வினையை விதைத்தது போதும் … இனியாவது தினையை விதையுங்கள் … தமிழ்க்குடி தாங்கி மாறுங்கள் !
முன்னாள் சமூகநீதி போராளி மருத்துவர் ஐயா இராமதாசு அவர்களுக்கு,
அரசியல் களத்தில் மகனின் செயல்பாடுகளால், அகவை முதிர்ந்த தள்ளாத வயதில், மகனை எதிர்த்து தீவிர அரசியலுக்குத் தள்ளப்பட்டிருக்கின்றீர்கள். ஒருகாலத்தில், பாட்டாளி மக்கள் கட்சி என்ற அரசியல் இயக்கத்தை அமைத்து, பிற்படுத்தப்பட்டோரில், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் என்னும் உள்ஒதுக்கீட்டைப் பெற்று சமூகநீதிப் பேராளியாக தமிழகத்தில் தலைநிமிர்ந்து நின்றீர்கள். அப்போது, அரசியல் கட்சிகளும் உங்களை அண்ணாந்து பார்த்து வியந்தன.
கட்சி தொடங்கிய காலத்தில் பொருளியல் மேதை காரல்மார்க்ஸ், அண்ணல் அம்பேத்கர், தந்தை பெரியார் உருவங்களைக் கட்சி பதாகைகளில் பொறித்தும், அவர்களின் கொள்கைகளை நெஞ்சில் ஏந்தியும் வலம் வந்தீர்கள். தமிழகத்தின் வடமாவட்டங்களில் வன்னியர் Vs பறையர் சாதிய மோதல் மிகுந்திருந்த காலங்களில் நீங்கள் விசிக திருமாவளவனோடு கரம் கோர்த்து செயல்பட்டீர்கள். இறந்துபோன தாழ்த்தப்பட்டவரின் உடலை தெரு வழியே எடுத்து செல்ல, தடுத்தபோது நீங்களும் திருமாவும் உடலை சுமந்து சென்று பெரும் சாதிய மோதலை தடுத்து நிறுத்தினீர்கள். இதன்பொருட்டு, திருமா உங்களைத் ‘தமிழ்க்குடிதாங்கி’ என்று அடைமொழியிட்டு அழைத்தபோது, தமிழகம் உங்கள் இருவரையும் கொண்டாடியது.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் பாமக போட்டியிடுவது என்று முடிவெடுக்கப்பட்டபோது, கட்சியின் பதவியில் நானோ, என் குடும்பத்தாரோ இருந்தால் சவுக்கால் அடியுங்கள் என்று அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நீங்கள்தான், மகனை மக்களவை, மாநிலங்களவை உறுப்பினராக, அமைச்சர் ஆக்கியும் அழகு பார்த்தீர்கள். உங்களுக்கும் உங்கள் மகனுக்கும் ஏற்பட்ட பிணக்கும்கூட உங்கள் மகள் காந்திமதியின் மகனை, இளைஞர் அணிக்கு நியமனம் செய்தபோதுதான் ஏற்பட்டது. பின்னர் பாமக இராமதாசு அணி என்றும் அன்புமணி என்று பிரிந்த நிலையில், உங்கள் அணிக்கு மகள் காந்திமதியைச் செயல்தலைவராக ஆக்கி அழகு பார்க்கின்றீர்கள். காலம் செல்ல… செல்ல…. அரசியல் களத்தில் முரண்பாடுகளின் மொத்த உருவமாக மாறியது உங்களுக்குப் பொருத்தமாக அமையவில்லை.
பட்டியலினம் சார்ந்த இளவரசன் – வன்னியர் இனம் சார்ந்த திவ்யா காதல் திருமணத்திற்குப் பின் இளவரசன் கொலைக்குப் பின், உங்களால் சமூகம் சார்ந்த இளைஞர்களால் நடத்தப்பட்ட வெறியாட்டம், குடிசைகள் கொளுத்தப்படுவது என்பது தொடர்ந்தது. ஆணவக்கொலை தொடர்வது உங்களின் சிந்தனையின் தொடர்ச்சியாகவே அமைந்தது. 2001 மற்றும் 2006 சட்டமன்றத் தேர்தல்களில் உங்களின் தலித் எதிர்ப்பு அரசியலால் வாக்கு வங்கியும் சரிவைச் சந்தித்தது.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற இடங்கள்
1991 தனித்துப் போட்டி 1 இடம்
1996 தனித்துப் போட்டி 4 இடங்கள்
2001 அதிமுக கூட்டணி 20 இடங்கள்
2006 திமுக கூட்டணி 18 இடங்கள்
2011 திமுக கூட்டணி 3 இடங்கள்
2016 தனித்துப் போட்டி 0 இடங்கள்
2021 அதிமுக+பாஜக கூட்டணி 5
தமிழ்நாடு அளவில் தலித் அல்லாதோர் கூட்டமைப்பு என்ற ஒன்றை அமைத்து உங்களைத் தலையில் நீங்களே கொள்ளி வைத்துக்கொண்டீர்கள். தலித்துகள் ஜீன்ஸ் பேண்ட்+டி சர்ட்+கூலிங் கிளாஸ் கண்ணாடி போட்டுக் கொண்டு காதலிக்கின்றார்கள் என்று சமூகநீதிக்கு எதிராக சமூக அநீதியை முன்மொழிந்தீர்கள். உங்கள் மகன் அன்புமணி பொறுப்பில் சாதிய இளைஞர்களை ஒப்படைத்தீர்கள். அவர்களுக்கு சாதிய வெறியும் வன்மமும் முறையாக ஊட்டப்பட்ட பேரவலமும் நடைபெற்றது.
இப்போது உங்கள் கட்சி பிளவுண்டு உள்ளது. உங்கள் மகன் மூலம் தமிழ் மண்ணில் சாதிக்கு ஆதரவாக வினையை விதைத்து ….. வினையை அறுவடை செய்துவிட்டீர்கள். இனிமேலாவது சமூகநீதி சார்ந்த தினையை விதையுங்கள். தினையை அறுவடை செய்யலாம். திமுக கூட்டணியில் நீங்கள் இணைவதைத் திருமா ஏற்பாரா? என்ற கேள்விக்கு,“அரசியலில் எல்லாம் சாத்தியம்” என்று பதில் அளித்தீர்கள். திருமா பச்சைக்கொடி காட்டுவர் என்ற உங்களின் நம்பிக்கை நிறைவேற வாழ்த்துகள். வட மாவட்டங்களில் சாதிய மோதல்களுக்கு நீங்களும் திருமாவும் இணைந்து செயல்பட்டு, பழைய ‘தமிழ்க்குடி தாங்கி’யாகப் பிறப்பெடுக்கவேண்டும் என்றும் வாழ்த்துகிறோம்.
— ஆதவன்








Comments are closed, but trackbacks and pingbacks are open.