எந்த அரசியல் கட்சியும் எங்களை கண்டு கொள்வதே இல்லை !
தேர்தல் காலத்தில்கூட, ஒரு சம்பிரதாய முறைக்காக கூட எங்களை எந்த அரசியல் கட்சிகளும் ஏறெடுத்துப் பார்ப்பதில்லை. எங்களது கோரிக்கைகளை செவிசாய்ப்பதுமில்லை” என்பதாக, வேதனையை தெரிவிக்கிறார்கள் தமிழ்நாடு மருத்துவர் சமூக நல சங்கத்தினர்.
“தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நேரடியான சாதிக்கொடுமைகளை இன்றளவும் எங்களது சமுதாயம் அனுபவித்து வருகிறது. கிராமப்புறங்களில் அமைந்துள்ள சலூன் கடைகளில், தாழ்த்தப்பட்ட பிரிவினருக்கு நாங்கள் முடிவெட்டினால் ஆதிக்க சாதியினர் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். ஊரை விட்டு ஒதுக்கி வைக்கிறார்கள். வேறுவழியின்றி தாழ்த்தப்பட்ட பிரிவினருக்கு முடிவெட்ட மறுத்தால், அவர்கள் வன்கொடுமை தடுப்பு சட்டப்பிரிவில் வழக்கு போடுவதாக சொல்கிறார்கள். இதுபோல பல இன்னல்களை எதிர்கொண்டு வருகிறோம். இதற்கு தீர்வாக, அரசே டாஸ்மாக் கடைகளை ஊர் விடாமல் திறந்து வைத்திருப்பது போல, ஒவ்வொரு கிராமத்திலும் அரசு சலூன் கடைகளை திறக்க முன்வர வேண்டும்.” என்பதாக கோரிக்கையை முன்வைக்கிறார், திருச்சி மாநகர் மாவட்டத்தின் செயலாளர் பி.தர்மலிங்கம்.
மேலும், “முடிதிருத்தும் தொழில்களுக்கு உரிமம் பெறுவதற்கு சாதாரண கடைகளுக்கு ரூ200 எனவும்; ஏசி கடைகளுக்கு 500 எனவும் இருந்த நிலையில், தற்போது அப்படியே நான்கு மடங்கு கட்டணத்தை உயர்த்திவிட்டார்கள். வரைமுறையில்லாமல், கார்ப்பரேட் சலூன் கடைகளை திறக்க அரசு அனுமதித்து வருவதால் எங்கள் வாழ்வாதாரம் பாதிக்கிறது. பாரம்பரியமாக மருத்துவ தொழில் செய்து வந்த எங்களது மருத்துவர் சமூகத்தை சார்ந்த பிள்ளைகளுக்கு சித்த மருத்துவ கல்லூரிகளில் குறைந்தபட்சம் மாவட்டத்துக்கு 5 பேருக்காவது இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்.
ஆண்டாண்டு காலமாக ஒரே கோவில்களில் மொட்டை அடிக்கும் தொழிலில் ஈடுபடுகிற முடி திருத்தும் தொழிலாளர்கள் இன்றுவரையில் அத்துக்கூலிகளாகவே பணியாற்றி வருகிறார்கள். அவர்களை அரசு ஊழியர்களாக அறிவிக்க வேண்டும்.” என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைக்கிறார்கள்.
இதுபோன்ற தங்களது கோரிக்கைகளை, எல்லா அரசியல் கட்சித் தலைவர்களிடத்திலும் வழங்கியும் எங்களுக்காக இதுவரையில் எந்த ஒரு அரசியல் கட்சியினரும் பேச முன்வராதது பெருத்த ஏமாற்றமும் வேதனையுமாக இருப்பதாக தெரிவிக்கிறார்கள்.
விரிவான நேர்காணலை காண
எந்த அரசியல் கட்சியும் எங்களை கண்டு கொள்வதே இல்லை ! மருத்துவர்கள் சமூக நலச்சங்கம் !
நேர்காணல் : வே.தினகரன்.








Comments are closed, but trackbacks and pingbacks are open.