திருச்சி – பெரம்பலூர் மார்க்கத்தில் … கை காட்டியும் நிற்காமல் பறந்து செல்லும் புறநகர் பேருந்துகள் !

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

பேருந்து நிறுத்தங்களில் பயணிகள் கை காட்டியும் பேருந்தை நிறுத்தி பயணிகளை ஏற்றிச்செல்ல மறுக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டு புதியவையல்ல. காலம் காலமாக அரசு பேருந்து ஓட்டுநர்களுக்கு எதிராக தொடர்ந்து முன்வைக்கப்படும் குற்றச்சாட்டாகவே நீடிக்கிறது.

எனது சொந்த அனுபவத்தில், இன்று நேற்றல்ல இரண்டு ஆண்டுகாலமாக எதிர்கொண்டு வரும் மோசமான அனுபவங்களுள் இதுவும் ஒன்று. திருச்சி – பெரம்பலூர் மார்க்கத்தில் இயக்கப்படும் புறநகர் பேருந்து சேவையில்தான் இந்த குறைபாடு.

Sri Kumaran Mini HAll Trichy

முதல் விசயம், திருச்சி – பெரம்பலூர் மார்க்கம் தொலைதூர பயணம் என்பதால், சாதாரண நகரப்பேருந்து சேவை கிடையாது. அனைத்துமே, புறநகர் பேருந்துகள்தான். அதுவும் திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் தான் பயணிக்கின்றன. இதன்காரணமாக, ஒவ்வொரு பேருந்து நிறுத்தங்களிலும் எதிர்வருவது, திருச்சி – பெரம்பலூர் மார்க்க பேருந்துதானா? என்பதை கண்டறிவதிலேயே சிக்கல் எழுகிறது.

அரசு பேருந்துசாதாரண டவுன்பஸ் என்றால், பேருந்தின் வண்ணம் வடிவமைப்பை கண்டே சற்று தொலைவில் வரும்போதே முன்கூட்டியே நிறுத்த சொல்லி கை நீட்டி விடலாம். மாறாக, சென்னை, விழுப்புரம், கடலூரிலிருந்து வரும் தொலைதூர பேருந்தா? பெரம்பலூர் – திருச்சி புறநகர் பேருந்தா? என்பதை சில அடி தூரம் நெருங்கி வரும்போதுதான் கண்டுணரவே முடிகிறது. அடுத்து, அப்போதும்கூட அது சாதாரண வகை பேருந்தா? எக்ஸ்பிரஸ் வகையா? இந்த நிறுத்தத்தில் அந்த பேருந்து நின்று செல்லுமா? என்பதை யூகித்து கை நீட்ட வேண்டியிருக்கிறது. இது ஒரு வகை சிக்கல்.

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

இதில் இன்னொரு கூத்தும் இருக்கிறது. பல நேரங்களில் பேருந்துகள் மாற்றி இயக்கப்படுகின்றன. உதாரணமாக, சாதாரண பேருந்து செல்ல வேண்டிய நேரத்தில் சாதாரண வகை பேருந்து இல்லாத நிலையில், எக்ஸ்பிரஸ் என்று ஸ்டிக்கர் ஒட்டிய பேருந்து சாதாரண பேருந்து கட்டணத்தில் இயக்கப்படுகிறது. அதுபோலவே, எக்ஸ்பிரஸ் என்று ஸ்டிக்கர் ஒட்டாத சாதாரண வகை பேருந்து எக்ஸ்பிரஸ் பேருந்தாக இயக்கப்படுகிறது. நிர்வாக வசதிக்காக இவ்வாறு இயக்கப்படுவதை குறை சொல்வதற்கில்லை. ஆனால், எதிர்வரும் பேருந்து அந்த குறிப்பான பேருந்து நிறுத்தத்தில் நின்று செல்லும் பேருந்துதானா? என்பதை அடையாளம் காணுவதில் இத்தகைய சிக்கல்கள் இருக்கின்றன என்பதற்காகவே இதனை குறிப்பிட வேண்டியதாகிறது.

புறநகர் பேருந்துகள்
புறநகர் பேருந்துகள்

எதிர்வரும் பேருந்தை கண்டறிவதிலேயே இவ்வளவு இடர்ப்பாடுகள் இருக்கும் நிலையில், பேருந்து அந்தக் குறிப்பிட்ட பேருந்து நிறுத்தத்தை கடக்கும் நேரத்தை ஓரளவு கணித்து அதற்கேற்ப கை நீட்ட தயாராக காத்திருந்தாலும், சென்டர் மீடியனை ஒட்டியவாறு மேலே ஏறி சென்று விடுகிறார்கள். குறிப்பாக, ஓட்டுநரின் கண் பார்வை பேருந்து நிறுத்தத்தையோ, பயணிகளையோ பார்ப்பதே கிடையாது. ”ஐ காண்டாக்ட்” கிடைத்துவிட்டால், பேருந்தை நிறுத்தியாக வேண்டுமென்பதற்காகவே, சென்டர் மீடியனை ஒட்டியவாறும் தலையை திருப்பிக் கொண்டும் கடந்து விடுகிறார்கள். இதை ஒரு பொது உத்தியாகவே கையாள்கிறார்கள்.

குறிப்பாக, நெடுங்கூர், அகரம் போன்ற பேருந்து நிறுத்தங்களில் காலை நேரத்தில் பேருந்துக்காக காத்திருக்கும் பயணிகளை ஓட்டுநர்கள் மதிப்பதேயில்லை. அந்த பேருந்து நிறுத்தத்தில் இறங்குவதற்கான பயணிகள் இருந்தால் மட்டுமே நிறுத்துகிறார்கள்.

