அவதூறு பரப்பும் அமைப்புகள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை! – அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர் சங்கம்
திமுக அரசால் கொண்டுவரப்பட்ட அனைத்து சாதி அர்ச்சகர் திட்டத்தின் மீது திட்டமிட்ட அவதூறு பொய்யை பரப்பும் RSS ஆர்கனைசர், தினமலர், The Commune & சங்பரிவார் அமைப்பினர் மீது உரிய நடவடிக்கை கோரி புகார் மனு
தமிழ்நாடு அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர் சங்கத்தின் தலைவர் வா. ரங்கநாதன் இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் நான் மேலே கண்ட முகவரியில் வசித்து, அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர் சங்கத் தலைவராக உள்ளேன். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில், தமிழ்நாடு அரசு நடத்தி வரும், அனைத்து சாதி அர்ச்சகர் பயிற்சிப் பள்ளியில் படித்துப் பட்டம் பெற்றவன். சமீபத்தில், பத்திரிக்கை, ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் அர்ச்சகர்கள் குறித்து வந்த செய்திகள் என்னை கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூரில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் பெரிய மாரியம்மன் கோவில் உள்ளது.
இக்கோவிலில் 28 ஆண்டுகளுக்குப் பிறகு வரும் ஜூலை 2-ம் தேதி கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது. இதற்காக கடந்த 16-ம் தேதி முகூர்த்தக்கால் நடப்பட்டு, கும்பாபிஷேகப் பணிகள் நடைபெற்று வந்தன.
இந்நிலையில், கோயில் உதவி அர்ச்சகர் கோமதி விநாயகம் (30), கும்பாபிஷேக பணிக்கு வந்துள்ள வினோத், கணேசன் ஆகியோர் சேர்ந்து கோமதி விநாயகம் குருக்கள் வீட்டில் மது அருந்திவிட்டு, ஆபாசமாக ஆடும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வெளியானது. கோயிலுக்கு வரும் சில பெண்களிடம் திருநீரை மொத்தமாக அவர்களது முகத்தில் அள்ளிப் போட்டு அத்துமீறி நடந்து கொள்வது போன்ற வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலாகி பக்தர்கள் மத்தியில் முகம் சுளிக்கும் வகையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதனையடுத்து பெரிய மாரியம்மன் கோவில் அர்ச்சகர் குருக்கள் கோமதிநாயகம் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட நிலையில், ஸ்ரீவில்லிபுத்தூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
மேற்கண்ட அர்ச்சகர்களின் செயல் கடும் கண்டனம் மற்றும் நடவடிக்கைக்குரியது . ஆனால், இப்பிரச்சனையை மடைமாற்றும் விதமாக, RSS அமைப்பின் ஆர்கனைசர் பத்திரிக்கை, The Commune & தினமலர் மற்றும் இந்து முன்னணி, பாஜக மற்றும் சங்பரிவார் அமைப்பைச் சார்ந்தவர்கள் சமூக வலைதளங்களில், குடித்துவிட்டு குத்தாட்டம் போட்ட அர்ச்சகர்கள், அனைத்து சாதி அர்ச்சகர் திட்டத்தில், சமூக நீதிப் பேசும் திமுக அரசால் நியமிக்கப்பட்டவர்கள் என்ற அப்பட்டமான பொய்யை, வதந்தியை திட்டமிட்டுப் பரப்பி வருகின்றனர்.
உண்மையில், சம்மந்தப்பட்ட அர்ச்சகர்கள், ஆர் எஸ் எஸ் – பா ஜ க – இந்து முன்னணி வலியுறுத்தும், பாரம்பரிய வழக்கப்படி, தொழில் செய்யும் குருக்கள் சமூகத்தைச் சேர்ந்த பிராமணர்கள். அவர்களது பெயர் கோமதிநாயகம், கணேசன் மற்றும் வினோத். வீடியோவில் ஆபாசமாக எல்லை மீறி குத்தாட்டம் போடும் மூன்று அர்ச்சகர்களும் தமிழ்நாடு அரசு நடத்தி வரும், அனைத்து சாதி அர்ச்சகர் பயிற்சிப் பள்ளியில் படிக்கவில்லை.
