*இது மக்கள் சந்திக்க போகும் பெரிய பிரச்சினை… சொத்து அடமானம் தொடர்பாக… @ பத்திரப்பதிவுத் துறை*
உங்களிடம் ஒரு கோடி மதிப்புள்ள சொத்து உள்ளது. ஏதோ தொழில் தொடங்குவதற்காக ஒருவரிடம் அடமானம் வைத்து பத்து லட்சம் கடன் வாங்குகிறீர்கள். பின்னர் ஒரு வங்கி குறைந்த வட்டியில் இருபது லட்சம் கடன் தர முன் வருகிறது. சொத்தின் மதிப்பு ஒரு கோடி என்பதால், அதே சொத்தை மறு அடமானம் வைத்து கடனைப் பெற இயலும்.
கடனை திருப்பிச் செலுத்தாமல் சொத்து ஏலத்துக்கு போனால், பத்து லட்சம் முதலில் கடன் கொடுத்தவருக்கு கொடுத்தது போக மீதி இருந்தால் வங்கி தனது கடனை திரும்பப் பெற்றுக் கொள்ளும்.
ஒரு சொத்தினை ஒருவர் எத்தனை முறை வேண்டுமானாலும் அடமானம் வைக்கலாம். முதலில் அடமானம் கொடுத்தவரின் அனுமதி அதற்குத் தேவையில்லை என்பதுதான் சொத்துரிமை மாற்றுச் சட்டம் கூறுவது; அடிப்படை அறிவு.
போலிப் பத்திரங்களை ஒழிக்கிறேன் என்ற பெயரில் பத்திரப்பதிவு மாமனிதர்கள், ஏற்கனவே ஒரு சட்டம் கொண்டு வந்து நீதிமன்றங்களில் அடி வாங்கியது போதாது என்று மறுபடியும் ஒரு சட்டம் கொண்டு வருகிறார்களாம். ஏற்கனவே வந்த சட்டத்தை வைத்து வழக்குரைஞர்களுக்கு நல்ல வருமானம். இப்ப அடுத்த கருவாடு வருகிறது.
இவ்வாறு ஒரு வங்கி மறு அடமானத்தில் கடன் தர முன் வரும் போது, முதலில் அடமானம் பெற்றவர் தனக்கு மேலும் ஐந்து லட்சம் ரூபாய் கொடுத்தால்தான் அனுமதி கொடுப்பேன் என்றால் என்ன செய்வது?
சொத்தை மீட்பதற்கு வழக்கு தாக்கல் செய்யலாம். வழக்கு முடிவதற்கு ஐந்து ஆண்டுகள் ஆகலாம். பொதுமடா சாமி’ என்று கடன் கொடுக்க முன் வந்த வங்கி ஓடி விடும். மூலப் பத்திர அசல் இருந்தால்தான் பதிவார்களாம்.
இறந்து போன சொத்தின் உரிமையாளருக்கு இரு மகன்கள். மூத்த மகனிடம் சொத்தின் மூலப் பத்திர அசல் இருக்கிறது. மற்றவருக்கு பணம் மருத்துவச் செலவுக்கு அவசரத் தேவை. அவருடைய பிரிவுபடாத பாதிப் பங்கை விற்க நினைக்கிறார். மூத்தவரோ மூலப் பத்திரத்தை தர மறுக்கிறார். சண்டை போட்டு, புகார் அளித்து வழக்கு தாக்கல் செய்து, தன்னுடைய பாதிப் பங்கை விற்பதற்குள் அறுவை சிகிச்சைக்கு பணம் இல்லாமல் நோயாளி போய்ச் சேர்ந்திருப்பார்.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
மூலப் பத்திரமே இல்லை. வருமான வரித்துறை ஆவணமான பட்டா. இந்து கூட்டுக் குடும்பம் எனில் எந்த உறுப்பினர் பெயரிலும் இருக்கலாம். கூட்டுக் குடும்ப உறுப்பினர்களிடையே பாகப் பிரிவினை வழக்கு நடைபெறுகிறது. முழுவதும் முடிவதற்கு எப்படியும் பதினைந்து வருடம் ஆகும். கூட்டுக் குடும்ப உறுப்பினராக இருக்கும் மற்றவர் மகளின் படிப்புச் செலவுக்கு பணம் தேவைப்பட்டால், அவரது பிரிவுபடாத பங்கினை எப்படி விற்பது?
மகளை கல்லூரிக்கு அனுப்பாமல், கலியாணம் செய்து கொடுப்பதுதான் வழி என்றால், அதற்கும் பணம் தேவைப்படுகிறது.
