6.0 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம்! 800 பேர் பலியான சோகம்!
தென்கிழக்கு ஆப்கானிஸ்தானில் 6.0 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது ஜலாலாபாத்திலிருந்து கிழக்கு மற்றும் வடகிழக்கே 27 கிலோமீட்டர் தொலைவில், 8 கிலோமீட்டர் ஆழத்தில் பதிவாகியது. அடுத்ததாக 20 நிமிடங்களுக்கு பிறகு, மற்றொரு நிலநடுக்கம் 10 கிலோமீட்டர் ஆழத்தில் 4.5 ரிக்டர் அளவில் பதிவானது.
இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் பாகிஸ்தானின் இஸ்லாமாபாத், லாகூர், பெஷாவர் மற்றும் இந்தியாவின் டெல்லி, பஞ்சாப், அரியானா, ஜம்மு காஷ்மீர், இமாச்சலப் பிரதேசம், உத்தரகாண்ட் உள்ளிட்ட வட மாநிலங்கள் மற்றும் தஜிகிஸ்தானின் சில பகுதிகளிலும் கடுமையான நில அதிர்வுகள் உணரப்பட்டன. சுமார் 5 முதல் 7 விநாடிகள் வரை பூமி அதிர்ந்ததால், பீதியடைந்த மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சம் புகுந்தனர்.
இந்த நிலநடுக்கத்தால், பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லையில் 800 பேர் பலியானதாகவும், 2500க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது. நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள், தங்கள் வீடுகளில் மின்விசிறிகள் மற்றும் நாற்காலிகள் போன்றவை பயங்கரமாக ஆடிய காணொளிகளை சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர். மேலும், தொடர்ச்சியான பின் அதிர்வுகளுக்கு வாய்ப்புள்ளதால், மக்கள் விழிப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
— மு. குபேரன்
Comments are closed, but trackbacks and pingbacks are open.