காவல்துறை குடும்பங்களை ஒருங்கிணைத்து “நம்பிக்கை” அளித்த எஸ்.பி.வருண்குமார் !
அதிரடிக்கு பெயர்போன திருச்சி மாவட்ட எஸ்.பி. வருண்குமார், காவல்துறை குடும்பங்களை ஒருங்கிணைத்து அவர்களது பிள்ளைகளுக்கான வேலைவாய்ப்புக்கான முகாம் ஒன்றை நடத்தி அசத்தியிருக்கிறார். வீடார்ட் – VDart Technologies & Private Ltd. எனும் உலகளாவிய செயல்திறன் மேலாண்மை, மென்பொருட்கள் மற்றும் சேவைகள் நிறுவனத்துடன் இணைந்து; ஜனவரி-28 அன்று திருச்சி மாவட்ட ஆயுதப்படை திருமண மண்டபத்தில் நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமை திருச்சி சரக காவல்துறை துணை தலைவர் மனோகர், இகாப., அவர்கள் துவங்கி வைத்தார்.
வீடார்ட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி (CEO) திரு. சித் அஹமத், திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.வீ.வருண்குமார். இகாப. ஆகியோரின் முன்னிலையில் நடைபெற்ற இம்முகாமில், திருச்சி மற்றும் பிற மாவட்டங்களில் பணி புரியும் காவல் அலுவலர்கள், ஆளினர்கள் மற்றும் அமைச்சுப் பணியாளர்களின் பிள்ளைகள் சான்றுகளுடன் பங்கேற்றனர்.
அந்நிறுவனத்தின் QR Code மூலம் ஒவ்வொருவரும் தங்களது படிப்பு விபரத்தினை Online மூலம் அனுப்பியுள்ளனர். இதனை அந்நிறுவனத்தினர் பரிசீலனை செய்து தகுதியான நபர்களுக்கு பணி வழங்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக தெரிவித்திருக்கிறார்கள்.
![காவல்துறை குடும்பங்களை ஒருங்கிணைத்து “நம்பிக்கை](https://angusam.com/wp-content/uploads/2024/02/காவல்துறை-குடும்பங்களை-ஒருங்கிணைத்து-நம்பிக்கை.jpg)
மேலும், தங்களது நிறுவனங்களின் செயல்பாடுகளை அறிந்து கொள்ளும் பொருட்டு. நிறுவன சுற்றுப்பயணம் (Company Tour) அழைத்துச் செல்வதற்கும்; தகுதியானவர்களை வேறு நிறுவனங்களில் பணிபுரிய பரிந்துரை செய்வதற்குமான ஏற்பாடுகளையும் செய்திருப்பதாக தெரிவித்திருக்கிறார்கள்.
கூடுமானவரையில் தொலைதூர பகுதிகளுக்குச்சென்று பணிபுரிய வேண்டிய சூழலை தவிர்த்து அவர்கள் வசிக்கும் பகுதிகளுக்கு அருகிலேயே பொருத்தமான வேலை வாய்ப்பை வழங்குவதற்கான ஏற்பாடுகளையும் செய்திருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்கள்.
குறிப்பாக, காவல்துறையில் பணிபுரியும் காவல் ஆளிநர்களின் குடும்ப பெண்கள், பட்டப்படிப்பு முடித்திருந்தும் திருமணம் – குழந்தைப்பேறு ஆகியவற்றின் காரணமாக நீண்ட இடைவெளி ஏற்பட்டிருக்கும் சூழலில் அவர்களுக்கும் பொருத்தமான பணியை வழங்குவதற்கும் ஆவண செய்திருப்பதாகவும் பேசிய எஸ்.பி. வருண்குமார், இதுபோன்ற நிகழ்ச்சிகளை இனி தொடர்ந்து நடைபெறும் என்று அறிவித்ததோடு, இந்த சீரிய முன்னெடுப்புக்கு “நம்பிக்கை” என்பதாக பெயரும் சூட்டியிருக்கிறார் அவர்.
– அங்குசம் செய்திப்பிரிவு.