமாக்கி அது கைவிட்டுப்போன பின்னும் சோர்ந்து விடவில்லை. அவர் தொடங்கி இருக்கும் ‘Dekoder’ நிறுவனத்தின் சமூக ஊடகப் பக்கங்களில் உள்ள வீடியோக்களைப் பார்க்கும்பொழுது ஒன்று விளங்குகிறது. மேன்மக்கள் மேன்மக்களே.
நான் ‘World this week’ நிகழ்ச்சியில் என் பள்ளிப் பருவத்தில் அவரை எந்த உற்சாகத்துடன் பார்த்தேனோ அதே உற்சாகத்துடன் இப்போதும் இருக்கிறார். வீடுதோறும் சென்று மக்களை சந்நிக்கிறார். இப்போதுதான் பணியில் சேர்ந்திருக்கும் ஒர் இளைஞனைப் போல அவர் மக்களை சந்தித்து உற்சாகமாக உரையாடுகையில் இன்னமும் நேர்மையாளர்கள் ஊடகவியலில் மிச்சமிருக்கிறார்கள் எனும் நம்பிக்கையின் ஓளிக்கீற்று மனதில் தோன்றுகிறது.
ப்ரியத்திற்குரிய Uma Sudhir , பிரணாய் ராய் இருவரும் தமிழ்நாட்டில் தேர்தல் பரப்புரைகள் பற்றி தொகுதி நிலவரம் பற்றி ஒவ்வோர் ஊருக்கும் சென்று Dekoder க்காக செய்திகளை வழங்குகிறார்கள். விஜயின் திருப்பள்ளியெழுச்சி முதல் உறங்கச் செல்வது வரை விடாது தொடர் நேரலை செய்யும் தமிழ் ஊடகங்கள் கூட கரூரில் கொல்லப்பட்டவர்களின் வீடுகளுக்குச் சென்று பேசி தேர்தலில் அவர்களுடைய மனநிலையைச் சொல்லவில்லை. Dekoder அதைச் செய்திருக்கிறது.
மேற்கு வங்கத்திலும் கேரளத்திலும் தேர்தல் நேர களச் சந்திப்புகளை முடித்துவிட்டு தமிழ்நாட்டிற்கு வந்திருக்கிறாத் பிரணாய். அவருடைய வரவு நல்வரவாகட்டும்.
ஓர் ஊடகவியலாளராக இருந்து சிலருடைய பணிகளைப் பார்க்கும்போதும் மனம் நிறையும். அப்படி பிரணாய் ராயை களத்தில் பார்க்கையில் மனம் நிறைகிறது. என்றேனும் அவரை சந்திக்கவேண்டும் எனும் ஆசை இருக்கிறது. நிறைவேறுகிறதா பார்க்கலாம்.
Welcome to Tamil Nadu dear Prannoy Roy! You are an iconic media personality and pioneer in the field! A true inspiration to the youngsters! Keep inspiring!
Learnt a lot from you! Hats off to you!
— கவின்மலர் – பத்திரிகையாளர்








Comments are closed, but trackbacks and pingbacks are open.