மூவரும் படித்தது, பிராமணர்கள் மட்டுமே படிக்க அனுமதி உள்ள, தூத்துக்குடி ஸ்ரீ ஆலால சுந்தர வேத சிவாகம வித்யாலயத்தில்தான். இந்த வேத பாடசாலை ஸ்தாபகர் ராஜீ பட்டர் என்பவர் ஆவார். பிராமண வேத பாடசாலையின் தலைமை ஆசிரியர் செல்வம் பட்டர் என்ற கல்யாணசுந்தர பட்டர். இந்த செல்வம் பட்டர் தூத்துக்குடி சிவன் கோயில் என்று அழைக்கப்படும் ஸ்ரீரி பாகம்பரியாள் உடனுறை சங்கர ராமேஸ்வரர் திருக்கோயில் தலைமை அர்ச்சகராக உள்ளார். இந்த செல்வம் பட்டர் அவர்கள், பிள்ளையார்பட்டி பிச்சை குருக்கள் நடத்தும் ஸ்ரீ கற்பக விநாயகர் வித்யாலயத்தில் படித்தவர்.
உண்மை இவ்வாறிருக்க, அனைத்து சாதி இந்துக்களும் அர்ச்சகர் ஆகக் கூடாதெனப் பிரச்சாரம் செய்யும், பாஜக, ஆர் எஸ் எஸ், இந்து முன்னணியினர், தமிழ்நாட்டில் உள்ள பிற்படுத்தப்பட்ட மற்றும் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த இந்துக்கள், ஆகமம் வேதம் மந்திரங்கள் கற்று, முறையாக தீட்சை பெற்றிருந்தாலும் அர்ச்சகராக ஆகக்கூடாது என்ற கண்ணோட்டத்தில் திட்டமிட்டு பொய் செய்தியை, வதந்தியை, தமிழ்நாடு அரசின் மீதும், அர்ச்சகர் பயிற்சி பள்ளியின் மீதும் பரப்பி வருகின்றனர்.
முருக பக்தர்கள் மாநாட்டில் அரசியல் பேச கூடாதென உத்தரவு பெற்றது. அனைத்து சாதி அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கம்-தமிழ்நாடு இதனாலும், அனைத்து சாதி அர்ச்சக மாணவர்களை இழிவுபடுத்த பொய்யைப் பரப்புகின்றனர்.
இந்து மதத்தைக் காக்கப் பேசும், இந்து முன்னணி, காஞ்சி மட சங்கராச்சாரியார் மீது எழுத்தாளர் அனுராதா ரமணன் பாலியல் புகார் கொடுத்தபோது, கொலை வழக்கில் சங்கராச்சாரியார் கைதானபோது மௌனம் காத்தார்கள். ஜக்கி வாசுதேவின் ஈஷா மையத்தில் மர்ம மரணங்கள், குழந்தைகள் மீது பாலியல் தாக்குதல்கள் நடந்த போது வாய் பேசவில்லை. சிதம்பரம் நடராஜர் திருக்கோயிலை தீட்சத பார்ப்பனர்கள் நட்சத்திர விடுதியாக மாற்றிய போதும் வாய் திறக்கவில்லை. ஆனால் தற்போது சாதிய வன்மத்தோடு, திமுக அரசின் அனைத்து சாதி அர்ச்சகர் திட்டத்தில், பிற்படுத்தப்பட்ட மற்றும் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் உள்ளார்கள் என்ற காரணத்தினால், பொய்யையும் அவதூறையும் திட்டமிட்டுப் பரப்பி வருகிறார்கள். இதனால், பிராமண அர்ச்சகர்கள் – எதிர் – இதர சமூக அர்ச்சகர்கள் என்ற மோதல் உருவாகும் சூழல் உருவாகியுள்ளது. இத்துடன் பொய், வதந்தி பரப்பும் குற்றமும் சேர்ந்துள்ளது.

எனவே, இந்திய அரசியல் சட்டத்தின் அடிப்படை கூறான சமத்துவ கோட்பாட்டின் அடிப்படையில் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்று கொண்டுவரப்பட்ட திட்டத்தின் மீது திமுக அரசின் மீது திட்டமிட்டு வதந்தி மற்றும் பொய்யைப் பரப்பி இரு பிரிவினர் இடையே மோதலை தூண்டும், RSS ஆர்கனைசர், the commune, தினமலர் பத்திரிக்கைளின் உரிமையாளர் மற்றும் ஆசிரியர்கள், பாஜக, இந்து முன்னணி, சங்பரிவார் அமைப்புகளை சேர்ந்த நபர்கள் மீதும், தமிழ்நாடு அரசின் மீது அவதூறுகளை பரப்புவதும், இந்து சமய அறநிலையத்துறையும் அனைத்து சாதி அர்ச்சகர் மாணவர்களையும் இழிவுபடுத்தும் இந்த கும்பலை கைது செய்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறையை கேட்டுக்கொள்கிறேன். வதந்தி, பொய் செய்திகளை சமூக வலைதளங்களில் பரப்பும் மற்ற நபர்கள் மீதும் காவல்துறை கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவா்கள் சங்கம் சார்பாக வா.ரங்கநாதன் கேட்டுக்கொண்டுள்ளார்.