சொத்தினை விற்பதற்கு ஒப்பந்தம் செய்கிறீர்கள். ஏற்றுக் கொண்ட தேதியில் மற்றவர் பணம் தரவில்லை. வேறு ஒருவர் சொத்தினை வாங்க முன் வருகிறார். ஒப்பந்தத்தை ரத்து செய்கிறீர்கள். ரத்து செய்தது செல்லாது என்று மற்றவர் வழக்கு போட மூன்று வருட கால அவகாசம் இருக்கிறது. அதுவரை சொத்தினை விற்க முடியாது. அடடா!
முதலில் சொத்து விற்பனை ஒப்பந்த வழக்கு தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் குறித்து வழக்குரைஞர்களுக்கே குழப்பம் இருக்கும். அது குறித்து ஒரு சப் ரிஜிஸ்டிரார் அசால்டாக தீர்ப்பு கூறுவார். சமீபத்திய உயர் நீதிமன்ற தீர்ப்பில் ‘இப்படி சொத்தை விற்பதற்கான உரிமை குறித்து தீர்ப்பு எழுத நினைத்தால், சார் பதிவாளர் தனது வேலையை ராஜினாமா செய்து விட்டு உரிமையியல் நீதிபதிகளுக்கான தேர்வு எழுதி பதவிக்கு வந்து பிறகு செய்யட்டும்’ என்று வெறுப்பில் ஒரு நீதிபதி ஆலோசனை கொடுத்துள்ளார்.
மாநில ஆளுநர் எப்படி ஒரு போஸ்ட் மேனோ சார் பதிவாளர் அப்படி ஒரு போஸ்ட் மாஸ்டர் அவ்வளவுதான் அவர் அதிகாரம்.
பத்திரப் பதிவு அமைச்சரையோ, துறைத் தலைவரையோ அல்லது இப்படி ஒரு சட்டம் எழுதிய சட்டத்துறை செயலாளரையோ கூறிப் பயனில்லை. பத்திரப் பதிவு சட்டம் என்ன நோக்கத்தில் இயற்றப்பட்டுள்ளது என்ற புரிதல் பல நீதிபதிகளுக்கே இருப்பதில்லை.
போலிப் பத்திரங்களுக்கும் பத்திரப் பதிவுக்கும் சம்பந்தமில்லை. போலிப் பத்திரங்களை ஒழிக்க பதிவுத் துறைய பயன்படுத்துவது பதிவுத் துறையில் ஊழலுக்குதான் வழி வகுக்கும் என்ற புரிதலை மக்களிடம் ஏற்படுத்துவதுதான் ஒரே வழி.
‘அப்படி என்றால், இந்த நீதிமன்ற கட்டிடத்தை விற்பதாக ஒருவர் பத்திரம் எழுதினால், அதையும் பதிவு செய்யச் சொல்வீர்களா?’
பல வருடங்களுக்கு முன்னர் என்னிடம் ஒரு நீதிபதி கேட்டார்.
‘ஆம்’ என்றேன்
‘உயர்நீதிமன்றத்தை விற்பதாக ஒரு பத்திரம் எழுதி ரகசியமாக வைத்துக் கொள்வது நல்லதா, நான் இப்படி ஒரு பத்திரம் எழுதியிருக்கிறேன் என்று உலகத்திற்குச் சொல்வதா, எது சிறந்தது’ என்றேன்.
பதிவுச் சட்டத்தின் நோக்கமும் அதுதான். சரியோ தவறோ எதைச் செய்தாலும், உலகம் முழுக்க அறிய தெரியப்படுத்துவதுதான் அந்த நோக்கம்.
அந்தப் படிப்பினையை மக்கள், அரசு அலுவலகங்கள், வங்கி நிறுவனங்களிடம் கொண்டு சேர்க்கும் பணிதான் முக்கியம்.
— பிரபு ராஜதுரை.
அமைச்சர்கள் எம்எல்ஏக்கள் உயர் பொறுப்புகளில் உள்ள அரசு அதிகாரிகள் ஆகியோர் தாங்கள் கொள்ளை அடித்த பணத்தை வைத்துக்கொண்டு பினாமி பெயரில் சொத்துக்களை வாங்கி அதன் அசல் பத்திரத்தை ரகசியமாக வைத்துக் கொள்வர். பத்திரம் பதிய அசல் பத்திரம் தேவை இல்லை என இருந்தால், சொத்து உண்மையில் யார் பெயரில் உள்ளதோ அந்த பினாமி அசல் பத்திரம் இல்லாமலேயே சொத்தை கிரயம் செய்ய முடியும். எனவே அதை தடுக்கவே இவ்வாறு நடைபெறுகிறது. இதில் பொது மக்களுக்கு எந்த நலனும் இல்லை.