மாநில அளவிளான காவல் பணித்திறனாய்வு போட்டிகள் – கேடயங்களை வழங்கிய டிஜிபி சங்கர் ஜிவால் !
2025 ஆம் ஆண்டிற்கான மாநில அளவிளான காவல் பணித்திறனாய்வு போட்டிகள் இந்த ஆண்டு ஜூலை 19 ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 4 ஆம் தேதி வரை தமிழ்நாடு காவல் உயர் பயிற்சியகம் மற்றும் ஆவடி படை பயற்சி மையத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் மாநிலம் முழுவதிலிருந்தும் 11 காவல் சரகங்கள், 9 காவல் ஆணையரகங்கள் மற்றும் 4 சிறப்பு காவல் பிரிவுகளைச் சேர்ந்த 24 குழுக்கள் கலந்து கொண்டன.
101 பெண் காவல் பணியாளர்கள் உட்பட மொத்தம் 606 காவல் பணியாளர்கள் 1) அறிவியல் சார் புலனாய்வு, 2) காவல் புகைப்படக்கலை, 3) கணினி விழிப்புணர்வு, 4) காவல் ஒளிப்பதிவு (விடியோகிராபி), 5) நாச வேலை தடுப்பு சோதனை மற்றும் 6) மோப்ப நாய் போட்டி எனும் ஆறு பரந்த தலைப்புகளின் கீழ் 20 போட்டிகளில் உற்சாகமாக் கலந்து கொண்டு தங்களது அற்பணிப்பையும் திறமைகளையும் வெளிப்படுத்தினர்
இப்போட்டிகளில் 23 தங்கம், 22 வெள்ளி மற்றும் 27 வெண்கலம் ஆக மொத்தம் 72 பதக்கங்கள் மற்றும் 14 சுழற் கோப்பைகளை போட்டியாளர்கள் வென்றனர்.
இந்தப் போட்டிகளில் சென்னை மாநகர காவல்துறை பங்கேற்று அறிவியல் சார்புலனாய்வு மற்றும் காவல் ஒளிப்பதிவு பிரிவுகளில் முதலாம் இடத்திற்கான கோப்பைகளையும், காவல் புகைப்பட பிரிவில் இரண்டாம் இடத்திற்கான கோப்பை என மூன்று கோப்பைகளை வென்றது.
தமிழ் நாடு அதிதீவிர படை (கமாண்டோ படை) போட்டிகளில் சிறப்பாக பங்கேற்று நாசவேலை தடுப்பு சோதனை மற்றும் கணினி விழிப்புணர்வு பிரிவுகளில் முதலாம் இடத்திற்கான கோப்பைகளையும் மோப்ப நாய் பிரிவில் இரண்டாம் இடத்திற்கான கோப்பை என மூன்று கோப்பைகளை வென்றது குறிப்பிடத்தக்கது.
குற்றப் புலனாய்வுதுறை போலிசார், அறிவியல் சார் புலனாய்வு பிரிவு மற்றும் காவல் ஒளிப்பதிவு பிரிவில் இரண்டாம் இடத்திற்கான கோப்பைகளை வென்றனர்.
மதுரை மாநகர காவல்துறை மோப்ப நாய் பிரிவில் முதல் இடத்திற்கான கோப்பையும் ஆறிவியல் சார் புலனாய்வு போட்டியில் மூன்றாம் இடத்திற்கான கோப்பையும் வென்றது.
கோயம்பத்தூர் சரகம் காவல் புகைப்பட பிரிவில் முதல் இடத்திற்கான கோப்பையை வென்றது. ஒட்டு மொத்த சிறந்த மோப்ப நாய்க்கான கோப்பையை திருநெல்வேலி சரகம் வென்றது. தாம்பரம் மற்றும் ஆவடி மாநகர காவல்துறை தலா ஒரு கோப்பைகளை வென்றது.
போட்டிகளில் வென்றவர்களுக்கு பதக்கம் வழங்கும் விழா தமிழ்நாடு காவல்துறை இயக்குநர் அலுவலக்திலுள்ள கூட்ட அரங்கத்தில் 13.08.2025 அன்று மாலை 4.30 மணிக்கு தொடங்கியது. விழாவிற்கு தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் மற்றும் தலைமை படைத்தலைவர் சங்கர் ஜிவால், இ.கா.ப. தலைமை தாங்கினார். விழாவில் முதலாவதாக காவல்துறை இயக்குநர், பயிற்சி சந்தீப் ராய் ரத்தோர். இ.கா.ப. வரவேற்புரை ஆற்றினார்.
பிறகு வெற்றி பெற்றவர்களுக்கு தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் சிறப்புரை ஆற்றி பதக்கங்கள், சான்றுகள் மற்றும் கோப்பைகளை வழங்கி கௌரவித்தார். விழாவின் நிறைவாக கூடுதல் இயக்குநர், தமிழ்நாடு காவல் உயர் பயிற்சியகம், P.C. தேன்மொழி, இ.கா.ப., நன்றியுரை தெரிவித்தார்.
2025 ஆம் ஆண்டு மாநில காவல் பணித்திறன் போட்டிகளில், தமிழ்நாடு காவல்துறையினரின் தங்களது தொழில் முறை, தொழில்நுட்பத் திறமை மற்றும் பல்வேறு காவல் பணிகளில் அசைக்க முடியாத அர்ப்பணிப்பு ஆகியவற்றை சிறப்பாக வெளிப்படுத்தினர்.