Flats in Trichy for Sale

(ஜூன்-30) அன்று நிகழ்ந்ததும் இதே ரகம்தான். வெள்ளுவாடியிலிருந்து புறப்பட்டு வந்த சாதாரண வகை பேருந்து (பேருந்து எண்: 3928) அது. நெடுங்கூர் நிறுத்தத்தில் இரண்டு மாணவிகள் உள்ளிட்டு நால்வர் நின்றிருந்தார்கள். காலை 8.40 மணி. எல்லோரும் கல்லூரி, வேலைக்கு செல்லும் நேரம். அடுத்த பேருந்து 8.55 க்குதான். அதுவும் தனியார் பேருந்து. அடுத்த அரசு பேருந்து 9.10-க்குத்தான். தினசரி பேருந்து பாஸ் எடுத்துகொண்டு பயணிக்கும் என்னைப் போன்றவர்கள், 8.30 மணி முதல் பேருந்துக்காக காத்திருந்து அந்த 8.40 பேருந்து நிறுத்தாமல் சென்றுவிட்டால், அடுத்து 9.10 பேருந்தில்தான் ஏறியாக வேண்டும்.

அதுவும் நிறுத்தாமல் சென்றால், அடுத்து வரும் தனியார் பேருந்தில் கை காசை செலவு பண்ணி பயணித்தாக வேண்டும். (இதில் கொசுறு தகவல் என்னவென்றால், 8.40 மணிக்கு கடந்து செல்லும் வெள்ளுவாடி பேருந்து பல நேரங்களில் சிறப்பு சேவைக்காக திருப்பி விடப்பட்டுவிடும். அந்த பேருந்தை நம்பி காத்திருக்க முடியாது என்பது வேறு விசயம் ) இதுபோல, பலமுறை நிகழ்ந்திருக்கிறது. அதுபோன்ற சமயங்களில், அதுகுறித்த புகார் உடனடியாக பெரம்பலூர் டெப்போ மேனேஜரின் வாட்சப் எண்ணிற்கு பேருந்து எண் உள்ளிட்ட குறிப்பான ஆதாரத்துடன் தகவலும் சொல்லப்பட்டிருக்கிறது.

எனது சொந்த அனுபவத்தில், கடந்த 2023 ஆம் ஆண்டிலிருந்து இதுபோன்ற பல நேர்வுகளை எதிர்கொண்டிருக்கிறேன். ஒவ்வொரு முறையும் அடுத்த பேருந்தில் ஏறிச் சென்று சத்திரம் பேருந்து நிலையத்தில் இறங்கி நிறுத்தாமல் சென்ற அந்த குறிப்பிட்ட பேருந்தின் ஓட்டுநர் நடத்துநரிடம் விளக்கம் கேட்டிருக்கிறேன்.

அவ்வாறு கேட்கும்போது, பல்வேறு காரணங்களை சொல்வார்கள். ”பேருந்தில் கூட்டம் அதிகமாக இருந்தது” என்பார்கள். ”நீங்கள் கை காட்டியிருந்தால் நிறுத்தியிருப்பேன்” என்பார்கள். ”சரி விடுங்கள்,  நானும் பக்கத்து ஊர் காரன்தான் . அடுத்தமுறை நிறுத்திவிடுகிறேன்” என்பார்கள். ”வண்டியில் பிரேக் சிஸ்டத்தில் பிரச்சினை. சொந்த காசில்தான் ஸ்பேர் பார்ட்ஸ் வாங்கிக் கொடுத்து வருகிறோம். அதனால்தான் நிறுத்தவில்லை” என்பார்கள்.

”டிரைவர் நிப்பாட்டலைனா, என்கிட்ட ஏன் கேட்கிற அவரிடம் கேளு” என்று கோபப்பட்ட நடத்துநர்களும் இருக்கிறார்கள். ஒருமுறை, “இது சாதாரண வகை பேருந்தா? எக்ஸ்பிரஸ் வகை பேருந்தா?” என்று கேள்வி கேட்டதற்காகவே, அவர் கோபப்பட்டு நடுவழியில் பேருந்தை நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவமும் நடந்திருக்கிறது. புகார் வரை சென்று, சம்பந்தபட்ட நடத்துனரிடம் விசாரணையும் நடத்தப்பட்டிருக்கிறது. பொதுப்பிரச்சினையிலிருந்து ஒரு விசயத்தை அணுகும்போது, அதனை நடத்துநர்கள் தனிப்பட்ட பிரச்சினையாக கையாண்டுவிடுகிறார்கள் என்பதுதான் இதில் மையமான பிரச்சினையாக நீடிக்கிறது.

சம்பந்தபட்ட ஓட்டுநர் – நடத்துநருக்கு உரிய அறிவுறுத்தல்களை அதிகாரிகள் வழங்க வேண்டும். அடுத்து, திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இயக்கப்படும் புறநகர் பேருந்துகள் என்பதால், அவற்றை தனியே அடையாளம் காணும் வகையில் ஏதேனும் ஒரு பொருத்தமான ஏற்பாட்டையும் செய்ய வழிவகை செய்ய வேண்டும் என்பதே பயணிகளின் பொது கோரிக்கையாக அமைந்திருக்கிறது.

 

—              இளங்கதிர்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.